அரசு மற்றும் அரசு உதவி மற்றும் தனியார் பள்ளியிலும், தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் சமச்சீர் கல்வி சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, மாணவர் சேர்க்கை, பாட திட்ட விதிமுறை, புத்தகங்கள் வாங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம், பல பள்ளிகள், அரசு வழங்கும் புத்தகங்களை விட கூடுதலாக, தனியாரிடம் பல புத்தகங்களை வாங்கி, மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றன. குறிப்பாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இந்த செயலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, அனைத்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும், புத்தகப் பையின் எடையை, நீதிமன்ற உத்தரவுப்படி பின்பற்ற, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், 2ம் வகுப்பு வரை, 1.5 கிலோ; 3, 4ம் வகுப்புகளுக்கு, 2 கிலோ; 5ம் வகுப்புக்கு, 2.2 கிலோ; 6ம் வகுப்புக்கு, 3.25 கிலோ; 7ம் வகுப்புக்கு, 3.35 கிலோ மற்றும் எட்டாம் வகுப்பு, 3.75 கிலோ என, புத்தக பையின் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 
 
கடந்த, 2011ல் முப்பருவ தேர்வு மற்றும் பாடத் திட்ட முறை அமலாகும் முன், இந்த எடை அளவு, இரண்டு மடங்காக இருந்தது. தற்போது, புத்தக பையின் அளவு, பாதியாக குறைக்கப்பட்டது. 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளிகளுக்கான புத்தகப் பையின் எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, பள்ளிகள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் உடல் திறனை பாதிக்கும் வகையில், அவர்களுக்கு சுமையை ஏற்படுத்த கூடாது' என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.