Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டுக் கல்வியில் இந்தியா: சில துளிகள்


2 - வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா பெற்றுள்ள இடம்


10.22 லட்சம் - ஒரு இந்திய மாணவன் ஒரு வருடத்திற்கு சராசரியாக வெளிநாட்டில் செலவழிக்கும் தொகை

27,000 கோடி - ஒரு வருடத்திற்கு இந்திய மாணவர்கள் செலவழிக்கும் தொகை.


ஆஸ்திரேலியா - மிக அதிகமாகக் கல்விச்செலவு ஆகும் நாடு.

ஜெர்மனி - குறைவாகக் கல்விச்செலவு ஆகும் விருப்பத்திற்குறிய நாடு.

635 டாலர் - ஜெர்மனியில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஆகும் கல்விச் செலவு.

5,650 டாலர் - ஜெர்மனியில் சராசரியாக ஒரு வருடத்திற்கு ஆகும் தங்கும் செலவு.

75,000 டாலர் - ஒரு இந்திய மாணவன் வெளிநாட்டிற்கு ஒரு வருடத்தில் எடுத்துச் செல்லும் அதிகபட்ச தொகை.

வெளிநாட்டுக் கல்வி: முடிவெடுப்பதில் இருக்கும் நன்மைகளும், பாதிப்புகளும்

வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு விருப்பப்பட்டவுடன், நாம் ஆலோசனை கேட்கும் நபர்களிடமிருந்து வரும் முதல் தகவல் வெளிநாட்டுக்
கல்விக்கான முகவர்களை சந்தியுங்கள் என்பதாகத் தான் இருக்கும். ஏனெனில் அவர்கள் தான் அடிக்கடி தங்களை விளம்பரப்படுத்தியதன் மூலம் பெரும்பாலோனோரின் நினைவில் இருப்பர்.

சற்று விபரமான நண்பர்கள் கல்வி ஆலோசகர்களை சிபாரிசு செய்வர். வெளிநாட்டில் கல்வி பயில்பவர்களை நண்பர்களாகவும், உறவினர்களாகவும் கொண்டவர்கள் தாங்களே நேரடியாக விண்ணப்பிப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்துவர்.

இப்படி மூன்றுவிதமாகத் தான் பெரும்பாலான மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். மேற்கண்ட ஒவ்வொரு முறையிலும் சாதகங்களும், பாதகங்களும் உள்ளன. நமது சூழ்நிலைகள் எந்த முறைக்கு ஏற்றவாறு சாதகமாக இருக்கிறதோ அந்த முறையை தேர்தெடுப்பது, வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான பயணத்தை எளிதாக்கும்.

வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை நிறுவனங்கள் & முகவர்கள்

நன்மைகள்

நீங்கள் சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்க வெளிநாட்டுக் கல்விக்கான முகவர்கள் உதவுகிறார்கள். கல்லூரியில் சேர்வதற்கான ஆவணங்களை சரி பார்த்து, குறிப்பிட்ட காலத்திற்குள் கல்லூரியில் சேர்வதற்கு துணை புரிகின்றனர். மாணவருக்கான விசா, வெளிநாட்டுப் பயணத்திற்கான பயணச் சீட்டுக்களையும் பெற்றுத்தருகின்றனர்.

வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கான விபரங்கள் அனைத்தையும் முகவர் தெளிவாக தெரிந்து வைத்திருப்பதால், சேர்க்கை குறித்து எந்தவித பயமும் மாணவருக்குத் தேவையில்லை.

ஒரு சில முகவர்கள் ஜி.ஆர்.இ., ஜிமேட், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற தேர்வுகளை எழுதுவதற்கும் துணைபுரிகின்றனர்.

பாதிப்புகள்

பல்கலைகள் குறித்து நீங்கள் தெளிவில்லாமல் இருந்தால், கல்லூரியை தேர்தெடுக்க உங்களுக்கு உதவுகிறார்கள். ஆனால், அந்த கல்லூரி உங்களின் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்பதனை உறுதியாக கூற முடியாது.

