எஸ்.எஸ்.எல்.சி தனித்தேர்வுகள் வரும் 15ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்காக 3 மாவட்டங்களில் நேற்று (11ம் தேதி) முதல் ஹால் டிக்கெட்கள் வழங்கும் பணிகள் தொடங்கின.
எஸ்.எஸ்.எல்.சி/ ஓ.எஸ்.எல்.சி/ ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலும், மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் வரும் 15ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வுகள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி காலை 10 மணி முதல் 12.45 மணி வரை நடக்கிறது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து தனித் தேர்வர்களுக்கும் வரும் 13ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வுக்கு பின்னர் தேர்வு மையங்களில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை நேரில் சென்று பெற இயலாதவர்கள் தங்களது சுய முகவரியிட்ட உறையில் 30 ரூபாய்க்கான ஸ்டாம்ப் ஒட்டி உறையை தேர்வு எழுதும் நாளில் தேர்வுக் கூட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் கமலா தெரிவித்தார்.