குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த கிரண் பிர் சேத்தி, கல்வி
கற்பிக்கும் முறையில் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க, ‘ரிவர்சைடு ஸ்கூல்’
என்ற பெயரில் ஆண்டுதோறும் ‘டிசைன் ஃபார் சேஞ்ச்’ என்ற போட்டியை இந்தியா
முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துகிறார். ஆண்டுதோறும் சர்வதேச அளவில் பள்ளி
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இந்தப் போட்டியில் இடம்பெறும்.
இதில் இவ்வாண்டு விழுப்புரம் சாலை அகரத்தை சேர்ந்த அரசுப்பள்ளி பரிசு
பெற்றுள்ளது. இப்பள்ளியின் 8 கண்டுபிடிப்புகளை இப்போட்டிக்கு அனுப்பியதில்,
சிறந்த கண்டுபிடிப்புக்காக சாக்பீஸ் துகள்கள் வெளியில் சிந்தாத, ‘மாதிரி
டஸ்டருக்கு’ 15 ஆயிரம் ரொக்க பரிசோடு விருதும் கிடைத்துள்ளது.
“அரசுப் பள்ளியிலும் ஆற்றல் மிக்க மாணவர்கள் உண்டு. மறைந்திருக்கும்
திறமைகளை வெளிக்கொண்டுவர கொஞ்சம் கூடுதலாக முயற்சி செய்தோம்; அவ்வளவுதான்”
என்று கோரஸாக பதில் வருகிறது ஐந்து பேர் கொண்ட மாதிரி சாக்பீஸ் டஸ்டர்
கண்டுபிடிப்பாளர்களிடமிருந்து. தொடர்ந்து ஆனந்தராஜ் என்ற மாணவர் பேசத்
தொடங்கினார்.
‘‘5 ஆண்டுகளாக செய்த முயற்சியின் பலன் இந்த விருது. 2016 ஆம் ஆண்டு
டிசைன் ஃபார் சேஞ்ச் (DFC)இல் TOP-20 இல் எங்கள் ‘டஸ்ட்டர்’ இடம் பிடித்து
கனவை நிஜமாக்கி சாதித்துள்ளோம்” என்ற ஆனந்தராஜைத் தொடர்ந்து பேசிய
மணிமாறன், ‘‘2012ல் கலந்துகொண்டவர்கள் மீண்டும் மீண்டும் கலந்துகொள்ளலாம்
என்ற விதிமுறை முதலில் தெரியாததால் முன்னர் போட்டியில் கலந்துகொள்ளத் தவறி
விட்டோம்!
மீண்டும் முயற்சியைக் கைவிடாமல் 2013ஆம் ஆண்டு ‘தமிழிலும்
எழுதுவோம்!தரணியைக் கலக்குவோம்!’ என்ற செயல் திட்டத்தை எடுத்துக் கொண்டு
பள்ளி கணினிகளைப் பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர்ந்து NHM
WRITER கொண்டு தமிழில் தட்டச்சு செய்தோம். வீடியோவின் வடிவத்தில் AVI, MP4,
MPEG, MOV உள்ளிட்ட ஏதாவதொரு வடிவத்தில் கேட்டார்கள். நாங்களோ WMV
வடிவத்தில் கொடுத்ததால் அது சரிவர ஓடவில்லை.
விடுவோமா நாங்கள்? விடாக்கண்டராக 2014ஆம் ஆண்டு மூங்கில் முள்ளால் வேலி!
கவலைகள் இனிமேல் காலி!! என்ற செயல்திட்டத்தை எடுத்து, ”தானே” புயலால் கீழே
விழுந்துவிட்ட பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவர்களைக் கொண்டே மூங்கில்
முள்ளால் வேலி அமைத்தோம்!! ஆனால் வீடியோ, பவர் பாயிண்ட் டெக்னிக் இல்லாமல்
இம்முறை புகைப்பட ஸ்டோரி தயாரித்தோம். ஆனால் கருத்தை முழுமையாகச் சொல்ல
முடியாமல் போய்விட்டது’’ என்றார்.
“தினம் தினம் கரும்பலகையை அழிக்கும்போது மாணவர்களுக்கு சாக்பீஸ்
துகள்களால் ஏற்படும் தும்மல், இருமலுக்குத் தீர்வு வேண்டும் என நினைத்தோம்.
தொடக்கத்தில் கொட்டாங்குச்சியில் சாக்குப் பையை கட்டி கரும்பலகையை
அழித்தோம்! ஆனால் இதில் சாக்குப்பையை அவிழ்த்து தான் சாக்பீஸ் துகள்களைக்
கொட்ட வேண்டியிருந்தது.
ஒவ்வொருமுறையும் சாக்கு பையை அவிழ்க்காமல் இருக்க, வீணான பிளாஸ்டிக்
குளிர்பான பாட்டிலை இரண்டாக வெட்டி அடிப்பகுதியை PEN STAND ஆகவும்,
மூடியுடன் இருக்கும் மேல் பகுதியைக் கொண்டு போர்டை அழிக்கவும்
பயன்படுத்தினோம். இப்போது சாக்குப் பையை அவிழ்க்காமல், குளிர்பான
பாட்டிலின் மூடியை திறந்து சுண்ணக்கட்டித் துகள்களை வெளியேற்றுவது எளிதாக
இருந்தது. கரும்பலகையை இன்னும் சுத்தமாக அழிக்கும் பொருட்டு உள்ளே ஸ்பாஞ்ச்
வைத்தோம்.
அது மேல்புறத்தில் இறுக்கமாக இருப்பதற்காகக் குச்சிகளை உடைத்து
கூட்டல்குறி வடிவத்தில் இடையில் செருகினோம். இவை அனைத்தையும் பலமுறை
மீண்டும் முயற்சித்து தற்போது நீங்கள் பார்க்கும் இறுதி வடிவம் கிடைத்தது!
என புன்னகையுடன் பேசுகிறார் மாணவர் சரவணன்.
‘‘பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் எங்களுக்கு
தெரியும்!! எதையும் தைரியமாக எதிர்கொள்வதற்கான துணிச்சலை அரசுப்பள்ளி
வழங்கியிருக்கிறது! எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இதுவே
போதும்!!’’ என முழங்குகிறார்கள் ஐவர் மாணவர்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...