குரு பகவான்  (5-7-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.04 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இன்று முதல் 1-8-2016 வரை இங்கு அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு, அனைவரும் சிரமமின்றி அவரவர் பகுதிக்கு அருகிலேயே உள்ள திருத்தலங்களுக்குச் சென்று பரிகார பூஜை, சிறப்பு வழிபாடுகள் செய்து வழிபடுவதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புத் தலங்கள், குரு பரிகாரத் தலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
1. அயப்பாக்கம்
சென்னை அயப்பாக்கம், வட குருஸ்தலம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தி. குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிக ரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

2. அகரம் கோவிந்தவாடி
காஞ்சிபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம் நிறுத்தத் தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் செல்லலாம். இத்தலத் திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். 6 அடி உயரத்தில் அமைந்துள்ள அற்புத சிலை இது. இந்தச் சிலையின் கண்கள் அமைப்பு புதிரானது. அந்த விழிகள் எவரையும் காணாதது போலவும் இருக்கும்; எல்லோரையும் காண்பது போலவும் இருக்கும். சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

3. காஞ்சிபுரம்
பெரிய காஞ்சிபுரம் ரயில்வே காலனி யில் உள்ளது யோக தட்சிணாமூர்த்தி ஆலயம். குருவின் பல அம்சங்களில் ஒன்று யோகநிலை. சனகாதி முனிவர் களுக்கு உபதேசித்த பின்னர், அவர்கள் யோக நிலையை அடைந்து செயலாற்ற அருள்புரிந்து விடை கொடுத்து அனுப்பும் அற்புத வடிவே யோகநிலை. அத்தகைய அமைப்பில் விளங்கும் தட்சிணாமூர்த்தியை இங்கு தரிசிக்கலாம்.

4. குச்சனூர்
தேனி மாவட்டம் குச்சனூரில் குருபக வான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இந்த ராஜயோக தட்சிணா மூர்த்தி சின்முத்திரையோடு காட்சியளிக் கிறார். சாந்தம் பொங்கும் திருமுகம் கொண்டவர். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

5. பட்டமங்கலம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்க லம். இக்கோயிலில் 2,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

6. சுருட்டப்பள்ளி
ஆந்திர மாநில எல்லையில் உள்ளது சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். இல்லறத்தில் ஏற்படக்கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்தும் தயாபரன் இவர்.

7. தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். வலது கை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன் கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்.

8. தாராசுரம்
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் குரு தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் தென்முகக் கடவுள் அருள்கிறார்.

9. வேதபுரி
தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவில் உள்ள அரண்மனைப் புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால் வேதபுரியை அடையலாம். இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

10. தென்குடித்திட்டை
தஞ்சாவூர் - திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது. நின்ற நிலையில் தட்சிணாமூர்த்தி, ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலம். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் தனி சன்னதியில் கொலுவீற்றிருக்கிறார். அரனின் அருளும் அம்பிகை அருளும் ஒருங்கே இணைத்து அளிக்கும் ஈடில்லா மூர்த்தியாகத் திகழ்கிறார்.

11. தேப்பெருமாநல்லூர்
கும்பகோணத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது தேப்பெருமாநல்லூர். இங்கு அன்னதான தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

12. திருஇலம்பையங்கோட்டூர்
பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர். ரம்பை முதலான தேவகன்னிகைகள் ஈசனை பூஜித்த தலம். இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

13. திருவொற்றியூர்
சென்னை திருவொற்றியூர் வடிவுடை யம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணா மூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் அருள் ததும்பும் திருமுகத்தோடு வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல அமைந்துள்ளது.

14. ஆலங்குடி
கும்பகோணம் - மன்னார்குடி சாலை யில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியின் மூலவர் மட்டுமே பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் இருக்கும். ஆலங்குடி யில் தட்சிணாமூர்த்தியின் உற்சவர் திருமேனியை சிறந்த வேலைப்பாடு களுடன் தரிசிக்கலாம். திருத்தேரில் பவனி வரும் மூர்த்தி இவர். ஆறு கால அபிஷேகம் கண்டருளும் தெய்வம்.

15. குருவித்துறை
குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம், குருவித்துறை. மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து குருவித்துறைக்கு செல்ல பேருந்துகள் உள்ளன. குருவின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், சித்திர வேலைப்பாடுகள் அமைந்த தேரில் காட்சியளித்ததால் சித்திர ரத வல்லப பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

16. திருவையாறு
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி வலது மேல் கையில் கபாலமும், கீழ் கையில் சின்முத்திரையும், இடதுகரத்தில் சூலமும், கீழ் இடக்கையில் சிவஞான போதத் துடனும் திருவடியின் கீழ் ஆமையுடன் காட்சியளிக்கிறார். சுரகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

17. திருவலிதாயம் (பாடி)
சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில். மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் (வ்யாக்யான)தட்சிணாமூர்த்தி அருள்கிறார். உடல் எந்தவித வளைவுகளும் இல்லாது சமபங்க நிலையில் உள்ளது. புலித்தோல் தரித்து, பூணூல் அணிந்துள்ளார்.

18. ஏரையூர்
தட்சிணாமூர்த்தி என்றாலே கல்ஆல மரமும், அதனடியில் ஸனத் சகோதரர்கள் அமர்ந்திருக்க ஈசன் தட்சிணாமூர்த்தியாக அவர்களுக்கு மவுன உபதேசம் செய்யும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஏரையூர் திருத்தலத்தில் ஸ்தித தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் இவர் தரிசனம் தருகிறார். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் கல்ஆலமரம் வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

19. திருநெடுங்களம்
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநெடுங்களம். இத்தலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார். இவருக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட தடைகள் தவிடு பொடியாவதாக பக்தர்கள் நம்புகின்ற னர்.

20. திருப்புனவாசல்
இடது கரத்தை நாகப்பாம்பு அணி செய்கிறது. கால்களோ அசுரனை மிதித்தபடி தன் வெற்றியை பறை சாற்றுகின்றன. கம்பீரமான தோற்றம். அவநம்பிக்கை, பொறாமை, கோபம் போன்ற துர்குணங்களை நசுக்குவது போல, கால்களால் அசுரனை மிதித்த வண்ணம் காட்சி தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ளது.

21. திருப்புலிவனம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புலிவனம். இங்கு சிம்ம குரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். ஒரு காலை வழக்கம்போல முயலகன் மீதும், மற்றொரு காலை சிங்க வாகனத்தின் மீதும் வைத்துள்ளார். ‘அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் தம்பதியர் இடையே உள்ள பிணக்குகளை தீர்த்துவைத்து குடும்பத்தில் சுபிட்சத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

என்ன பரிகாரம் செய்வது?
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீன ராசிக்காரர்கள் இங்கே தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு குரு ஸ்தலத்துக்கு சென்று வியாழன்தோறும் வழிபட்டு வருவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பசுவுக்கு கேரட், முள்ளங்கி, அகத்திக்கீரை தரலாம். பழைய கோயில்களை புதுப்பிக்க உதவிகள் செய்வது, பள்ளிக்கூடங்களுக்கு கரும்பலகை, மேஜை, நாற்காலி வாங்கித் தருவது, உழவாரப் பணியில் ஈடுபடுவது எனக் காரியங்கள் ஆற்றி பரிகாரம் தேடலாம். குருப் பெயர்ச்சியின் பாதிப்புகள் அண்டாதவாறு காத்துக்கொள்ள வியாழன்தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு அவசியம். மற்ற ராசிக்காரர்கள் வியாழன்தோறும் தங்களுக்கு ஏதுவான குரு ஸ்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். கோயில் வாசலில் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை தானமாக வழங்கலாம். குருவின் நற்பலன்களை அப்படியே பெற அன்னதானம் மிகச் சிறந்தது.