NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று “மஹாளய அமாவாசை” - கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா?


முன்னோர்கள் வழிபாடு என்பது நமது பாரத நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மையான மக்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். வருடந்தோறும் வரும் “தை அமாவாசை, ஆடி அமாவாசை” வரிசையில் “புரட்டாசி” மாதத்தில் வரும் அமாவாசை தினம் “மஹாளய அமாவாசை” தினம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் இந்த புனித நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம்கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவர்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம்.

இந்த அமாவாசை தினத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தின் மறுநாளான பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இக்காலத்தில் உங்களுக்கு தீட்டு ஏற்படும் வகையிலான நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்திருந்தால் மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. மறைந்த உறவினரின் 16 ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன், ஐப்பசி மாதத்தில் மாத சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கலாம்.
மஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது,போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்று தரும் செயலாக இருக்கும். பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல் தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.

தெய்வங்களுக்கு உகந்த காரியங்களைச் செய்யும்போது பக்தியுடனும் பித்ருக்களுக்கு உரிய காரியங்களைச் செய்யும்போது சிரத்தையுடனும் செய்யவேண்டும். சிரத்தையுடன் செய்யவேண்டிய காரியம் என்பதாலேயே ஆண்டுக்கொருமுறை செய்யும், முன்னோர்களுக்கு அன்னமிடும் சடங்கை `சிராத்தம்' என்கிறோம்.

பொதுவாக மூன்று வழிகளில் முன்னோரை வழிபடலாம். ஒன்று எள்ளும் தண்ணீரும் விட்டுத் தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று ஹிரண்ய சிராத்தம், அதாவது நாம் முன்னோராகப் பாவிக்கும் ஒருவருக்குக் கால்கழுவி தட்சிணை கொடுப்பது. மூன்றாவது அன்ன சிராத்தம். இவை மூன்றுமே விசேஷமானவை என்றாலும் வசதி அற்றவர்கள் குறைந்தபட்சம் தர்ப்பணமாவது செய்ய வேண்டியது அவசியம்.


இன்றைய காலத்தில் இந்தச் சடங்குகள் குறித்துப் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. எள்ளும் தண்ணீரும் விட்டு வழிபடுவதால் என்ன நன்மை நிகழ்ந்துவிடும் என்று வினா எழுப்புகிறார்கள். இவை குறித்து நம் வேதங்களும் சுருதிகளும் மிகவும் விளக்கமாகப் பேசுகின்றன.

மஹாளய பட்ச சமயத்தில் விஸ்வே தேவாதி தேவர்கள், மனிதர்களுக்குப் புண்ணியம் ஏற்படச் செய்ய பூவுலகில் வந்து தங்குகிறார்கள். விஸ்வே தேவர்களே நாம் செய்யும் கர்மாகாரியங்களில் தரும் உணவையும் எள்ளையும் தண்ணீரையும் ஏற்று அதன் பலன்களை உரிய ஆத்மாவுக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்கள் என்கின்றன வேதங்கள்.

இறந்துபோன நம் முன்னோர்கள் எப்போதும் பித்ரு லோகத்திலேயே இருப்பதில்லை. அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறவி எடுப்பார்கள். அவ்வாறு ஒருவர் எந்த உயிராகப் பிறந்திருந்தாலும் அல்லது பித்ருலோகத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நாம் இடும் உணவின் சத்து கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கிறது சாஸ்திரம். இதற்கு உதாரணமாக, அந்த ஆத்மா மாடாகப் பிறந்திருந்தால் அதற்கு வைக்கோலாகவும் குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாகவும் இவை மாற்றப்பட்டுக் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் என்கின்றன. மனிதர்களாகவே பிறந்திருந்தாலும் அவர்களுக்கு அதன்பலன் போய்ச் சேரும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் திருப்தியே நமக்கு ஆசீர்வாதமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

பித்ருலோகத்திலேயே நம் முன்னோர்கள் இருந்தால் அவர்கள், நாம் செய்யும் கர்மாக்களால் மகிழ்ந்து நமக்கு மனமார ஆசி வழங்குவர். இதனால் இந்த வாழ்வில் துன்பங்கள் நீங்கி நன்மைகளையும் சுகத்தையும் அடையலாம். `எனக்கு ஏன் இவ்வளவு சோதனைகள் வருகின்றன' என்று பலரும் சோதனைகளின் காரணம் அறியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் அருமருந்தாக அமைவது முன்னோர் வழிபாடு.


குறிப்பாக நவகிரக மாற்றங்களால் நிகழும் கெடுபலன்களைக் குறைக்கும் வலிமை முன்னோர்களின் ஆசிகளுக்கு உண்டு. எப்படித் தன் குழந்தையைக் கல்லிலும் முள்ளிலும் நடக்கவிடாமல் ஒரு தந்தை சுமந்து செல்வாரோ அதேபோல பித்ருக்களின் ஆசி நம்மை வாழ்வில் பெரும் சிரமங்களைச் சந்திக்காமல் கடந்து செல்ல உதவும்.


நாளை, மஹாளய அமாவாசை. சனிக்கிழமை வரும் இந்த அமாவாசை தினத்தில் தந்தையில்லாதவர்கள் தவறாமல் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபடுங்கள். தமிழ் மரபில் 'தென்புலத்தார் வழிபாடு' என்று இந்த வழிபாடு போற்றப்படுகிறது. அவரவர்கள் தங்களின் குடும்ப வழக்கப்படி வீட்டிலோ அல்லது நதிக்கரைகளுக்கோ சமுத்திரக் கரைகளுக்கோ சென்று முன்னோருக்குச் செய்யவேண்டிய வழிபாட்டினை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் விட்டு வேண்டிக்கொள்வது அவசியம்.


எள் சனிபகவானுக்கு உரிய தானியம். எனவே, இந்தச் சடங்கைச் செய்வதன்மூலம் சனிபகவானின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். இயன்றவர்கள் வறியவர்களுக்கு உணவும் வஸ்திரமும் தானம் செய்யுங்கள். அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சி, நமக்கு மன நிம்மதியையும் செல்வச் செழிப்பையும் கொண்டு சேர்க்கும்.

 எனவே ( 28.9.19) தவறாது முன்னோரை வழிபடுங்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive