சென்னை:அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில், 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, வரும், 23ம் தேதி, போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, மார்ச், 20ல் துவங்கி, பிப்., 10ல் முடிந்தது.தேர்வு எழுத, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட், நேற்று வெளியிடப்பட்டது.தேர்வர்கள், தங்களின் பயன்பாட்டு குறியீட்டு எண் மற்றும் ரகசிய உள்ளீட்டு வார்த்தையை பயன்படுத்தி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்துக்கு, தேர்வர்கள், காலை, ௮:௩௦ மணிக்கு முன், வந்து விட வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ளபடி, ஏதாவது, ஒரு அசல் அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப பதிவின்போது, பதிவேற்றம் செய்த, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.