Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

‘சத்துணவு சாம்பியன் இந்த சூப்பர் சிங்கர்!’ - பிரித்திகாவுக்காக நெகிழும் ஆசிரியர்

“எங்கள் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாணவர் இறைவணக்கப் பாடலைப் பாடுவாங்க. அப்படித்தான் ஒருநாள் அவளும் பாடினாள்.
'நீராருங் கடலுடுத்த' பாடலை அந்தக் குரலில் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. அன்னிக்கு முழுக்க என் செவிகளில் அந்தக் குரல் மட்டுமே ஒலிச்சுட்டு இருந்துச்சு. அப்பவே பள்ளியின் சக ஆசிரியர்களிடம், 'நீங்க வேணும்ன்னா பாருங்க, இந்தக் குரல் நம் பள்ளி வளாகத்தைத் தாண்டி உலகம் முழுவதும் கேட்கும் காலம் வரும்'னு சொன்னேன்.
என் வார்த்தை நிஜமாகிடுச்சு” - கண்கள் விரிய நெகிழ்ச்சியான குரலில் சொல்கிறார் மாலதி. 'சூப்பர் சிங்கர் ஜூனியர் 5' பட்டத்தை வென்ற ப்ரித்திகாவின் தலைமையாசிரியர்.
ப்ரித்திகா குடும்பத்தினரோடு
திருவாரூர் மாவட்டம், தியானபுரம்தான் ப்ரித்திகாவின் சொந்த ஊர். வீட்டின் அருகிலிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ப்ரித்திகாவின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினார்கள். ஒவ்வொரு நாளும் ப்ரித்திகாவுக்குத் தேவையான அத்தனையையும் பெற்றோரின் அக்கறையோடு செய்தார்கள். அவர்கள் அன்பும் முயற்சியும் வீண் போகவில்லை. இன்று உலகமே ப்ரித்திகாவைக் கொண்டாடுகிறது.
மாலதியோடு சூப்பர் சிங்கர் ப்ரித்திகா
“அன்னைக்கு ப்ரித்திகா இறைவணக்கம் பாடிவிட்டு வந்ததுமே, வகுப்பிலும் பாடச் சொன்னேன். தமிழ்ப் பாடங்களில் வரும் பாடல்களை சொந்த மெட்டில் பாடுவாள். ஒருமுறை கேட்டாலே மனசுல பதிஞ்சுடும். அப்படி தொடர்ந்து பாடவெச்சோம். குரலை இன்னும் மெருகேற்ற திருவாரூரில் பாட்டு ஸ்கூலுக்கு அனுப்பினோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் என்பதால், ப்ரித்திகாவின் தேவைகளை நாங்களே பகிர்ந்து செஞ்சோம். 
சூப்பர் சிங்கரில் கலந்துக்கறதுக்கு முன்னாடி, வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள். இரண்டு முறை சென்னைக்கு அனுப்பிவெச்சோம். ஆனால், மூன்றாவது முறை சென்னைக்கு அனுப்ப அவள் அப்பா மறுத்துட்டார். நிறைய பேசி, சம்மதிக்கவெச்சோம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு டீச்சர் பொறுப்பேற்று ப்ரித்திகாவோடு போவோம்.
ப்ரித்திகா அம்மா மற்றும் ஆசிரியரோடு
அவள் டாப் பதினைந்துக்குள் வந்ததுமே ஆட்டம், பாட்டம், கச்சேரின்னு ஊரே களை கட்டிடுச்சு. கலெக்டர் ஸ்கூலுக்கு வந்து வாழ்த்திட்டுப் போனார். அப்பறம் நிறைய ஸ்பான்சர்ஸ் வந்தாங்க. ப்ரித்திகாவுக்கு எந்தக் குறையுமே இருக்கக்கூடாதுன்னு எல்லோரும் சேர்ந்து அவளை கவனிச்சிக்கிட்டோம். டாப் பத்துக்குள் வந்த பிறகும் ப்ரித்திகாவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அமைதியாகவே ஸ்கூலுக்கு வருவாள். சத்துணவுதான் சாப்பிடுவாள். 'மாறி மாறி சாப்பாடு எடுக்காதே, குரலுக்குப் பிரச்னை ஆகிடும்'னு சொல்லி, ப்ரித்திகாவின் அம்மாகிட்ட சமைச்சுக் கொடுக்கச் சொன்னோம்'' என்று ஒவ்வொரு நாளின் நிகழ்வையும் பரவசத்துடன் விவரிக்கிறார் தலைமையாசிரியர் மாலதி.
ப்ரித்திகா ஆசிரியர்களோடு!
''எங்க எல்லோரின் கனவும் எதிர்பார்ப்பும் அந்த நாளுக்காகக் காத்திருந்துச்சு. அன்னிக்கு ஊர் மக்கள் யாருமே சாப்பிடாமல் அவள் குரலுக்காகக் காத்திருந்தாங்கன்னு சொன்னால் அது மிகையில்லை. ப்ரித்திகா மேடை ஏறினதுமே பட்டாசு வெடிச்சாங்க. ப்ரித்திகாதான் டைட்டில் வின் பண்ணுவான்னு என் மனசுக்கு முன்னாடியே தெரிஞ்சுபோச்சு. அவளை என் மாணவியாகவே பார்க்கலை. என் பொண்ணாகவே நினைச்சேன். 
ரிசல்ட் வந்ததும் அவள் அம்மாவும் அப்பாவும் கீழே விழுந்து அழுத மாதிரி, ஊர் மக்களும் நாங்களும் சந்தோஷத்தில் அழுதோம். அந்த நிமிஷமே ப்ரித்திகாவைக் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்க ஏங்கினேன். அவளின் வெற்றிக்கு எல்லா அரசுப் பள்ளி ஆசிரியர்களும் காரணம்னு என்னால் உறுதியா சொல்ல முடியும். 
ஒரு ஏழைப் பொண்ணா, அரசுப் பள்ளி மாணவியாக நாங்க ப்ரித்திகாவை சென்னைக்கு அனுப்பிவெச்சோம். இன்னைக்கு எங்க பொண்ணு சூப்பர் சிங்கர் ப்ரித்திகாவா திரும்பி வந்திருக்கா. மேளதாளம் முழங்க கொண்டாட்டத்தோடு வரவேற்றோம். இது எங்க எல்லோர் மனசையும் நிறைவாக்கி இருக்கு” என உற்சாகம் குறையாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் தலைமையாசிரியர் மாலதி.




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive