NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஸ்தம்பித்தது!: ஜல்லிக்கட்டுபோராட்டத்தால் தலைநகர்.. அறவழியில் இளைஞர் படை; மக்கள் பெரும் ஆதரவு

     ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று, தமிழகம் முழுவதும், கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. போக்குவரத்து இன்றி, தமிழகத்தின் தலைநகர் சென்னை ஸ்தம்பித்தது.
தமிழக பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னையில் முழுமையான கடை அடைப்பு நடந்தது. ஆட்டோ மற்றும் கார் ஓட்டுனர் சங்கத்தினரும், அரசு மாநகர பேருந்து கழகத்தினரும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இதனால், சாலைகள் வெறிச்சோடின. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், போராட்ட களமான, மெரினா கடற்கரையில், இளைஞர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், 'பீட்டா' அமைப்புக்கு எதிராகவும், தமிழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் களம் இறங்கினர். தமிழகம் முழுவதும், இப்போராட்டம் பரவியது. மூன்று நாட்களை கடந்தும், போராட்டத்தின் வீரியம் குறையாததால், மத்திய, மாநில அரசுகள், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றன.
சென்னையில், பிரபல வணிக நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல் என, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டதால், அதன் ஊழியர்கள் அனைவரும், போராட்ட களத்தில் இறங்கினர். பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
பெரும்பாலான அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள், சாலையோரத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளை ஞர்கள் கறுப்பு உடை அணிந்து, ஜல்லிக் கட்டுக்கு ஆதரவு குரல் கொடுத்து, இருசக்கர வாகனத்தில் பவனி வந்தனர். நலச்சங்கத்தினர், பொது இடத்தில் பந்தல் போட்டு, உண்ணா விரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டு வண்டியிலும், வாகனங்களிலும், ஏராள மானோர், மெரினா நோக்கி படையெடுத்தனர். 
விளையாட்டு அரங்கம் 'வெறிச்'
வீரர், வீராங்கனைகள் வருகை இல்லாததால், நேரு விளையாட்டு அரங்கமே, வெறிச்சோடி காணப்பட்டது.பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், ஏதாவது ஒரு விளையாட்டு போட்டி, தினமும் நடந்து கொண்டே இருக்கும். மேலும், விளையாட்டு சங்கங்கள், நேரு விளையாட்டு அரங்கில் உள்ளன. அதனால், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
ஆனால் நேற்று, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் அதிகரித்தன. இதனால், விளை யாட்டு போட்டிகள், எங்கும் நடைபெற வில்லை. நேரு விளையாட்டு அரங்கம், விளை யாட்டு வீரர், வீராங்கனை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில்சரக்கு போக்குவரத்து முடக்கம்
ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக, சரக்கு வாகன போக்குவரத்து முடங்கியது.சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சென்னை -- பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை, சரக்கு வாகன போக்குவரத்துக்கு அதிகளவில் பயன்படுகின்றன.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக் கும் வகையில், சரக்கு வாகனங்கள் இயங்காது என, அதன் உரிமையாளர்கள், நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்டெய் னர், டேங்கர், சரக்கு லாரிகள் உள்ளிட்டவை, 95 சதவீத அளவிற்கு, நேற்று இயங்கவில்லை. 
சென்னைக்கு வரும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில், இந்த வாகனங்கள், நேற்று அணி வகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், ஜி.எஸ்.டி., சாலை, ஜி.என்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ் சாலை, நுாறடிச்சாலை ஆகியவற்றிலும், சரக்கு வாகனங்கள் போக்குவரத்து முடங்கியிருந்தது. 
இச்சாலைகளிலும், பெட்ரோல் பங்க், வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக, பலரும் டூ - வீலர், கார், வேன், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில், இச்சாலைகளில் அதிகளவில் பயணித்தனர். இதுபோன்ற வாகன போக்குவரத்து மட்டுமே, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் நேற்று இருந்தது.
போராட்ட களத்தில் இளம் பெண் மயக்கம்
மெரினா மாணவர் போராட்ட களத்தில், மயக்க மடைந்த பெண்ணுக்கு, விவேகானந்தர் இல்லத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர்.சென்னை மெரினாவில், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில், நேற்றுமுன்தினம், பெண் உட்பட மூன்று பேர் மயக்கமடைந்தனர். அவர்கள், அவசர ஊர்தி மூலம், அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போராட்ட களத்தின் எதிரே அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில், முதலுதவி செய்வதற்கு, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நண்பகல், 11:30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, தனியார் நிறுவன ஊழியர், ஜாஸ்மின் மயக்கமடைந்தார். அவருக்கு உடனடியாக, விவேகானந்தர் இல்லத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றஎழிலகம் ஊழியர்கள்
மெரினாவில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டத்தில், எழிலகம் அரசு ஊழியர்கள் நேற்று பங்கேற்றனர்.சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், போக்குவரத்து, வேளாண்மை, தோட்டக்கலை, பொதுப்பணி, நில நிர்வாகத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட துறைகளின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, மெரினா கடற்கரையில் நடந்து வரும் மாணவர்கள் போராட்டத்தில், எழிலகம் வளாகத்தில் உள்ள பல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். சில சங்கங்கள் சார்பில், மாணவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.
* மெரினாவில் நடக்கும் ஜல்லிக்கட்டு போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இயக்குனர் தங்கர் பச்சான், தன் மகனுடன் வந்தார். கூட்டத்தில், அவர் மகன் தொலைந்து விட்டதால், ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் வெளி யிட்டனர்; அதன் பின், அவரது மகன் கிடைத்தான்.
* போராட்ட களத்தில் இருந்த, நடிகர் ராகவா லாரன்சுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், போராட்ட களத்தில் இருந்து கிளம்பினார்.
* மெரினாவில், 10க்கும் மேற்பட்ட காளைகளுடன், மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
* மெரினா மணல் பரப்பில், 10க்கும் மேற்பட் டோர், கழுத்து வரைக்கும், மணலில் புதைந்து, வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* போராட்டத்தில் கலந்து கொண்ட குழந்தை களுக்கு, தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவசமாக பால் வழங்கப்பட்டது.
* குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக பலர் கலந்து கொண்டனர். இதனால், மெரினா கடற்கரை நிரம்பி வழிந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive