NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து...பசுமையாகும் பள்ளிகள்!  பள்ளியில் மரம் வளர்ப்பு திட்டம் துவக்கம்

மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்று வளர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்,' என பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் விழாக்களின் போது மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

ஆனால், அந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நடப்படுவதில், குறைந்த பட்ச மரங்கள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை.


இந்நிலையில், தமிழக அரசு மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகளை இத்திட்டத்துக்கு தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒரு கல்வி மாவட்டத்துக்கு, 15 பள்ளிகள் வீதம் மொத்தம், 960 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


மாணவர்களிடம் மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்த மாணவர்களை, பள்ளியில் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பள்ளிகளிலும், 50 மரக்கன்றுகள் கட்டாயமாக நட வேண்டும். நடவு செய்த மரக்கன்றுகளை பராமரிக்க ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மாணவர் நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் பள்ளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியை பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு மரக்கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.மரம் நடுவதற்குரிய குழியை தேவையான அளவு தோண்டி அதனை ஆறவிடுதல் அவசியமாகும். செடியை நடவு செய்த பின், அதற்கு தண்ணீர் மற்றும் உரமிட்டு பராமரிக்க வேண்டுமென கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அறிவுரையும் வழங்கியுள்ளார்.


தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: பள்ளிகளில் நடப்படும் மரங்களை பாதுகாத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்றும், அதற்கான திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.


அதன்படி, இத்திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை உறுப்பினர், செயலர் வெங்கடாச்சலம் ஆகியோர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளார். முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிதியை கொண்டு பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்களை வாங்க வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த பின், அதை புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு, மாணவர் பெயர் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும்.


அதன் பின், பள்ளி ஒன்றுக்கு, மீதமுள்ள, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளிகளில் பசுமையை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


படிக்கும் போது மாணவர்களிடம் மரம் வளர்ப்பு என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து மரம் வளர்த்து, அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாறினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். முழு மனதுடன் திட்டத்தை செயல்படுத்தினால், நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
பொள்ளாச்சியில் பள்ளிகள் தேர்வு பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்குட்பட்ட, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி, வேட்டைக்காரன்புதுார், பொள்ளாச்சி நகராட்சி (பெண்கள்), சமத்துார் வாணவராயர் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட, 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, ஒடையகுளம், வடுகபாளையம், ஏரிப்பட்டி, நாயக்கன்பாளையம் மற்றும் நல்லட்டிபாளையம் உள்பட ஐந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி சமத்துார் ராம ஐயங்கார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சேவாலயம் துணை செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். காளிதாஸ் வரவேற்றார். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், சேவாலயம் தலைவர் மயில்சாமி ஆகியோர் பள்ளி ஆசிரியர்களிடம் மரக்கன்று வளர்ப்புக்கான நிதியை காசோலையாக வழங்கினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive