Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC GROUP 2, VAO Exam Material

                   தமிழிலக்கியத்தில் அறிவியல் செய்திகள்


         ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி
என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும், பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.

         இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்கா. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துகளை புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்ப காலக்கண்ணாடியாக இலக்கியத்தில் காணலாம்.


பரிபாடலில்
 


          கருவளர் வானத்திசை யிற் தோன்றி 
          உருவறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த உளமுழ் ஊழியும்
சென்தீச் சுடரிய ஊழியும் பணியொடு
தன்பெயல் தலை இய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)
 
         என்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது  காலப்போக்கில்   சிறிது   சிறிதாக    குளிர்ந்து    பனிப்படலமாக   மாறி,    பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது


          இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில்
அற்புதமான் வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவைப் பிளக்க இயலும் என்ற புதிய கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ்ச் சான்றோர்கள் சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.
''அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் ''

என்று அணுவாகிய துகளைப் பிளக்க இயலும் என்ற சிந்தனையை நம்முன் வைத்துள்ளார்.


இடையின்றி அணுக்களெல்லாம் சுற்றுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
 என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார்.



கம்பரும் இக்கருத்தினை இரணி வதைப் படலத்தின் மூலம் உணர்த்துகிறார். இரணியன்,
'' இறைவன் எங்கு உள்ளான் '' என்று பிரகலாதனிடம் வினவினான். அப்போது பிரகலாதன்
ஓர் எளிய அணுவை நூறு பங்காகச் செய்தால் அந்தச் சிறு பகுப்பில் அமைத்து உள்ளான்
என விடை கூறுகிறான்.

'' சாணினு முளனோர் தன்மை
அணுவினைச் சத கூறிட்ட
கோணினு முளன்..... " [கம்பராமாயணம்.253]

என்ற பாடலில் அணுவைப் பற்றி கம்பரின் கருத்து மிளிர்கிறது.

தமிழ் இலக்கியத்தில் '' ஒப்புநோக்குக் கொள்கை'' உடையவராய், தமிழர்களும் இச் சிந்தனை உடையவராய் விளங்கினர் என்பதற்கு தொல்காப்பியரைச் சான்றாக காட்டலாம். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று பிரிவுகளுள், முதற்பொருள்
என்பதனை,
'' முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப் இயல்புணர்ந் தோரே ''

என்று நிலமும் காலமும் என இருவகையாகப் பிரித்துள்ளார்.

நீர்ப்பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை
. நீர்ப் பொருளின் இச் சுருங்கா இயல்பை
அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்து கூறியவர் ' பாஸ்கல் ' என்னும் அறிஞர். ஆனால் பாஸ்கல் இந்த விதியை கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுக்கு முன்னரே ஔவையார்
''ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது '' -ஔவை


என்ற பாடலை எழுதி. ஆழத்தை பொறுத்து அழுத்தம் மிகுகின்றது என்ற அறிவியல் உண்மையை எடுத்துரைத்துள்ளார்






மாற்றுருப்பு பொருத்துதல்

பழுதுபட்ட ஒரு உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை,  இதனைப் பற்றிய குறிப்பொன்று சிலப்பில் காணப்படுகின்றது.
 
 நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த 
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பு)  
 
கீரந்தையின் இலக்கக் கதவைத் தான் தட்டியதற்குத் தண்டனையாக, தன் கையைத் தானே துண்டித்துக் கொள்கிறான் பாண்டியன். அதன்பின் பொன்னாலாகிய கையைச் செய்து வைத்துக் கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான்

உலகில் நிகழும் சாதாரணச் செயல்கள் அனைத்திலும் வேதியியலின் நிகழ்வுகள் உண்டாகின்றன.


உதாரணமாக இரும்பு துருபிடித்தல் முதல் வெங்காய சட்னி கெட்டு போவது வரை

இவ்விளைவுகளை நம்மால் உணரமுடிகிறது.  தமிழ்ச் சான்றோர் பல் துறை அறிவுடையவராய்
விளங்கியமையால் இயற்கை நிகழ்வுகளை உற்று நோக்கித்தம் பாடல்களில் தம்
முத்திரைகளைப் பதித்துள்ளனர்.

சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது என்ற அறிவியல் புரிதல் இருந்ததால் தான்

இளங்கோ அடிகள்.
''ஞாயிறு போற்றும் ஞாயிறு போற்றும்
காவிரி நாடான் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலந்தரி தலான்...''

என்று ஞாயிற்றைப் போற்றினார்.

உயிரியல் துறை பற்றிய சிந்தைனையும் தமிழ் இலக்கியத்தில் சிறப்புற அமைந்துள்ளதை
தொல்காப்பியம் மூலம் உணரலாம். ஒரு செல்லானது, செல் பிரிதலின் மூலம் பல்கிப் பெருகிப்
பல உயிர்கள் உருவாகின்றன. பல செல் உயிர்களில் ஒரு செல்லே எல்லா வேலைகளையும்
செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட செல் தொகுப்பு செல்
தொகுப்புகளால் செய்யப் பெறுகின்றது என்பது உயிரியல் கொள்கை.
இக் கொள்கையை ஓரளவு விளக்குவதாய்,

''ஒன்று அறிவதுவே உற்ற அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிதுவே அவற்றொடு மனனே
நேரிதில் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே ...'
..தொல் பொருள் மரபியில்:29.


உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டை விளக்குவதாய்த் திருமாலின்
10 அவதாரங்கள் அமைந்துள்ளன. நீரில் வாழும் உயிராக மச்சாவதாரம், நீரிலும் நிலத்திலும்
வாழும் தன்மையுடைய உயிராக கூர்மவதாரம், நிலத்திலே மட்டுமே வாழுகின்ற தன்மையுடைய விலங்காக வாரக அவதாரம், பிறகு விலங்கும் மனிதனுமாக நரசிம்ம அவதாரம், அதன் பின்னரே வளர்ச்சி அடைந்த முழு மனிதனாக கிருஷ்ணன், இராமன் அவரதாங்கள்.

அதில் மனிதனை நெறிப்படுத்தும் தத்துவங்களை மீறிய ஒரு விஞ்ஞான அதிசயம் பொதிந்து
கிடப்பதுதான் முக்கியம். உயிர்களின் வளர்ச்சியை பரிணாமப் படிகளாக உலகுக்கு அறிவித்த
டார்வின் சித்தாந்தம் இந்துமத இதிகாசங்கள் பொருந்தி இருப்பதைக் காணலாம்.

டார்வினுக்கு நமது இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை.
ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும்
நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து
படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான்



 மனிதன் மட்டுமே மேற்கொள்ளும் செயலான  கூட்சப் படுதலைவெளிப் படுத்தும் சிம்பன்ஸி குரங்கு(நமது முன்னோர்)
.
 இந்த மூன்று அவதாரங்களை கவனித்தால் டார்வின் விஞ்ஞானியின் பரிணாமக் கொள்கையோடு ஒத்துப் போகிறது. இங்கேயும் செல் [ஜீன்] விஷயம் தெரிகிறது. மனிதனுக்கு அவனது ஜீன்கள் என்ற ஜீவ அணுவில் ஏற்கனவே எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை, எந்த காலகட்டத்தில் அவன் கண்டுபிடிக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற விதி. அதன்படிதான் மனித குலம் வளர்ந்து
வருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மீனில் ஆரம்பித்த அவதாரம் 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். வாமன அவதாரம்
என்பது விஞ்ஞான ரீதியாக பரிணாம வளர்ச்சியில் மிகச் சரியானது. இந்துமத இதிகாசங்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வெளியிட்டுள்ள அறிவியல் செய்தி.

மற்ற அவதார புருஷர்களைவிட இவர் குள்ளமானவர்! நான்கு அவதாரங்களை அடுத்து மிகச்
சரியாக விடுபட்ட [ மிஸ்ஸிங் லிங்க் ] இந்த குள்ளமான வாமன அவதாரம். விஞ்ஞானத்திற்கு
ஒரு முன்னோடியாக இருக்கிறது.

''மிஸ்ஸிங் லிங்க் ''என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும்
ஒரு சொல். '' விட்டுப்போன கண்ணி '' குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்
என்று
விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று
இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை
பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப்
பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.

டார்வின் சித்தாந்தப்படி உயிர்கள் தண்ணீரில்தான் உருவாயிற்று என்று 200 ஆண்டுகளுக்கு
முன்னால்தான் ஆச்சரியமாக கண்டறியப்பட்டு. இந்து மத இதிகாசங்கள் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னமே முதல் அவதாரமாக 1.' மச்ச அவதாரம்' என்று மிகச் சரியாக காட்டியுள்ளது.
2. 'கூர்ம அவதாரம்' [மை வடிவம்].
3. 'வராக அவதாரம்' 4.காட்டுக்கு ராஜாவான சிங்கத்திற்கு 'சிம்மாவதாரம்'.
5. மிருகங்களிலிருந்து முதுகுத் தண்டு நிமிர ஆரம்பித்த குள்ள ஜீவனான 'வாமன அவதாரம்.
6வது பரசுராம அவதாரம், 7வது அவதாரம்
இராம அவதாரம் 8வது பலராம அவதாரம்.
எல்லாமே மனிதன் சாதாரணக் கருவிகளான வில்
ஈட்டி, கோடாரியை பயன்படுத்திய காலகட்ட அவதாரங்கள்!

வானவியல் பற்றிய அறிவுடையவராய் விளங்கினர் அக்கால மக்கள் என்பதை இலக்கியங்கள்
மூலமாக உணரலாம். சூரியனையும், அதனைச் சுற்றி உள்ள கோள்களையும் அறிவியல்
அறிஞர்கள் [ Solar System] சூரிய வட்டம், அதனைச் சுற்றியுள்ள பாதை என்று மொழிகின்றனர்.
இவ்வாறு வானவெளியில் காணப்படும் இக்காட்சியைப் புறநானூறுக்
கவிஞர்,
'' செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்று பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்...''
புறநானூறு : 30.

என்று பாடியுள்ளார்.


 வள்ளுவரும் 

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

     என்று பாடி உலகம் சுழன்று கொண்டுருக்கிறது என்று உலகத்திற்கு எடுத்துரைத்தார்.

பேரண்டத்தின் தோற்றம் குறித்து  நியூட்ரினோ ஆய்வு,செயற்கைகோள் மூலம் ஆய்வு ஆய்வு செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் 

1000  ஆண்டுகளுக்கு முன்பே

 மாணிக்க வாசகரின் திருவாசகத்தில்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

  
என்று எழுதிருப்பதின் மூலம் பெருவெடிப்பு கெள்கை படி   இப்பேரண்டம் பறந்து விரிந்து கிடப்பதையும்,இப்பேரண்டத்திலுள்ள ஒரு கோள் பூமி என்பதனையும் வெளிபடுத்தியுள்ளார்.

வறிது நிலைஇய காயமும் புறநானூறு 30

என்ற பாடல் வரிகள் மூலம் வானத்தில் காற்றில்லாத பகுதி உள்ளது எனும் அறிவியல் செய்தி வெளிப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல்
துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் கனவைத் தம் பாடலின்
மூலம் கூறுகிறார்.
'

' வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்...

என்று பாடியுள்ளமை உணரலாம். இன்று சந்திர மண்டலத்தினையும் தாண்டி மற்ற கோள்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளான்.

தமிழ் இலக்கியத்தில் பயணத்தை விரைவாக்கிய விமானம் பற்றிய சிந்தைகளையும்
காணமுடிகிறது. புறநானூறு ஓட்டுநர் இல்லாத வானவூர்தியைப் பற்றிய செய்தினை தருகின்றது. அவ்வடிகள்:
'' வலவன் ஏவா வான வூர்தி
எய்துப என்பதஞ் செய்வினை முடித்தெனக் ...''

புறம்.27
''கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானவூர்தி ஏறினள் மாதோ
கானமர் புரிகுழற் கண்ணகி தானென்..'

சிலம்பு.
என்ற அடிகளில் சிலப்பதிகாரம் ' வானவூர்தி' என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளமை
காணலாம். சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய
பறவை உருசத்தில் அமைந்த ஊர்தியில்
சென்றதாகக் காட்டுகிறார். அவ்வடிகள்:
''என்பு நெக்குருகி உள்ளமொழுகுபு சோர யாத்த
அன்பு மிக்க வலிதாற்றா வாருயிர் கிழத்தி தன்னை
இன்ப மிக்குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன் றுணைவி சேர்ந்தாள்''
- சீவக சிந்தாமணி-


இவ்வாறு தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை
வித்திட்டு சென்றனர்.


கடவுளுக்கும் கவிஞனுக்கும் ஏற்பட்ட வாதம்- புலமைக்குத் தலைமை தந்த பெருமை -
அறிவியலையை இன்பத் தமிழோடு சான்றோர் சபையில் முதன் முதலில் நடைப்பெற்ற பட்டிமன்றம்.

சிறப்புடன்... அது ஒரு அறிவியல் தலைப்பட்ட அறிஞர் விவாதம்.
ஒரு புலவனுக்கு உதவ இறையானர் இறங்கி வந்தது.
உண்மையான திறமையுள்ள புலவனுக்கு இறைவனை எதிர்புறவாதம் செய்யவும் துணிவு இருந்தது.
இலக்கிய, ஞன, ஆன்மீக, கலாச்சார சிறப்புகள்.
எல்லோரும் அறிந்த கதைதான்.
மதுரை மன்னன் செண்பக பாண்டியனுக்கு ஒரு ஐயம்.
பெணகளின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா ?
ஆலவாய் சொக்கர் தருமிக்கு தந்துதவிய பாட்டு.


"கொங்கு தேர் வாழ்க்கை அன் சிறை தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியன்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே'' !


மலர்கள் தோறும் சென்று பூந் தாதுக்களைத் தேர்ந்தெடுத்துத் தேன் உண்ணும் வண்டினை
நோக்கித் தலைவன் கூறுவதாய் அமைந்த பாடல்.

'' நீ கண்டுள்ள மலர்களில் எல்லாம், தலைவி கூந்தலுக்கு நிகரான மணம் உண்டோ''
என்று வினவும் பாடல்.

இப்பாடலின் உள்ளூறை - கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு!

சரி. நவீன விஞ்ஞானத்தைச் சற்று பார்ப்போம்.

''·பீரோமோன்ஸ்'' [ Pheromones ] என்று சில வேதிப்பொருட்கள்
( ரசாயனப் பொருட்கள்) உள்ளன. இவை குறிப்பிட்ட சுரப்பிகளால் சுரக்கப்படுகின்றன.
இத்தைய ·பீரோமோன்ஸ், அந்த வகையில் உயிரினங்களுக்குள், ஆண்-பெண் அடையாளம் காட்டவும்,
அவற்றின் பாலின மற்றும் நடத்தைகளை நிர்ணயிக்கவும்
உதவுகின்றன.

சரி, ·பீரோமோன்ஸ் எங்கெங்கு உள்ளன? ·பீரோமோன் சுரப்பிகள் மயிர்கால்களோடு
அதிகம் தொடர்புடையவை.

இன்னமும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் முழுமையாக முற்றுப் பெறாத நிலையில் நமக்கு
கிடைத்திருக்ககூடிய செய்தி இது. மேலும் ஆராய்ச்சிகள் தொடரத் தொடர இன்னமும்
தெளிவான செய்திகள் கிடைக்கலாம்.

எப்படியாயினும், இயற்கையில் சுரக்கப்படும் ·பீரோமோன்ஸ் தரும் மணத்தை
இயற்கை மணம் உண்டு இறையனார் பாடல் சுட்டுகிறது.

