Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"TET தேர்வு குறித்த ஆசிரியர்களின் சந்தேகங்களும், அதற்கான விளக்கமும்" - பாடசாலையின் சிறப்பு கட்டுரை!

 



அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்,

TET தேர்வு குறித்த வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த சிறப்பு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

1). டெட் தேர்வு நடத்தப்படுமா இல்லையா?
திட்டமிட்டபடி தமிழக அரசால் நிச்சயம் TET தேர்வு நடத்தப்படும்.

2). சிறப்பு தகுதி தேர்வு நடத்த வாய்ப்பு உண்டா?
பல வருடங்களுக்கு முன்னால் பணியில் இருந்த கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கணினி ஆசிரியர்களுக்கு அன்றைய காலகட்டத்தில் வேறு எந்த விதமான தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களுக்கு என சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வை பொருத்தவரை முன்னதாகவே நடைமுறையில் உள்ளது. எனவே சிறப்பு தகுதி தேர்வாக நடத்தப்படுவதற்கு வாய்ப்பு குறைவு. எனவே அதற்காக காத்திருக்காமல் தற்போதே படிக்க துவங்குவது புத்திசாலித்தனமாகும். ஒருவேளை அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு தகுதி தேர்வை நடத்தினால் அது ஆசிரியர்களுக்கு போனஸ் மகிழ்ச்சி அளிக்கும்.

3). சிறப்பு தகுதித் தேர்வை எதிர்த்து வழக்கு தொடுத்தால் அவை ரத்து ஆகிவிடுமா? 
இல்லை, அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் அரிதிலும் அரிதாகவே தலையிடுகிறது. எனவே அதனை ரத்து செய்ய வழக்கு தொடுத்தாலும் அதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மேலே கேள்வி இரண்டில் கேட்கப்பட்ட வினாக்கள் நீதிமன்றத்தால் எழுப்பக்கூடும். இயல்பான தகுதி தேர்வை தவிர்த்து சிறப்பு தகுதி தேர்வினை நடத்த அவசியம் என்ன? என நீதிமன்றத்தால் கேட்கப்பட்டால் அதற்கு நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை வழங்குவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

4). தற்போதைய தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் குறைக்கப்படுமா? 
வாய்ப்புள்ளது. முன்னதாக முதுகலை ஆசிரியர் பணி நியமன தேர்வுகளில் ஆசிரியர்களின் பணி அனுபவத்தை முன்னிட்டு அதற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட வாய்ப்பு உண்டு. இது அரசின் கொள்கை முடிவு ஆகும். இவர்களுக்கு மட்டும் சலுகையா ? என வழக்கு தொடுக்கப்பட்டாலும் அவ்வழக்கு மிக விரைவாக முடிக்கப்பட்டு அரசின் முடிவிற்கே சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

5 ) இந்த வயதில் TET தேர்விற்கு படித்தே ஆக வேண்டுமா?
படிப்பதற்கு எல்லை இல்லை. எந்த பணியில் இருந்தாலும் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

6). TET தேர்வில் வெற்றி பெறுவது மிக கடினமா
மிக மிக எளிது என கூறுவதற்கு விருப்பம் இருந்தாலும், நிதர்சனம் அவ்வாறு அல்ல. சற்று கடினப்பட்டு படித்தால் மட்டுமே வெற்றி பெற இயலும். ஆனால் தொடர்ச்சியாக மாணவர்களுக்குரிய பாடங்களை நடத்தி பல வருட அனுபவம் பெற்ற ஆசிரியர்களாகிய நீங்கள் மிக மிக எளிதாக வெற்றி பெற இயலும் என்பது ஆசிரியர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளம் ஆகும். எனவே இன்றே படிக்க துவங்குங்கள்.

7). TET தேர்வு குறித்த அரசின் சீராய்வு மனு முடிவு தெரிந்த பிறகு படிக்கலாமா?
தற்போதைய நிலையில் தமிழக அரசு, கேரளா மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்திரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகளால் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும் பல மாநிலங்களும் இதேபோன்று தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். பிரச்சனையின் வீரியம் குறித்து உணர்ந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் முதல் கட்டமாக ஒரே வழக்காக பட்டியலிடும். பிறகு வழக்கு குறித்து மீண்டும் விவாதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம். வழக்கின் முடிவு வரும் வரை தற்போதைய தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட (Stay Order) வாய்ப்பு உள்ளது .

7). TET தேர்வு குறித்த தீர்ப்புக்கு பின், படிக்க துவங்கலாமா?
இந்த முடிவு மிக மிக தவறானது. படிப்பது என்பது ஆசிரியர்களுக்கு இனிப்பு போன்றது. தற்போதைய தகுதி தேர்வு, அல்லது சிறப்பு தகுதி தேர்வு, அல்லது பணியில் இருப்பவர்களுக்கு தகுதி தேர்வு தேவை இல்லை என எந்த முடிவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டாலும் அதற்கான கால அவகாசம் மிக அதிகமாகும். அதுவரை காத்திருக்காமல் உடனடியாக படிக்கத் துவங்குவது சால சிறந்தது.

 8). TET தேர்விற்கு எவ்வாறு படிப்பது? 
நீதிமன்றத்தில் வழக்கின் போக்கு செல்லும் பாதையை ஓரளவிற்கு கணிக்க முடியும் வரை படிப்பதில் எந்தவித சுணக்கமும் வேண்டாம். முழு மூச்சாக படிக்கவும்.
அவ்வாறு படிப்பது முதற்கட்டமாக அவரவர் பாடத்தில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாக படித்து முடிக்கவும். அவரவர் பாடம் அவரவருக்கு மிக எளிதானது. மேலும் தேர்வு இல்லை என்றால் கூட மாணவர்களுக்கு இதே பாடம் எட்டாம் வகுப்பில் இவ்வாறு கூடுதலாக வரக்கூடும். பத்தாம் வகுப்பில் இவ்வாறு மேலும் விளக்கமாக கூறப்படும் எனக் தொடர்பு படுத்தி கூறினால் மாணவர்கள் மிக மிக ஆர்வமாக கற்றலில் ஈடுபடுவார்கள். எனவே அவரவர் பாடத்தை முதலில் முழுமையாக படிக்க வேண்டும்.
பிறகு அடுத்த பாடமாக தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். தமிழ் பாடம் படிப்பது சற்று எளிதானது , தமிழர்கள் தமிழை முழுமையாக படிப்பது அவசியம் ஆகும். மேலும் அடுத்த தலைமுறை மாணவர்களையும் தமிழில் பிழை இல்லாமல் படிக்கவும் எழுதவும் ஊக்குவித்து தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்த இவை உதவும்.

மூன்றாவது பாடமாக சமூகவியல் அல்லது அறிவியல் பாடத்தை படிக்கத் துவங்கலாம். அதிக அளவிலான பாட கருத்துக்கள் உள்ள இப்பாடங்களை முழுமையாக படிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படும். எனவே திட்டமிட்டு தெளிவாக படிக்க வேண்டும்.

நான்காவதாக ஆங்கில பாடத்தை படிக்க துவங்கலாம். குறிப்பாக இலக்கணப் பகுதியிலும், உரைநடை பகுதியிலும் அதிக கவனம் செலுத்தி படிக்கவும்.

இதர அனைத்து பாடங்களையும் படித்து முடித்த பிறகு உளவியல் பாடத்தை படிக்க துவங்கலாம்.. உளவியல் பாடத்திற்காக முதலிலேயே அதிக நேரத்தை ஒதுக்குவது என்பது தவறு. ஏனெனில் பாடத்தின் கடினத்தன்மை உங்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்தலாம். இதனால் நம்மால் முடியாதோ என்ற எதிர்மறை எண்ணங்களை உங்களுக்கு உருவாக்கக்கூடும். எனவே உளவியல் பாடத்தை இறுதி கட்டமாக கட்டமாக படிக்க திட்டமிடுங்கள்.
உளவியல் பாடத்தைப் பொறுத்தவரை, DTEd & BEd ஆசிரியர் பயிற்சி காலத்தில் வழங்கப்பட்ட உளவியல் பாட புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கற்பித்தல் முறைகள் குறித்த புத்தகங்களை படிக்கவும். இவை முழுமையாக படித்து முடித்து விட்டதாக நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அடுத்த கட்டமாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற இதர பல பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் உளவியல் BSc Psychology & MSc Psychology பாடங்களுக்கான பாடப் புத்தகங்களை பெற்று படிக்கலாம். ஆனால் இவை மிக மிக அதிகமான பாட கருத்துக்கள் உள்ளவை. எனவே அதற்காக அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து அவரவர் பாடத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்கும் வகையில் தங்களை தயார் படுத்திக் கொள்ளலாம்.

9) TET கோச்சிங் சென்டர்க்கு  நேரடியாக சென்று படிக்கலாமா? அல்லது ஆன்லைன் கோச்சிங் எடுத்துக் கொள்ளலாமா?
முதலில் நீங்களாகவே படிக்க திட்டமிடுங்கள். தேர்வு எப்போது நடத்தப்பட இருக்கிறது? அதற்கு முன்னதாக எத்தனை வாரங்கள் அவகாசம் உள்ளது? அந்த அவகாசத்தை எந்தெந்த பாடத்திற்கு எத்தனை நாட்கள் என ஒதுக்கிக் கொள்ள வேண்டும் . தினந்தோறும் எந்தெந்த பாடங்களை படிக்கலாம்? அவற்றில் எத்தனை அலகுகளை முழுமையாக படிக்க வேண்டும்? உடனுக்குடன் படித்த பகுதிகளுக்கான மாதிரி தேர்வு எழுதி பார்த்து, விடுபட்ட விடைகள் எங்கு உள்ளது என கண்டறிந்து மீள தேர்வு எழுதி பார்க்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு செயல்படவும். அதுவே போதும்.

திட்டமிடவே நேரமில்லை. அல்லது 'திட்டமிட்டு விட்டேன்"  ஆனால் சோம்பல் காரணமாகவும் இதர பணிகள் காரணமாகும் அதனை கடைபிடிக்க இயலவில்லை என்பவர்களுக்கு - சரியான முடிவு, கோச்சிங் சென்டர்கள் செல்வது மட்டுமே ஆகும். ஏனெனில் அங்கு கட்டணம் செலுத்தி விட்டால் அந்த கட்டணம் வீணாகி விடுமே என்ற எண்ணத்தில் அதற்காகவாவது தொடர்ச்சியாக படிக்கும் எண்ணம் பலருக்கும் உள்ளது, அவர்கள் மட்டும் கோச்சிங் சென்டர்க்கு செல்லலாம். மேலும் பாடப்பகுதியை மிக எளிதாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி படிப்பது சில சிறப்பான கோச்சிங் சென்டர்களில் பயிற்சி வழங்கப்படும். மேலும் வாராந்திர தேர்வுகளில் சக ஆசிரியர் மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து தம்மை மேம்படுத்திக் கொள்ள இயலும். இதனை விரும்புபவர்கள் மட்டும் கோச்சிங் சென்டர் செல்லலாம்.

உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அந்த கேள்விகளை கமெண்டில் கேளுங்கள், அவற்றிற்கான விடையும் வழங்கப்படும்.

இப்படிக்கு,
பாடசாலை அட்மின் .




2 Comments:

  1. மிகவும் சிறப்பான மற்றும் நேர்மையான பதில் சார்,... மிக்க நன்றி

    ReplyDelete
  2. Chat GPT Answers waste of time

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive