மத்திய
அரசு ஊழியா்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின்
பரிசீலனையில் இல்லை என மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர
சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய அரசு ஊழியா்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறாா்கள். இதை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. குடிமைப் பணிகளில் இளைஞா்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு துறைகளுக்குத் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் ரோஸ்கா் மேலா (வேலைவாய்ப்பு முகாம்களை) மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும்’ என்று குறிப்பிட்டிருந்தது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...