NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஏ.எஸ்., தேர்வை இனி தமிழில் எழுத முடியாது!



           ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாதவாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.


              கிராமப்புற மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது இனி வெறும் கனவாகவே போய்விடக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பாணையில் ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

           முதன்மைப் பாடத்தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே, அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது ஹிந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகக் குறையும் என கூறப்படுகிறது.

              அதோடு, தமிழ் இலக்கியத்தை, தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே விருப்பப்பாடமாகத் தேர்வு செய்ய முடியும் எனவும் மற்றொரு விதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்துதான் படித்து வருகின்றனர். அவர்கள் இந்தத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சியும் பெற்று வருகின்றனர்.

             2009-ல் 622 பேரும், 2010-ல் 561 பேரும் தமிழில் தேர்வு எழுதினர். கடந்த 5, 6 ஆண்டுகளில் மட்டும் தமிழில் தேர்வு எழுதிய 10-க்கும் மேற்பட்டவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் முதல் கட்டத் தேர்வுக்குப் பிறகு நடைபெறும் பிரதான தேர்வை தமிழகத்தில் 300 முதல் 600 பேர் வரை எழுதுகின்றனர்.

            பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற புதிய விதியால் ஓரிரு மாணவர்கள் மட்டுமே பிரதான தேர்வை தமிழில் எழுதும் தகுதியைப் பெறுவர். எனவே 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை எட்டவே முடியாது. ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் படித்த மாணவர்களுக்கு இந்தத் தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் தெரிவித்தனர். இந்தப் புதிய விதிகள் மறைமுகமான ஹிந்தி திணிப்பே என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் இதுகுறித்து மேலும் கூறியது:
பட்டப்படிப்புகளில் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற தொழில் படிப்பு முடித்த மாணவர்கள் தமிழில் தேர்வே எழுத முடியாது. பி.ஏ., பி.எஸ்சி., போன்ற படிப்புகளும் மிக அரிதாகவே தமிழ் வழியில் வழங்கப்படுகின்றன. எனவே, கிராமப்புற மாணவர்கள் இனி தமிழ் வழியில் தேர்வு எழுத முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

             ஆங்கில வழிப் படிப்புகளில் தேர்ச்சிப் பெறுவதற்கு பெரிய அளவில் ஆங்கிலப் புலமை தேவையில்லை. ஆனால், இந்தியாவில் முதல் 100 பேரில் ஒருவராக வருவதற்கு மேம்பட்ட ஆங்கிலப் புலமை நிச்சயம் தேவை. எனவே, இந்தப் புதிய திருத்தங்கள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராகவே உள்ளதாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வரும் கோவை மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

                வரலாறு, புவியியல் போன்ற விருப்பப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்துக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

            இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பதிலிருந்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுகமாக ஹிந்தி திணிப்பில் ஈடுபடுவதாகவும் சில தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.
நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமானது: இந்தப் புதிய விதிகள் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆகும் வகையில் உள்ளதாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் இயக்குநர் சங்கர் தெரிவித்தார்.

             முதன்மைத் தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் 1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொதுப் பாடங்கள் 2 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளது.

              தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழில் எழுத முடியும். தமிழில் எழுத முடியுமா என்று தெரிந்துகொள்ள அவர்கள் காத்திருக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அந்த மாநில மொழியில் தேர்வு எழுத முடியுமா, இல்லையா என்பது தெரியவரும். அதேபோல், தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிப்பதையும் தடுக்கும் வகையில் புதிய விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் கிராமப்புற,ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார் அவர்.

              பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத 25 பேர் என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையை நீக்க வேண்டும், ஏற்கெனவே இருந்தவாறு பட்டப்படிப்பை எந்தமொழி வழியாக படித்திருந்தாலும் அவர்களை தமிழ் வழியில் எழுத அனுமதிக்க வேண்டும், தமிழ் இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் கோருகின்றனர்.

             மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. முதல் கட்டத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) அப்ஜெக்டிவ் டைப் வினாக்களாக இருக்கும். அதாவது சரியான விடையைத் தேர்வு செய்யும் வடிவில் இருக்கும். பிரதான தேர்வு முழுவதும் கட்டுரை வடிவில் இருக்கும்.

                   இந்தக் கட்டுரை வடிவிலான தேர்வுக்கான வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும். ஆனால், இதற்கான விடைகளை மாணவர்கள் தமிழிலோ அல்லது வேறு பிராந்திய மொழிகளிலோ அளிக்கலாம் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இப்போது அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரதான தேர்வில் 2 விருப்பப் பாடங்களுக்கு பதில் இனி ஒரு விருப்பப் பாடம் மட்டுமே இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive