புதுடில்லி : மருத்துவ மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு தொடர்பாக, சென்னை
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மத்திய
இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்போவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட், எம்.பி., - டி.கே.ரங்கராஜன், நீட்
தேர்வு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு
தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சமீபத்தில் பிறப்பித்த
உத்தரவு: தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தவறான வினாக்களுக்கு,
தலா, 4 மதிப்பெண் வீதம், 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில், புதிய தரவரிசை பட்டியலை, சி.பி.எஸ்.இ., இரண்டு
வாரங்களில் வெளியிட வேண்டும். அதுவரை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான
கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் உயர்
நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய, சி.பி.எஸ்.ஐ., முடிவு
செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சி.பி.எஸ்.இ.,
அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும்,
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், சி.பி.எஸ்.ஐ.,
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, மார்க்சிஸ்ட்,
எம்.பி., ரங்கராஜன், ஏற்கனவே, 'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...