அப்படியானால், செண்பகப் பாண்டியனுக்கு வந்தது ஒரு விஞ்ஞான சந்தேகம். இறையனார்
தருமி
மூலம் கொடுத்த, ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கும் ஆலவாய் சொக்கருக்கும் ஏற்பட்டது ஒரு விஞ்ஞான விவாதம். நக்கீரருக்கு முதலில் உடன்பாடு இல்லை.

ஆனால், யார் இதற்கான நிச்சியமான தகவலைத் தரமுடியும்?

நிச்சியமாக இயற்கையின் உண்மையை - இயற்கைத் தலைவனான இறைவனே விளக்குவதாக நிகழ்ச்சி அமைந்தால், சிக்கலுக்கு தீர்வு கிடைத்தது.
அறிவியல் தனத்தோடு , அறிவியல் பார்வையோடு நம் பார்வை அமையலாம். அமையவேண்டும்.

இன்றைய விஞ்ஞானப்படி தண்ணீரில் ஹைரஜன் வாயு இரண்டு பங்கும், பிராண வாயு
ஒரு பங்கும் உண்டு [H 2 0 ] என்கிறோம். இந்த உண்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே நம் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

'' பிராணம் ஏசும் அன்யத்வே '' என்கிறது அதர்வண வேதம். அதாவது பிராண வாயு ஒரு பங்கும்
இன்னொரு வாயு இரண்டு பங்கும்
என்கிறது.

பல வருடங்களுக்கு முன் சந்திர மண்டலத்துக்கு சென்று மண்ணெடுத்து வந்தார்கள்.
அந்த மண் கறுப்பாக இருந்தது.
நம் பழைய வேதத்தில் அதைப்பற்றி ஒரு குறிப்பு வருகிறது.
அங்கீரஸ் மஹரிஷி ஒரு ஹோமம் நடத்தினார். அதற்கு சந்திரலோகத்திலிருந்து மண்ணெடுத்து
வந்து பூமியிலுள்ள மண்ணோடு பிசைந்து குண்டம் தயாரிக்க வேண்டியிருந்தது.

அது சரித்திரம். அதைக் குறிப்பிடும்போது '' சந்த்ரமஸி கிருஷ்ணம '' என்கிறது வேதம்.
அதாவது, '' சந்திர மண்டலத்து மண் கறுப்பானது '' என்று விளக்கம்.

இந்த பிரபஞ்சத்தில் முதன் முதலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட சரித்திர முக்கியதுவம்
வாய்ந்த நிகழ்ச்சி குருசேத்திரத்தில் 18 நாட்கள் நடந்த மகாபாரதப் போர்.
அஸ்தினாபுரத்தில் கண் பார்வையில்லா திருதராஷ்டிரன் தன் சயன மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்க, பார்வையில்லாத அவனுக்கு தேரோட்டி சஞ்சயன் சினிமாஸ்கோப் அகலத்தில் சுவரில் தெரிந்த போர்க்களக் காட்சிகளைப் பார்த்து வருணனை [கமெண்டரி] செய்து கொடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.
முதல் ஒளிபரப்பு அதுவும் நேரடி ஒளிபரப்பு மகாபாரதப் போர். முதல் வருணனையாளர் சஞ்சயன்.

இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற எல்லா விஞ்ஞான அறிவியல் சங்கதிகளும்
மகா பாரத காலத்திலேயே இருந்திரு க்கின்றன. .

சமீப ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைகழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும்,
அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் குருச்சேத்திர
அகழ்ந்து தோண்டி ய்வு செய்துள்ளார்கள்.
மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி
எடுத்த மண், இரும்பு துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை எடுத்து பரிசோதனை
செய்து பார்த்ததில் இப்போது இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில்
என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம்.
நவீன அறிவியல் கருவிகளை கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கதிர்
வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்பித்துள்ளார்கள்.


மேலும் இதைப் பற்றிய கருத்துகளை அறிந்து கொள்ள கண்ணதாசன் இயற்றிய அர்த்தமுள்ள இந்து மாதம் நூலைப் படிக்கலாம்

   அன்புடன் 
 மணியரசன்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive