முதுநிலை இன்ஜினியரிங் படிப்பு மற்றும் மேலாண்மை படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்கு, தமிழக அரசு சார்பில், நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு, அண்ணா பல்கலை கல்லுாரிகளுக்கு மட்டும், தனியாக நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு, அண்ணா பல்கலைக்கு, அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள் என, அனைத்து கல்லுாரிகளுக்கும் சேர்த்து, டான்செட் நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில், எம்.சி.ஏ., படிப்பதற்கு, நேற்று முன்தினம் காலையும், எம்.பி.ஏ.,வுக்கு, நேற்று முன்தினம் பிற்பகலிலும் தேர்வு நடந்தது.நேற்று காலை, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கு, தேர்வு நடந்தது. இரண்டு நாள் தேர்விலும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், ஜூலையில் வெளியிடப்பட உள்ளதாக, டான்செட் கமிட்டியினர் தெரிவித்தனர்.