''சென்னை மாநகராட்சி பள்ளிகளின், கல்வி தரத்தை மேம்படுத்த, தன்னார்வ
அமைப்புகள் முன் வர வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ்
பேசினார்.சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகையில், மாநகராட்சி பள்ளிகளின்
கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, தன்னார்வ கல்வி அமைப்புகளுடன்,
ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.இதில், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ்
பேசியதாவது:சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 281 பள்ளிகள் உள்ளன.
இதில், 2 லட்சம் மாணவ - மாணவியர் படிக்க முடியும். ஆனால், 85 ஆயிரம் பேர்
தான் படிக்கின்றனர்.மீதமுள்ள, 1.15 லட்சம் மாணவர் சேர்க்கையை,
நிரப்புவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.அதற்காக, மாநகராட்சி
பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை கண்டறிய, மூன்று குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு குழு, பள்ளிகளில், நல்ல வகுப்பறைகள், கழிப்பறைகள், மைதானங்கள்,
விளையாட்டு உபகரணங்கள், ஸ்மார்ட் கிளாஸ் என, அனைத்து வசதிகளின் நிறை,
குறைகளை ஆய்வு செய்யும்.மற்றொரு குழு, ஆசிரியர்களின் கல்வி கற்றல் திறனை
மேம்படுத்தி, எளிமையாக பாடம் நடத்தும் முறையை ஆராய்கிறது.மூன்றாவது குழு,
மாணவர்கள் இடைநிற்றல் தடுப்பது போன்றவைகளை ஆராய்கிறது. இந்த குழுக்களின்
அறிக்கை, ஜூலை, 10ல் சமர்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், 100 - 125
கோடி ரூபாய் செலவில், தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த முடியும்.
இதற்கிடையே, மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, தன்னார்வ
அமைப்புகளின் பங்களிப்பு அவசியம்.தற்போது, சில அமைப்புகள், ஓரிரு
பள்ளிகளில் மட்டுமே சேவையாற்றுகிறது. அந்த சேவை, அனைத்து மாநகராட்சி
பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும்.மாநகராட்சி பள்ளிகளில், பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவர்கள் தான், அதிகம் படிக்கின்றனர். அவர்களுக்கு, அனைத்து
கட்டமைப்பு மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.அதேபோல், அனைத்து
தரப்பினரும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் நிலையை உருவாக்க
வேண்டும்.தன்னார்வ அமைப்புகள், எத்தனை பள்ளிகளில் சேவையாற்ற முடியும்;
அதற்கு நிதி ஆதாரங்கள் தேவையா; மாநகராட்சி ஏதேனும் நிதி வழங்க வேண்டுமா;
தன்னார்வ அமைப்புகளே நிதியை திரட்டி கொள்ளுமா உள்ளிட்டவை குறித்து
ஆலோசிக்கவே, இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.வரும் காலங்களில், இதுபோன்ற
கல்வித்துறை பணிகளுக்காக, மாநகராட்சி பட்ஜெட்டில், கூடுதல் நிதி
ஒதுக்கப்படும்.தன்னார்வ அமைப்புகளுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஆலோசனை
கூட்டம் நடத்தப்படும். கல்வி தொண்டு செய்ய நினைக்கும், அனைத்து தன்னார்வ
அமைப்புகளும், மாநகாட்சி பள்ளிகளில் சேவையாற்றலாம்.இவ்வாறு, அவர்
பேசினார்.கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர், குமாரவேல் பாண்டியன்
உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
Revision Test 2026
Public Exam 2026
Home »
» பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...