Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமையல் எரிவாயு மானியம் பெற இனி ஒரு விண்ணப்பம் மட்டும் போதும்

           சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு குறித்து இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

              சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் (DBTL) நாடு முழுவதும் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி, 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தில் சேர்ந்து, வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையைப் பெறும் நுகர்வோர்கள் வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

அதேநேரத்தில், மானியத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதை www.mylpg.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. நேரடி மானியத் திட்டத்தில், நுகர்வோரை இணைப்பதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே விண்ணப்பம்: இந்தத் திட்டத்தில், தற்போது நுகர்வோர் இணைவதற்காக வழங்கப்படும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்து அளிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோர் அனைத்து விவரங்களையும் ஒரே விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.

இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத நுகர்வோர் இனி தனித் தனியாக விண்ணப்பப் படிவங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆதார் அட்டை இருப்பவர்கள், இல்லாதவர்கள், மானியம் பெற விரும்பாதவர்கள் என அனைவரும் ஒரே விண்ணப்பத்தில் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விண்ணப்பம் எரிவாயு விநியோகஸ்தரிடமும், இணையதளத்திலும் கிடைக்கும்.

இதற்கென எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் விநியோகஸ்தர்கள் பற்றிய முழுவிவரங்களுடன் நுகர்வோர் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.

ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்: ஆதார் எண் இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில், இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் எண் இல்லாத நுகர்வோர்கள் வங்கிக் கணக்கு மூலம் மானியத் தொகையை நேரடியாகப் பெறலாம்.

இருப்பினும், அந்த நுகர்வோர் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதைப் பயன்படுத்தி மானியத்தைப் பெறுவது அவசியம். எனவே, ஆதார் எண் கிடைத்தவுடன் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

என்ன மாற்றம்?

புதிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது குறித்து இந்திய எண்ணெய் அதிகாரிகள் அளித்த விளக்கம்:

ஆதார் எண் இருந்தால்... புதிய படிவத்தை இரண்டு நகல் எடுத்து, ஒரு நகலில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி பி-ஐ பூர்த்தி செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் வழங்க வேண்டும்.

மற்றொரு நகலை எடுத்து, அதில் இடம்பெற்றிருக்கும் பகுதி ஏ, பி, சி ஆகியவற்றை பூர்த்தி செய்து விநியோகஸ்தர் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போடலாம் அல்லது வங்கியில் நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம். வங்கியில் சமர்ப்பித்தால் உரிய ஆவணம் கிடைக்கும். அதாவது படிவம் சமர்ப்பித்தலுக்கான ஆவணம் வழங்கப்படும்.

ஆதார் எண் இல்லாவிட்டால்... படிவத்தில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஏ, பகுதி சி-ஐ பூர்த்தி செய்து எரிவாயு விநியோகஸ்தரிடமோ அல்லது வங்கியிலோ சமர்ப்பிக்கலாம்.

மானியம் பெற விரும்பாவிட்டால்... படிவத்தில் பகுதி ஏ-ஐ மட்டும் பூர்த்தி செய்து, எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்பு இருந்தது போல பல்வேறு விண்ணப்பங்களை நுகர்வோர் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அனைத்துக்கும் ஒரே விண்ணப்பத்தைப் பயன்படுத்தி, நேரடி மானியத் திட்டத்தில் நுகர்வோர் இணையலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive