NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது ஜல்லிக்கட்டை அனுமதிக்க முடியாது

      ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
 
        ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ஆம் தேதி வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம், "பீட்டா' பிராணிகள் நல அமைப்பு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அவற்றின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
விசாரணை: இதற்கிடையே, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹிங்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாஃப்தே ஆஜராகி முன் வைத்த வாதம்: ஜல்லிக்கட்டு போட்டியின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் "ஜல்லிக்கட்டு' பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, தமிழக அரசு கொண்டு வந்த "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009', மத்திய அரசின் சட்ட வரம்புக்குள் வரவில்லை.
தமிழகத்தில் வேளாண் சார்ந்த விழாவான பொங்கலின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகளைக் கொண்டு இவ்விழா நடத்தப்படுகிறது.
வதை கிடையாது: ஜல்லிக்கட்டுக்காக காளைகளை பழக்குவது வதை ஆகாது. அந்த நோக்கத்துடன் அப்போட்டிக்கு தடை விதித்திருந்தால், குதிரைப் பந்தயத்துக்கு ஏன் இன்னும் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை? ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த போது, உச்ச நீதிமன்றம் அது தொடர்பான அடிப்படையை பரிசீலிக்கவில்லை. அதனால்தான் தீர்ப்பை மறுஆய்வு செய்ய தமிழக அரசு கோருகிறது என்று வாதிட்டார் சேகர் நாஃப்தே.
இதையடுத்து, விலங்குகள் நல வாரியம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், "தமிழக அரசின் மறுஆய்வு மனுவில் அடிப்படை இல்லை. மத்திய அரசின் "விலங்குகள் வதை தடைச் சட்டம் 1960'-இல் விலங்குகள் வதை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்காக காளையை பழக்குவது கிடையாது. ஜல்லிக்கட்டுக்காகவே காளைகள் பழக்கப்படுத்தப்படுகின்றன' என்றார்.
உத்தரவு: இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: விலங்குகள் வதையைத் தடுக்கும் நோக்கில் "விலங்குகள் வதை தடுப்பு சட்டம் 1960' இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் அறிமுகத்திலேயே அதன் நோக்கம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் விதமாக தமிழக அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு இயற்றிய சட்டம், மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு முரண்பாடாக உள்ளது.
எனவே, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கையை ஏற்க விரும்பாததால் மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் மத்திய அரசின் கடந்த ஜனவரி 7-ஆம் தேதியிட்ட அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை வரும் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி கேள்வி
பொழுதுபோக்குக்காக வீட்டில் வளர்க்கப்படும் பிராணியாகக் கூறப்படும் காளையை அடக்கும் விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு என்ற வாதத்தை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜல்லிக்கட்டை நடத்தும் நோக்கத்துடனே தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஜல்லிக்கட்டு மதம் சார்ந்தது அல்ல. காளை வீட்டு விலங்கு என்றால் அதை ஏன் பழக்க வேண்டும்?
சமூக - கலாசார பண்டிகையான பொங்கலின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது மத சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்று தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
"ஜல்லிக்கட்டு' என்பது மத சுதந்திரத்துக்கான உரிமை என்ற கோணத்தில் ஏன் தமிழக அரசு பார்க்கிறது? ஜல்லிக்கட்டு போட்டியை மதம் தொடர்புடைய நிகழ்வாகக் கருத முடியாது.
மத சுதந்திரம் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பின் 25-ஆவது விதியுடன் ஜல்லிக்கட்டை ஒப்பிட்டு அரசியல் சாசனத்துக்கே களங்கம் கற்பிக்கக் கூடாது. தனது மகிழ்ச்சிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் நடத்தப்படும் ஒரு நிகழ்வுக்கும், மத சுதந்திரத்துக்கும் தொடர்பு இருக்க முடியாது என்றார் நீதிபதி தீபஸ் மிஸ்ரா.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive