NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணியத் தடை..என்ன சொல்கிறார்கள் ஆசிரியர்கள்?

முசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப் பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார். அதற்கு, பதில் அளித்துள்ள கல்வி இயக்குனரகம் 'அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சுடிதார் அணிவதற்கு அனுமதி தர முடியாது. ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்' என பதில் வந்திருக்கிறது. இந்த உத்தரவு பற்றி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கருத்து என்ன? வரவேற்கிறார்களா... எதிர்க்கிறார்களா?

பா.பிரீத்தி, (ஊ.ஒ.ந.நி.பள்ளி, சீர்ப்பனந்தல், ரிஷிவந்தியம் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்)
'' வகுப்பில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அடிக்கடி கீழே உட்கார வேண்டியிருக்கு. கையைத் தூக்க வேண்டியிருக்கு. சேலையில இருந்துகிட்டு இதெல்லாம் செய்ய சங்கடமா இருக்கும். என்னைப் பொருத்தவரை சுடிதார்தான் வசதியா இருக்கும். ஆனா, டீச்சர்னாலே சேலையில்தான் இருக்கணும்னு முடிவுப் பண்ணிட்டாங்க. ஏதாவது மீட்டிங் நடக்கிறப்போ சேலை கட்டிட்டு போனாதான் கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுக்கிறாங்க. ஆனா, மெட்ரிகுலேஷன் ஸ்கூல் டீச்சருங்க சுடிதார் போடலாம், அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் போடக்கூடாதுன்னா என்ன நியாயம்னு புரியலை. இதிலுமா வேறுபாடு?''
D.விஜயலட்சுமி, (அரசு ஆண்கள் மே.நி.பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்)
 
''ஓர் ஆசிரியைக்குச் சேலையைவிட சல்வார்தான் வசதியா இருக்கும். அது உடல் முழுக்க மறைச்ச மாதிரியும் இருக்கும். எந்தவிதப் பதட்டமும் இல்லாமல், ரிலாக்ஸா வேலைப் பார்க்கலாம். குறிப்பாக, ஆண்கள் பள்ளியில் வேலைப் பார்க்கிறவங்களுக்கு சுடிதார்தான் பெஸ்ட். பசங்களோடு ஈஸியா அணுகி பாடம் நடத்தலாம். உங்களுக்கு என்ன பிரியமோ அதை அணியலாம்னு சொல்லிட்டா எந்தப் பிரச்னையும் இருக்காது.''
ஜெயலெட்சுமி, (தியாகி நிதி நாடும் பள்ளி, காஞ்சிபுரம்)
 
''சுடிதார் அணியக்கூடாதுன்னு அரசு ஆர்டர் போட்டுட்டால், கேட்டுக்கத்தானே வேணும். அதேநேரத்தில், சுடிதார் அணியறதில் இருக்கிற ப்ளஸ் பற்றி அரசு பரிசீலனை செஞ்சுப் பார்க்கலாம். இன்றைய பெண்களுக்கு சுடிதார்தான் கம்பர்டெபிளா இருக்கு. நான் ஆசிரியையா பணிக்குச் சேர்ந்ததிலிருந்தே புடவைதான் கட்டிட்டு வரேன். எனக்கு அது மெஜஸ்டிக்கா இருக்கிறதா நினைக்கிறேன். ஆசிரியைகளையும் மாணவர்களையும் வேறுபடுத்தி காட்டுறதில் முக்கியமான பங்கு உடைக்கு உண்டு. ஸ்டூடண்ட்ஸ் சுடிதாரில் வரும்போது அவங்களுக்கு இணையா ஆசிரியைகளும் சுடிதாரில் இருக்கிறது நல்லா இருக்காதே. நான் ஒரு டீச்சரா வாழ்க்கைய ஆரம்பிச்சு, இப்போ தலைமையாசிரியா உயர்ந்திருக்கேன். என் அனுபவத்திலிருந்து சொல்றேன், மாணவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆசிரியைகள், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்க மாட்டாங்க. இந்த விஷயத்தில் எனக்கு எதுவா இருந்தாலும் ஓ.கேதான். இப்போதைய ஜெனரேஷன்ஸ் என்ன நினைக்குறாங்க என்பதுதான் முக்கியம். இந்த விஷயத்தால், ஆசிரியர்களுக்குள் பிளவு உண்டாகுமோனு தோணுது.''
சுப்புலெட்சுமி, (அரசு மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம், சென்னை)
''பெண்களில் பலரும் சேலையை விரும்பி அணியுறாங்க. சேலை கட்டுறதுனால் எந்த இடையூறும் ஏற்படாது. கண்ணியமாகவும் இருக்கும். தவிர, இப்போ உள்ள தலைமுறையினர், சுடிதாரையே பலவிதமான மாடல்களில் தைச்சு போட்டுக்கிறாங்க. நாம மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத்தானே பள்ளிக்குப் போறோம். அதை விட்டுட்டு, சுடிதாரா சேலையான்னு விவாதம் நடத்திட்டு இருக்க வேணாமே. எனக்குத் தெரிஞ்சு ஆசிரியைகள் பொதுவா சுடிதாரில் வர விரும்ப மாட்டாங்க. ஒருவேளை இளம் வயது ஆசிரியைகள் சுடிதார் போட்டுட்டு வந்தால், பிற அசிரியைகளுடன் பிளவு உண்டாக வாய்ப்பிருக்கு. பருவ வயதில் இருக்கும் பிள்ளைகளை தவறான கண்ணோட்டத்துக்கு கொண்டுசெல்லாமல் இருக்கிறதும் முக்கியம். எது எப்படியோ அரசு கொண்டுவந்திருக்கும் இந்த முடிவைப் புறக்கணிக்காமல் ஏத்துக்கிறதே நல்லது. யாரும் இதை விமர்சிக்க மாட்டாங்கன்னும் நம்புகிறேன்!''




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive