NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

9 வயதில் ஆசிரியர்... 24 வயதில் தலைமை ஆசிரியர்... இப்படியும் ஒரு நல்லாசிரியர்!





பாபர் அலிக்கு 9 வயதிலேயே ஆசிரியர் ஆக வேண்டுமென்ற கனவு இருந்தது. இளம் வயதிலேயே தான் கற்றதை மற்றவருக்கு கற்றுக் கொடுத்தான்.
9 வயதில் ஆசிரியர்... 24 வயதில் தலைமை ஆசிரியர்... இப்படியும் ஒரு நல்லாசிரியர்!
நல்லாசிரியர் தினம் இன்று. நாட்டின் நல்லாசிரியர்கள், விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர். எந்த விருதுக்கும் ஆசைப்படாமல், விருது என்றால் என்னவென்றே தெரியாத பல நல்லாசிரியர்களும் நம்மிடையே உள்ளனர்!
வேதாரண்யத்தில் குளத்துக்குள் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 11 மாணவ-மாணவிகளின் உயிரைக் காப்பாற்றினார் ஆசிரியை சுகந்தி. கடைசிக் குழந்தையையும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் நீருக்குள் மூழ்கிய சுகந்தி, அந்தக் குழந்தையோடு மூழ்கிப்போனார். கடலூர் சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளை, தன் பயிற்சியின் மூலம் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனைகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார் மாரியப்பன் என்கிற நல்லாசிரியர்.
சிறு வயது ஆசிரியர் பாபர் அலி

உயிரைக் கொடுத்து குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியர் முதல் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கும் ஆசிரியர்கள் வரை பார்த்துவிட்டோம். இப்போது பார்க்கப்போகும் நல்லாசிரியரோ, வேறு ரகம். எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். இந்த ஆசிரியரோ, தனக்கு  விவரம் தெரிந்த நாள் முதல் ஆசிரியராகிவிட்டார். மற்ற சிறுவர்கள் கிரிக்கெட் மட்டையுடன் அலையும்போது, 9 வயதில் தன் கையில் சாக்பீஸ் பிடித்தவர், இன்று பள்ளித் தலைமை ஆசிரியர். அப்படியென்றால், அவருக்கு 50, 60 வயதிருக்கும் என நினைத்துவிடாதீர்கள். இந்த இளம் தலைமை ஆசிரியருக்கு வயது 24 தான். `இந்தியாவிலேயே இளம் தலைமை ஆசிரியர்' என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவரின் பெயர் பாபர் அலி. மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்.








ஆசிரியர் பாபர் அலி பள்ளி
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாப்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபர் அலி, சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்குச் செல்வார். வழியெங்கும் வயல்வெளிகளில் சிறுவர்கள் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த பாபர் அலிக்குள் `நம்மைப்போல் இந்தச் சிறுவர்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?' என்ற கேள்வி எழுந்தது. பாபர் அலி சிறுவனாக இருந்தாலும் புத்திக்கூர்மைமிக்கவன். அந்தச் சிறுவர்களை அணுகி, `நீங்கள் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை?' என்று கேட்டான். ஒவ்வொருவரும் ஒரு கதையைச் சொன்னார்கள். கதையைக் கேட்டுக்கொண்ட பாபர் அலி, சிறுவர்களுடன் ஒரு டீல் போட்டுக்கொண்டான். `எனக்கு பள்ளி முடிந்ததும் தினமும் மாலையில் நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்துவிட வேண்டும். பள்ளியில் அன்றாடம் படித்ததை உங்களுக்குச் சொல்லித்தருவேன். நான்தான் உங்களுக்கு டீச்சர்' என்பதுதான் அந்த டீல். முதல் நாளில் 8 பேர் பாபர் அலியிடம் பாடம் படிக்க வந்தார்கள். வீட்டுக்கு அருகே ஒரு மரத்தின் அடியில் பாபர் அலியின் ஆசிரியர் பணி தொடங்கியது.
ஆசிரியர் பாபர் அலி பள்ளி
பாபர் அலியின் முயற்சிக்கு, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்திலிருந்து ஆதரவு கிடைத்தது. ஊரில் உள்ள பலரும், பாபர் அலியிடம் படிக்க வந்த குழந்தைகளுக்கு இனிப்பு உள்ளிட்ட பலகாரங்கள் கொடுத்து ஊக்கப்படுத்தினர். பாபர் அலி நடத்தும் மரத்தடிப் பள்ளி பற்றி அவன் படித்த பள்ளிக்கும் தகவல் எட்டியது. வியந்துபோன கணித ஆசிரியை வைஜெயந்தி, வாரத்துக்கு ஒரு சாக்பீஸ் பெட்டி ஸ்பான்சர் செய்தார். இதுதான் பாபர் அலியின் மரத்தடிப் பள்ளிக்குக் கிடைத்த முதல் ஸ்பான்சர். பாபர் அலி 6-வது வகுப்பு படிக்கும்போது, மரத்தடிப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதையடுத்து பாபர் அலியின் தந்தை, மகனுக்கு வீட்டு அருகில் சிறிய மரக்கொட்டகை அமைத்துத் தந்தார். மரத்தடியிலிருந்து கொட்டகைக்கு மாறியது பள்ளி. ஊரில் உள்ள பேராசிரியர் ஒருவரை வைத்து தன் பள்ளியைத் திறக்கவைத்தார் பாபர் அலி.
அவர் வளர வளர, பள்ளியும் வளரத் தொடங்கியது; மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. பாபர் அலி 10-ம் வகுப்பு படிக்கும்போது, தன்னிடம் படித்த சிறுவர்களை தானும் படித்த பெலந்தா பள்ளியில் சேர்த்துவிட்டார். பாபர் அலியின் பள்ளியில் கல்விச் சுற்றுலாகூட உண்டு. பாபர் அலி 10-ம் வகுப்பு படிக்கும்போது, அருகில் இருந்த ராமகிருஷ்ணா மடத்துக்கு தன் மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்ற கதையும் நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் பாபர் அலி பிஎஹச்.டி-யும் படிக்கவில்லை, ஆசிரியர் பயிற்சியும் படித்திருக்கவில்லை. மனமிருந்தால் மார்க்கம் உண்டு... இதுதான் பாபர் அலியின் கோட்பாடு.
ஆசிரியர் பாபர் அலிக்கு நல்லாசிரியர் விருது





சிறு வயது ஆசிரியரையும் அவரின் மாணவர்களையும் பார்த்து வியந்துபோனது ராமகிருஷ்ணா மடம். பாபர் அலி பள்ளிக்கு, இரு கரும்பலகைகளைப் பரிசாக அளித்தது.  2010-ம் ஆண்டு `ஆனந்த் சிக் ஷ நிகேதன்' என்ற பெயரில் பள்ளி பதிவுசெய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 21 வயது பாபர் அலி, இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனார். மேற்குவங்கக் கல்வித் துறை, இவரை நாட்டிலேயே இளவயது தலைமை ஆசிரியராக அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது ஆனந்த் சிக் ஷா நிகேதனில் 500 ஏழைக்குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.  இங்கு பள்ளிச் சீருடை, நோட்டுப்புத்தகங்கள், மதிய உணவு வரை குழந்தைகளுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இந்தப் பள்ளியில்  90 சதகிவித ஆசிரியர்கள் பெண்கள். பாபர் அலியின் உன்னதமான நோக்கத்தை அறிந்த மக்கள், நன்கொடைகளை வாரிவழங்குகின்றனர். கர்நாடக  அரசு, இவரின் வாழ்க்கையைப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் ஆக்கியுள்ளது. சி.என்.என். ஐ.பி.என் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஆசிரியர் பாபர் அலி
Don't miss this
#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்! #SportsVikatan
#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்! #SportsVikatan
``உணவு, உடை, நீர், காற்றுபோலவே அடிப்படைக் கல்வியும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம். 9 வயதில் நான் ஆசிரியராக வேண்டுமென்று கனவுகண்டேன். என் தந்தை வசதியானவர். என்னை டிஸ்கரேஜ் செய்து ஒரு வார்த்தைகூட அவர் பேசியதில்லை. குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்ள பெருக்கிக்கெள்ள  வாய்ப்பளியுங்கள். பிசினஸ்மேன் ஆக வேண்டுமென்று குழந்தை ஆசைப்பட்டால், ஆதரவு கொடுங்கள். அவர்கள் எதிர்காலத்தில் பிசினஸ்மேனாக ஜொலிப்பார்கள். மாறாக, உங்களுக்கு பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும் என்று ஆசை இருந்தால், அந்த  ஆசையை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். குழந்தைகள் தங்கள் விருப்பப்படி வளர அனுமதியுங்கள்'' என்று கூறும் பாபர் அலியின் கண்ணில்பட்ட எந்தக் குழந்தையும் படிக்காமல்போனது கிடையாதாம்!





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive