NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடன்பாடு இல்லையேல் வேலைநிறுத்தம்!!!

‘தமிழக அரசுடன் நாளை நடக்கும் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால் பேருந்து வேலைநிறுத்தம் நடத்துவோம்’ என்று 10 போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூட்டாக  அறிவித்துள்ளன.


தமிழக அரசு புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பிடித்தம் செய்த தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக முடிவு எடுக்கப்படாததால் கடந்த 9ஆம் தேதி போக்குவரத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் நிர்வாகத்திடம் இன்று (செப்.24) முதல் ஸ்டிரைக் தொடங்கும் என்று ஏறகெனவே நோட்டீஸ் கொடுத்தனர்.

இதனையடுத்து வேலைநிறுத்த அறிவிப்பைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை சுமுகமாகப் பேசி தீர்க்கவும் சென்னை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் இறுதியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், அதுவரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில்தான் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நாளை 25.9.2017 (திங்கட்கிழமை) போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இதில் கலந்துகொள்ள போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் 30 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொ.மு.ச. பேரவை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று 23.9.2017 நடந்தது. கூட்டத்தில் போராட்டக்குழுக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 10 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அரசு போக்குவரத்துக் கழகங்கள் சேவைத்துறை என்ற அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையினை வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதத்தின் முதல் நாளன்று வழங்கப்பட வேண்டும். 1.4.2003-க்குப் பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அமலாகாத பல ஒப்பந்த சரத்துகளை அமலாக்க நிர்வாகங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், எதையும் இடைப்பட்ட காலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 1.4.2003க்கு பின் சேர்ந்த தொழிலாளர்களது வருங்கால வைப்புநிதியை உறுதிப்படுத்துவது, தொழிலாளர்களது உழைப்புக்கு ஏற்ப இதர அரசுத் துறை ஊழியர்களுக்கு இணையாக சற்றும் குறைவில்லாமல் ஊதியம், படிகள் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கும் அரசே பொறுப்பு. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டம் முடிந்ததும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகை வழங்குவது, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திருப்பி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாகத் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி எப்போது தரப்படும் என்பது தெளிவாக தீர்மானம் செய்யப்பட வேண்டும்.

மேலும், நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும். அரசு தொழிலாளர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும், மக்கள் சிரமங்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எஃப்., டி.எம்.டி.எஸ்.பி., பி.டி.எஸ்., எம்.எல்.எஃப்., ஏ.ஏ.எல்.எல்.எஃப்., டி.டபிள்யூ.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive