ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி களில் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு, குளியல் சோப், ஷாம்பு உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய, பொலிவு பராமரிப்பு கிட் வழங்க, தாட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தாட்கோ அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் முழுதும், 170 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லுாரி மாணவர் விடுதிகள் உள்ளன. இவற்றில், 19,000 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு குளியல் சோப், ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்க, அரசு தரப்பில் மாதம் 150 ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள சந்தை விலையில், அந்த ரூபாயில் மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவது கடினம்.
எனவே, தாட்கோ வாயிலாக, மாணவர்களுக்கு சிறந்த முறையில் குளியல் சோப், ஷாம்பு உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய பொலிவு பராமரிப்பு கிட் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாணவர்களுக்கு நான்கு குளியல் சோப், 200 மி.லி., தேங்காய் எண்ணெய், 200 மி.லி., ஷாம்பு, இரண்டு துணி துவைக்கும் சோப், அரை கிலோ சலவை பவுடர், பேஸ்ட், பிரஸ் உள்ளிட்ட ஏழு பொருட்கள் அடங்கிய பொலிவு பராமரிப்பு கிட் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட உள்ளது.
பொலிவு ஹெல்த்கேர் சொசைட்டி நிறுவனத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரை வைத்து, பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதிகளில் படிக்கும் 2,500 மாணவர்களுக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் பொலிவு பராமரிப்பு கிட் வழங்கப்பட உள்ளது.
அதற்கடுத்த மாதங்களில், தமிழகம் முழுதும் உள்ள விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...