சில முகவர்கள் தங்கள் சேவைகளுக்காக அதிகமான பணத்தைப் பெறுகின்றனர். நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும் என கருதினால் அது முடியாது.

விண்ணப்பதாரர்களுக்கும் பல்கலைக்கும் இடையே பாலமாக முகவர்கள் செயல்பட்டாலும், ஒரு சில நேரங்களில் அதிகமான விண்ணப்பங்கள் வரட்டும் என்று உங்கள் விண்ணப்பத்தையும் காத்திருப்பில் வைத்திருப்பர்.

கல்வி ஆலோசகர்கள்

நன்மைகள்

நீங்கள் எந்த நாட்டில் படிக்க வேண்டும் என்றோ அல்லதோ எந்த படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றோ தெளிவில்லாமல் இருந்தால், சரியான முடிவை எடுப்பதற்கு கல்வி ஆலோசகர்கள் உதவுவார்கள்.

உங்களுக்கான சரியான படிப்பை தேர்ந்தெடுத்து தருவதற்காக திறன் தேர்வுகளை நடத்துவர். மேலும், உங்கள் பெற்றோரிடமும் கருத்துக்களைக் கேட்டு ஒவ்வொருவரிடமும் தனியான அக்கறை செலுத்துவர்.

கல்வி ஆலோசகரின் ஆலோசனையின் படி பல்கலைக்கழகத்தையும், படிப்பையும் தேர்ந்தெடுக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான விதிமுறைகளையும் விளக்கிக் கூறுவர். நீங்கள் விரும்பினால், விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பி பணத்தை சேமிக்கலாம்.

பாதிப்புகள்

அனைத்து ஆலோசகர்களும் சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். ஒரு சிலர் சேர்க்கை விதிமுறைகளை மட்டும் விளக்கமாகக் கூறி, உங்களை விண்ணப்பங்களை அனுப்ப கூறுவர்.

உங்கள் விருப்பங்கள், திறமைகள் பற்றி ஆராய்ந்து ஆலோசனைகளை ஆலோசகர்கள் கூறுவர். ஒரு சில நேரங்களில் இது போன்ற நடைமுறைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி சரியான முடிவெடுப்பதில் திணறலை ஏற்படுத்தி விடும்.

முகவர்களைப் போன்று ஆலோசகர்களும் ஏதேனும் பல்கலைகளுடன் இணைந்து செயல்படுபவர்களாக இருந்தால், உங்களையும் அந்த பல்கலையில் சேர்வதற்குண்டான வழியில்
நடத்திச் செல்வர்.

நேரடியாக விண்ணப்பித்தல்

நன்மைகள்

முகவர்களையும், ஆலோசகர்களையும் விட நாமே நேரடியாக விண்ணப்பிப்பது சிக்கனமானதாகும்.

பெரும்பாலான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்கள் எளிதாக உணர்ந்துகொள்ளும் விதத்தில் தகவல்களை வழங்குகின்றன. மேலும், சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு தனி அலுவலர்களை நியமித்து விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கும் விடையளிக்கின்றனர்.

பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதன் மூலம் பல்கலை உங்களிடம் நேரடியாக தொடர்புகொள்கிறது. இதன் மூலம் உங்களுக்கான கடமைகள், விதிமுறைகள் குறித்து தெளிவு பெறுகிறீர்கள்.

பாதிப்புகள்

விண்ணப்பிப்பதற்கான ஆவணங்கள், விசா நடைமுறைகள், தேர்வுகள், உதவித்தொகைகள் போன்றவை குறித்தும், சரியான நேரத்தில் விண்ணப்பிப்பது குறித்தும் பெரும் கவலையும், பயமும் உங்கள் மனதில் உருவாக வாய்ப்பிருக்கிறது.

வெளிநாட்டுக் கல்விக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும்பொழுது, உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு, ஆலோசகர் கிடைப்பது கடினமான ஒன்றாகிவிடும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகள், புதிய உதவித்தொகைகள், மாற்றங்கள் போன்றவை குறித்த தகவல்களையுடையவர்களாக முகவர்கள் இருப்பர். நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கும்பொழுது தற்போதைய உடனடி மாற்றங்கள் குறித்து தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive