NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் மகளிரின் சிறப்பு: முத்துலட்சுமி ரெட்டி

           இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.
          புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
 
பிறப்பு: “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”,-என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி அய்யருக்கும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மா தம்பதியருக்கு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மூத்தமகளாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சுந்தரம்மாள், நல்லமுத்து என்று இரண்டு தங்கைகளும், இராமையா என்று ஒரு தம்பியும் ஆகும்.
குழந்தை பருவத்திலிருந்தே இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். பெண்கள் கல்வி கற்க தயங்கி அந்தக்காலத்திலேய கல்லூரிக்கு சென்று படித்தார். 1907ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். 1912ல் மருத்துவப்பட்டம் மருத்துவராக வெளியே வந்தார். இந்தியாவிலேயே மருத்துவம் படித்த முதல் பெண் என்று பெயர் பெற்றார் முத்துலட்சுமி ரெட்டி.
மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினார்.
திருமணம்: அனைவரது பெற்றோர் போல, முத்துலட்சுமியின் பெற்றோரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் இதற்கு இவர் சம்மதிக்கவில்லை. மாறாக திருமணம் என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை பறித்து விடும் எனவும், வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு அடங்கி வாழ்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி திருமணத்தை மறுத்து விட்டார். படிப்பிலும், சமூகப் பணியிலுமே அதிக ஆர்வம் செலுத்தி வந்த முத்துலட்சுமி ரெட்டி சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு திருமணத்திற்கு சம்மதித்தார். இதையடுத்து அடையாறில் (Anni Besant) அம்மையாரால் நிறுவப்பட்ட தியாசபிகல் சொசைட்டி எனும் பிரம்மஞான சபையில் 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துலட்சும் - சுரந்தரரெட்டி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருமே மருத்துவர்கள் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி தாய்-தந்தையைப் போல மருத்துவர்.
சமூகப்பணி: முத்துலட்சுமியின் அறிவு ஆற்றலை அறிந்த அரசாங்கம் பெண்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான விசேஷ பயிற்சி பெற, உபகாரச் சம்பளம் கொடுத்து ஆவரை இங்கிலாந்து அனுப்பியது. அங்கு 11 மாதம் தங்கி உயர் பயிற்சி பெற்று வந்தார்.
1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய செற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
தமிழக மேலவைக்கு உறுப்பினராக 1926 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி ஒழிப்புத் திட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை இவரின் சிறந்த பணிகள். தொடர்ந்து அவர் பெண்கள் விழிப்புணர்ச்சிக்கும், பெண்கள் காப்பகங்களுக்கும் சேவை செய்ய ஆரம்பித்தார்.
இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தர்மம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.
வறுமையில் வாடிய பெண்களுக்கும், நடத்தையில் தடம் தவறிய பெண்கள் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிடுவது வழக்கமாக இருந்து வந்தது. அந்த மாதிரியான அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
முத்துலட்சுமி, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, கலக்கம் அடைந்தாலும், விரைவில் மனதை திடப்படுத்திக் கொண்டு, மக்கள் சேவைக்கே தன் முழுநேரத்தையும் செலவிட ஆரம்பித்தார்.
முத்துலட்சுமி ரெட்டியின் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது தகுந்த சிகிச்சையும், நல்ல மருத்துவ மனைகளே இல்லாத காரணத்தால் இளம் வயதிலேயே இறந்து போனார். இதனால் தன் தங்கைக்கு தான் ஒரு மருத்துவராக இருந்தும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது என்று மிகவும் வருத்தமடைந்தார். தன் தங்கைக்கு ஏற்பட்ட கதி மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றவர். 1925 ல் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் லண்டன் சென்று அங்குள்ள செல்சியா மருத்துவமனையில் தாய், சேய் மருத்துவ ஆராய்ச்சியும், இராயல் புற்றுநோய் மருத்துவனையில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வந்தார்.
அதன் பலனாக சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் அன்றைய பாரதப் பிரதமர் நேரு அவர்கள் 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார்.
1936 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் குடியேறியப் பிறகு முழு நேர மருத்துவ உதவிகளோடு மீனவக் குழந்தைகளின் கல்விக்காவும் பாடுபட்டார். நூல்கங்களை உருவாக்கினார். மருத்துவர் செளந்திரம் ராமச்சந்திரன் துணையோடு காந்திகிராமப் பணிகளைத் தொடங்கினார்.
மறைவு: ஆண்டவனின் படைப்புகளில் அதி அற்புதமான படைப்பான முத்துலட்சுமி ரெட்டி (Dr Muthulakshmi Reddy), புற்று நோய் என்னும் அரக்கனுக்கு எதிராக பல போராடங்களை மருத்துவத்துறையில் நடத்தி வெற்றி கண்ட அந்த அற்புத படைப்பான அந்த இதயம் 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி தனது 82 வயதில் இயங்க மறுத்து நின்றது. அவருக்காக பல ஆயிரகணக்கான இதயங்கள் துடித்தது. கண்கள் கண்ணீர் விட்டு அழுதன. அவர் மறைந்தாலும் அவரின் ஆன்மா அவருடைய சேவைகளை நினைவூட்டும் நினைவுச் சின்னங்களாக அன்னை இல்லம், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
விருதுகள்:
பெண் விடுதலைக்காவும், ஏழை, எளிய மக்களுக்காவும் தனது வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த முத்துலட்சுமி ரெட்டிக்கு 1937 ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தலைமையாரல் ஆல்டர் வுமன் என்ற  பட்டம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையில் பிறந்து இத்தனை சிறப்புகளையும் பெற்ற இவரின் புகழ் புதுக்கோட்டைக்கே உரியது. இவரின் நினைவாக புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை”என தமிழக அரசு பெயர் சூட்டியிருக்கிறது.
இந்திய அரசு முத்துலட்சுமியின் சேவைகளுக்காக பத்ம பூஷண் விருது கொடுத்து கௌரவித்தது.
டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு  நிதியுதவி திட்டம்:
தமிழக அரசு தமிழகத்தில் வறுமைக் கோட்டிலிருக்கும் ஏழைப் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை ஈடு செய்து, சத்தான உணவு கிடைக்கச் செய்திட 2006-2007 ஆம் ஆண்டு முதல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏழைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்படும் உதவி தொகை ருபாய் 6 ஆயிரத்திலிருந்து , ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில், முதல் தவணையாக ரூபாய் 4000/- கருவுற்ற ஏழாவது மாதத்திலும், இரண்டாவது தவணையாக ரூபாய் 3000/- குழந்தை பிறந்த பின்பும் , பிரசவத்துக்குப் பின்னர் முத்தடுப்பு ஊசி செலுத்தியதும் 3-வது தவணையாக ரூ. 4 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்:
தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.
கலப்புத் திருமணம் முதல்வகை:
தமிழக அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
* பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
* வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
* திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* ரூபாய் 20000 வழங்கப்படும். இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.
கலப்புத் திருமணம் இரண்டாம்வகை:
தமிழக அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.
* பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.
* வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.
* திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கி வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive