NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் டூ இயற்பியல் தேர்வை எளிதாக அணுகுவதற்கு தேவையான சில டிப்ஸ்

இயற்பியல் பாடம் கணிதப் பாடத்தோடு தொடர்புடைய பாடம் . பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இயற்பியலை புரிந்து படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.  


இரண்டு தொகுதிகளாக இருக்கும் இயற்பியல் பாடபுத்தகத்தில் மொத்தம் பத்துப் பாடங்கள். இந்த பத்து பாடங்களிலிருந்து 230 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றது. அதில் 150 மதிப்பெண்களுக்கு பதிலளித்தால் போதுமானது. முதல் தொகுதியிலிருந்து 115 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் இரண்டாவது தொகுதியிலிருந்து 115 மதிப்பெண்களுக்கான கேள்விகளும் கேட்க்கப்படுகின்றன. எனவே திட்டமிட்டு முதல் தொகுதில் இருக்கும் ஐந்து பாடங்களை படித்தாலே 150 க்கு 115 மதிப்பெண்களை பெற வாய்ப்பு இருக்கிறது.
முதல் பகுதி : 
ஒரு மதிப்பெண் கேள்விகள். ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் இறுதியிலும் கொடுக்கப்பட்டிருக்கு தன் மதிப்பீடு பகுதியில் இரண்டு தொகுதிகளிலும் சேர்த்து 134 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதிலிருந்து 12 முதல் 16 கேள்விகள் இடம்பெறுகிறது. நான்கு கேள்விகள் இந்த 134 கேள்விகளில் சற்று மாற்றியமைத்து கேட்கப்படுகிறது. 5 கேள்விகள் புத்தகத்தில் இருக்கும் சூத்திரங்கள், விதிகள் மற்றும் நிறுவப்பட்ட சூத்திரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான வரிகள் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படுகிறது. மீதமிருக்கும் 5 கேள்விகள் உயர்நிலைச் சிந்தனைத்திறனை (Higher-order thinking) பயன்படுத்தி செய்யக் கூடியனவாக இருக்கும். இந்த ஐந்து கேள்விகள் ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக இருக்கும். இந்த ஐந்து கேள்விகளும் தான் பெரும்பாலும் மாணவர்கள் முழு மதிபெண்கள் எடுப்பதை முடிவு செய்யும் கேள்விகளாக இருக்கும்.
இரண்டாவது பகுதி: 
இரண்டாவது பகுதி மூன்று மதிப்பெண் கேள்விகள். 20 கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். 15 கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். 5 அல்லது 6 கணக்குகள் இந்த பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது. புத்தகத்தின் பின்பகுதியில் இருக்கும் கேள்விகள் தவிர வரையறைகள், கருத்துக்கள், எடுகோள்கள், பண்புகள், பயன்கள், குறைபாடுகள் போன்றவைகளை ஒவ்வொரு பாடங்களில் இருந்தும் தனியாக பிரித்துப் படித்தால் சிறப்பு. 
குறை கடத்தி சாதனங்களும் அவற்றின் பயன்பாடுகளும் பாடத்தில் இருந்து அதிகபட்சமாக நான்கு கேள்விகள் கேட்கப்படுகிறது. மின்னூட்டவியல் பாடத்தில் இருந்து மூன்று கேள்விகள் கேட்க்கப்படுகிறது. புத்தகத்தில் இருக்கும் சூத்திரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தால் 6 கணக்குகளையும் செய்துவிடலாம். சூத்திரத்தை எழுதி அதில் கொடுக்கப்பட்ட மதிப்புக்களை பிரதியிட்டு விடையை கண்டுபிடிப்பதாகவே பெரும்பாலான கணக்குகள் இருக்கும்.
மூன்றாவது பகுதி:
ஐந்து மதிப்பெண் கேள்விகள். மொத்தம் 12 கேள்விகளில் 7 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்வி (கணக்கு) கண்டிப்பாக பதிலளிக்க கூடியதாக இருக்கும்.
மின்னூட்டவியல் மற்றும் கதிர்வீச்சு பருப்பொருட்களில் இரட்டை பண்பு மற்றும் சார்பியல் ஆகிய இரு பாடங்களிலும் தலா இரண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே இந்த இரு பாடங்களில் இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகளைப்  படித்தாலே 4 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். மீதமுள்ள 8 பாடங்களிலிருந்து தலா ஒரு கேள்வி வரும். ஏதாவது இரண்டு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள எல்லா  ஐந்து மதிப்பெண் கேள்விகளை படித்தாலே இரண்டு கேள்விக்களுக்கு பதிலளிக்கலாம். ஆகவே ஆறு கேள்விகளை இவ்வாறு தெரிவு செய்து படிக்கலாம். புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இருக்கும் பண்புகள் மற்றும் பயன்கள் ஆகியவற்றில் ஒன்று கேள்வியாக கேட்கப்படும்.
கடைசியாக இருக்கும் ஏழாவது ஐந்து  மதிப்பெண் கேள்வி கணக்கு. பத்துப் பாடங்களில் எந்தப் பாடத்தில் இருந்து வேண்டுமானாலும் வரலாம். இது அல்லது அது வகையில் கேட்கப்படும் இந்த கேள்வி இரண்டு கேள்விகளும் ஒரே பாடத்தில் இருந்து கேட்கப்படுகிறது. அதில் ஒரு சலுகை இருக்கிறது. இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி எடுத்துக்காட்டு பகுதியில் இருந்தும் அடுத்த கேள்வி பயிற்சியில் இருந்தும் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்தில் இருக்கும் எடுத்துக்காட்டு கணக்குகள் அல்லது பயிற்சி கணக்குகள் இரண்டில் ஒன்றை படித்தாலே போதுமானது.
நான்காவது பகுதி:
பத்து மதிப்பெண் கேள்விகள். இரண்டு மற்றும் ஏழாவது பாடம் தவிர மீதமுள்ள எட்டு பாடத்திலுலிருந்து  ஒரு கேள்வி வீதம் எட்டு கேள்விகள் கேட்கப்படுகிறது. நான்கு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். எனவே உங்களுக்கு பிடித்த நான்கு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள அனைத்து பத்து மதிப்பெண் கேள்விகளை படித்தாலே போதுமானது.
இயற்பியல் தேர்வுக்கு முக்கியமான கேள்விகளை படிப்பதைவிட பாடங்களை தெரிவு செய்து அதில் உள்ள அனைத்து கேள்விகளையும் படிப்பதே சிறந்த பலனைத் தரும். உதாரணமாக பத்து மதிப்பெண் கேள்விகளைப் படிக்கும் போது பத்து பாடங்களில் உள்ள முக்கியமான கேள்விகளை தெரிவு செய்து படிப்பதை விட பத்தில்  4 பாடங்களை மட்டும் தெரிவு செய்து அந்த 4 பாடங்களில் இருக்கும் அனைத்து கேள்விகளை படிப்பதே அதிக பலன் தரும்.
அது போல 3 மதிப்பெண் கேள்வி படிக்கும் போது 9 பாடத்திலுள்ள அனைத்து 3 மதிப்பெண் கேள்விகளை படித்தால் 15 கேள்வியில் 4 கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். படிக்கும் பாடத்தை முழுமையாக படிக்கும் போது மதிப்பெண்கள் அதிகரிக்கும்.
அடிக்கடி செய்யும் தவறுகள்:
சில சமன்பாடுகளையோ அல்லது சூத்திரங்களையோ  நிறுவும் போது அதன் கடைசியில் அதனுடைய திசை, விதி அல்லது சிறப்பு நேர்வுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை மறந்து விடாமல் எழுதவேண்டும்.
ஹைட்ரஜன் அணுவின் ஆரத்துக்கான கோவையை காணுதல் போன்ற கேள்விகளில் சிலநேரங்களில் கணகிடுதலில் ஏற்படும் குழப்பத்தினால் கடைசியில் நிறுவப்படும்  கோவை தவறாகிவிடும். நிறுவப்படும் கோவையின் மதிப்பை தனியாக படித்து வைத்திருந்தால் அந்த தவற்றை சரி செய்து விடலாம்.
கால நீட்டிப்பு, நீளக் குறுக்கம் ஆகிய இரு கேள்விகளில் ஒன்று பெரும்பாலும் அனைத்து கேள்வித்தாள்களிலும் இடம் பெறுகிறது. இரண்டு கேள்விகளின் பதிலையும் மாணவர்கள் சிலநேரங்களில் மாற்றி எழுதி விடுகின்றனர்.
ஐன்ஸ்டின் ஒளிமின் விளைவு சமன்பாடு நிறுவுவதில் சிலநேரம் சிக்கல் ஏற்படுகிறது.
அச்சுக் கோட்டில் மின்புலம், நடுவரைக் கோட்டில் மின்புலம் இரண்டையும் புரிந்து கொள்ளாமல் மாற்றி எழுதுகிறார்கள்.
சீரான காந்த புலத்தில் மின்னூட்டம் பெற்ற துகள்களின் இயக்கம் மற்றும் காந்தப்புலத்தில் மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசை ஆகிய கேள்விகளையும் சரியாக புரிந்து கொள்ளாமல் சில மாணவர்கள் மாற்றி எழுதுகிறார்கள்.
புத்தகத்தின் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகளை சிறிது மாற்றம் செய்து கேட்பார்கள். மாற்றத்தை கவனிக்காமல் சிலர் தவறாக பதிலளித்து விடுகிறார்கள்.
கேள்விகளை கவனமாக படிப்பதும் புத்தகத்தில் இருக்கும் கேள்விகளை புரிந்து கொண்டு அதற்கான பதிலை படிப்பதும் இத்தகைய தவறுகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள்.
150/ 150 மதிப்பெண்கள் எடுக்க முயற்சி செய்பவர்களுக்கு:
2, 7 வது பாடம் தவிர மீதமுள்ள எட்டு பாடங்களில் நான்கு பாடங்களை தெரிவு செய்து அதில் உள்ள அனைத்து கேள்விகளையும் படியுங்கள் (4 X 10 =40)
2, 7 பாடங்களில் உள்ள அனைத்து 5 மதிப்பெண் கேள்விகளையும் (கணக்குகள் உட்பட )படித்து மீதமுள்ள எட்டு பாடங்களில் இரண்டு பாடங்களை தெரிவு செய்து கோள்ளுங்கள். கட்டாய வினாவுக்கு புத்தகத்தில் உள்ள அனைத்து பயிற்சி அல்லது எடுத்துக்காட்டு கணக்குகளில் ஒன்றினை தெரிவு செய்து படியுங்கள். (7 X 5=35)
9, 2, 4, 6,1, 8 ,3 ஆகிய பாடங்களில் உள்ள 3 மதிப்பெண் கேள்விகள் மற்றும் இதுவரை பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் ஆகியவற்றை தயார் செய்யலாம். இதுவரை பொது தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் சுமார் 10 கேள்விகள் வரை மீண்டும் திரும்ப கேட்கப்படலாம். (3 X 15=45 )
பகுதி ஒன்றில் குறிப்பிட்டது போல 30 ஒரு மதிப்பெண் கேள்விகளை தயார் செய்ய வேண்டும் (1 X 30=30 )
இவ்வாறு நீங்கள் தெரிவு செய்து படித்தால் நிச்சயமாக 150 க்கு 150 ஐ பெறலாம்.
150 மதிப்பெண் தேவையில்லை 130 க்கும் 145 க்கும் இடையில் எடுத்தாலே போதும் என்று நினைப்பவர்கள் கட்டாய வினாவைத் தவிர்த்து மற்றப் பகுதியைப் படித்தாலே போதும்.
100 மதிப்பெண் எடுத்தால் போதும் என்று நினைப்பவர்கள் நான்கு 10 மதிப்பெண் கேள்விகள், இரண்டு மற்றும் ஏழாவது பாடத்தில் இருக்கும் 5 மதிப்பெண் கேள்விகள், 9, 2, 4 பாடத்தில் இருக்கும் 3 மதிப்பெண் கேள்விகள், புத்தகத்திற்கு பின்னால் இருக்கும் ஒரு மதிப்பெண் கேள்விகள் படித்தாலே போதுமானது.
50 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என்பவர்களுக்கு புத்தகத்தின் பின்னால் இருக்கும் ஒருமதிப்பெண் கேள்விகள் (15 மதிப்பெண்கள்) , இதுவரை பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட 3 மதிப்பெண் கேள்விகள் (சுமார் 7 கேள்விகள் வரை திருமப வரும்) , 2 மற்றும் 4 ஆவது பாடத்தில் இருக்கும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் (20 மதிப்பெண்கள்) , இரண்டு பாடங்களை தெரிவு செய்து அதிலுள்ள பத்து மதிப்பெண் கேள்விகள் (20 மதிப்பெண்கள் ) படித்தாலே போதுமானது.
எவ்வாறு வழங்குவது?
ஒரு வருடம் தயார் செய்ததை மூன்று மணிநேரத்தில் வழங்க வேண்டும். பதறாமல் நிதானமாக நம் தயார் செய்ததை வழங்க பயிற்சி தேவை.
எந்த பகுதியில் இருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்காமல் எந்த பகுதியில் நன்றாக பதில் தெரிந்த கேள்விகள் இருக்கிறதோ அந்த பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.
தேவையான இடத்தில் படங்கள் வரையவேண்டும். படத்திற்கு தனியாக மதிப்பெண் இருக்கும். படங்கள் வரைய குறைவாக நேரத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக வரைந்து பாகங்களை அடையாளப்படுத்டினாலே போதுமானது.
ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு 30 நிமிடம், மூன்று மதிப்பெண் கேள்விகளுக்கு 40 நிமிடங்களும், ஐந்து மதிப்பெண் கேள்விகளுக்கு 40 நிமிடங்களும், பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு 60 நிமிடங்களையும் ஒதுக்கிக் கொள்ளுங்கள். மீள் பார்வைக்கு 10 நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள்.
30+40+40+60+10 = 180 நிமிடங்கள். முழு மதிப்பெண்கள் பெற நேர மேலாண்மை மிகவும் முக்கியம், 180 நிமிடங்களில் 150 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதாவது ஒரு மதிப்பெண்களுக்கு 1.2 நிமிடங்கள் தான் கிடைக்கிறது. கவனமாக செலவு செய்யுங்கள்.
தேர்வு எழுதுவதற்கு முன் கேள்வியை படித்து புரிந்து கொள்ளுங்கள். தவறான பதிலை எழுதுவது , பின் வெட்டி விட்டு வேறு பதிலை எழுதுவது போன்ற செயல்கள் நேரத்தை விரயம் செய்யும்.
கணக்கு செய்யும் போது விடையோடு சேர்த்து அலகு எழுதுவது முக்கியம். அதற்கு தனி மதிப்பெண் இருக்கிறது. அது போல கொடுக்கப்பட்ட தரவுகளை எழுதி கணக்குக்கான சூத்திரத்தை எழுதினாலே மதிப்பெண் இருக்கிறது.
வரைபடம் (Graph) வரையும் போது X, Y அச்சுக்களின் இயற்பியல் அளவு குறிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பண்புகள், நன்மைகள் போன்ற கேள்விகளை தெரிவு செய்து எழுதினால் குறைவான நேரத்தில் விடைகள் எழுத முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive