கொரோனாவால் வேலையை இழந்தாலும், மகளின் பொம்மையால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் மாஜி ஆசிரியை.
பெங்களூரை சேர்ந்தவர்கள் தேஜஸ்வி - திவ்யா தம்பதி. தனியார் பள்ளியில் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர். உலகம் முழுதும் கொரோனா தொற்று பரவிய நேரத்தில், இருவரும் பணியை இழந்தனர். இதனால், வேறு வேலையை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய ஐடியா
ஒரு நாள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திவ்யா யோசித்து கொண்டிருந்தார். அப்போது தன் மகள், பொம்மைகள் வைத்து விளையாடி கொண்டிருப்பதை பார்த்தார். அப்போது திவ்யா சிறுவயதில், அவரது தாயார் பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வது நினைவுக்கு வந்தது.
உடனடியாக மகளின் பொம்மைகளை வைத்து, அதற்கு அழகான இந்திய ஆடைகள் போன்று வடிவமைத்து, பொம்மைகளை அலங்காரம் செய்தார். அதை தனது மொபைல் போனில் படம் பிடித்து, தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.
மறுநாள் இந்த பொம்மையை பார்த்தவர்கள், தங்களுக்கு இந்த பொம்மை வேண்டும். எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதனால் உற்சாகம் அடைந்த திவ்யா, அன்று முதல், லலிதா டால்ஸ் என்று தனது மகளின் பெயரில் பொம்மைகளுக்கு விதவிதமான ஆடைகள் அணிவித்து, விற்க துவங்கினார். பரிசளிக்கும் நோக்கத்திற்காக, 20 தனிப்பட்ட பொம்மைகள் செய்து கொடுத்தார். அன்று முதல் திரும்பி பார்க்காமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் செல்கிறார்.
பிளாஸ்டிக், செயற்கை பொருட்கள், கம்பளி, நுால் ஆகியவற்றால், பொம்மைகளை தனித்துவமாக்குவது, நமது கலாசார அடையாளங்கள் தான். இதன் மூலம் இந்திய மரபுகள், பன்முகத்தன்மையை அனைவரும் அறிகின்றனர்.
ரூ.10 லட்சம்
பொழுதுபோக்காக பொம்மைகளுக்கு அலங்காரம் செய்த திவ்யா, அதையே வணிக ரீதியாகவும் மாற்றினார். அத்துடன் பொம்மைகளுக்கு ஆடை, ஆபரணங்களை அவரே தயாரிக்கிறார். இவரின் லலிதா டால்ஸ், வணிக துறையில் புதிய, என்ட்ரியாக வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
பொம்மைகளை அலங்காரம் செய்ய, ஐந்து பெண்களை வேலைக்கு அமர்த்தி உள்ளார். அவர்கள், பொம்மைகளை அலங்கரிப்பதுடன், தங்கள் வாழ்வாதாரத்தையும் பார்த்து கொள்கின்றனர்.
இவரின் பொம்மைகள், கடல் கடந்து அமெரிக்கா, கனடா, மலேசியா, கொரியா வரை பறந்து செல்கின்றன. இதன் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார். வாடிக்கையாளர்கள் கைவினைத்திறனை மட்டுமல்ல, ஒவ்வொரு பொம்மைகளிலும் உள்ள நம் கலாசார தொடர்பையும் பாராட்டுகின்றனர்.
தனது பிராண்ட் ஏற்கனவே உலகளவில் பிரபலமடைந்து வரும் நிலையில், தனது தொழிலை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறார். லலிதா டால்ஸ் என்ற பெயரில் கடை திறப்பதையே தனது குறிக்கோளாக கருகிறார்.
திவ்யாவின் இந்த படைப்பு, புதுமைக்கு ஒரு சான்றாகும். வேலை இழந்த நேரத்திலும், தனது படைப்பாற்றல், ஆர்வத்தை ஒரு தொழிலில் செலுத்தி, முன்னேறி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...