Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதம் 21-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை!!!

     வண்டலூர், வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

     அங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் பார்வையாளர்களுக்கு 21-ந்தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.வண்டலூர் உயிரியல் பூங்காஇந்தியாவில் முதல் உயிரியல் பூங்கா 1855-ம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட்டில்
தொடங்கப்பட்டது.சிறிய அளவிலான இந்த உயிரியல் பூங்கா வண்டலூர் காப்புக் காட்டிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு 1979-ம் ஆண்டு நவீன உயிரியல் பூங்காவாக உருவெடுத்தது.இந்த உயிரியல் பூங்காவை 1985-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இந்த பூங்கா 1,486 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இயற்கை வனத்தால் சூழப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன.சிங்கம் சுதந்திரமாக நடமாடும் பகுதி, பாம்பு பண்ணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன. இங்கு ஒரு நாளில் சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதை விட கூடுதலாக கூட்டம் இருக்கும்.வார்தா புயலால் பெரும் சேதம்கடந்த 12-ந்தேதி தாக்கிய ‘வார்தா’ வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செல்ல கூடிய சுற்றுப்பாதையில் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகளை சுற்றியும், கூண்டுகளுக்கு உள்ளேயும் நின்றிருந்த மரங்கள் என பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தைலம் மரம், தூங்கு மூஞ்சு மரம் உள்ளிட்ட அரியவகை மரங்களும் புயல் காற்றில் அழிந்தன.பூங்காவுக்குள் நுழைய முடியாத வகையில் பூங்கா மொத்தமும் குப்பை மேடாகி போனது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பூங்காவுக்கு வழக்கமான விடுமுறை நாள், இருப்பினும் பூங்கா ஊழியர்கள் நிலைமையை அறிய உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களால் செல்ல முடியவில்லை.இதையடுத்து நேற்று பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 375 பேர் பூங்காவை சீர்செய்யும் பணியில் இறங்கினர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து மரம் வெட்டுவதில் திறமை வாய்ந்த 150 பேர் வரவழைக்கப்பட்டனர்.முதல் கட்டமாக பார்வையாளர்கள் செல்லக்கூடிய சுற்றுப்பாதை சாலையில் சரிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.வரலாறு காணாத...இதுகுறித்து உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறியதாவது:-வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கு முன் 1994-ம் ஆண்டு தாக்கிய புயல் உயிரியல் பூங்காவில் லேசான சேதத்தையே ஏற்படுத்தியது. ஆனால் தற்போதைய புயல் இங்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. புயலில் சரிந்த மரங்கள் அனைத்தும் 40 ஆண்டுகள் பழமையானவை. இந்த உயிரியல் பூங்கா மீண்டும் இயற்கை சூழப்பட்ட வனப்பகுதியாக உருவெடுக்க ஓராண்டுக்கும் மேலாக ஆகலாம்.புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விலங்குகள் அனைத்தும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டன. இதனால் விலங்குகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அதனை உறுதியாக கூறிவிட முடியாது. ஏனெனில் விலங்குகள் அடைக்கப்பட்டு உள்ள கூண்டுகளின் மீதும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்திய பிறகே பாதிப்பு குறித்து தெரியவரும். ஒரு முதலைக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அன்றைய தினம் பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.நவீன எந்திரங்களை கொண்டு மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 21-ந்தேதி வரை பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இது மேலும் நீட்டிக்கப்படலாம். பார்வையாளர்கள் சகஜமாக வந்து பார்வையிடும் வகையில் பூங்கா தயாராக 90-க்கும் நாட்களுக்கும் மேல் ஆகும்.ரூ.10 கோடி இழப்புமரங்கள் சாய்ந்து பாதை தடைப்பட்டதால் நேற்று முன்தினம் முழுவதும் விலங்குகளுக்கு உணவு வழங்கமுடியாமல் போய்விட்டது. இன்று(நேற்று) முதல் கட்டமாக பாதையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டது.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கலாம் என தெரிகிறது. மரங்கள் சாய்ந்ததில் விலங்குகளின் கூண்டுகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள், விலங்குகளுக்கான உணவு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், விலங்குகள் இளைப்பாறும் நிழற்குடைகள், மற்றும் பார்வையாளர்களுக்கான நிழற்குடைகள், இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன.வன அதிகாரியின் அலுவலகம், தமிழ்நாடு அரசு உணவுவிடுதியின் கட்டிடம் உள்ளிட்டவற்றின் மீதும் மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதன் அடிப்படையில் சுமார் ரூ.10 கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.முதல்-அமைச்சர் ஆய்வுஇந்த நிலையில், நேற்று மதியம் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.பூங்காவிற்குள் வாகனத்தில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த ஓ.பன்னீர்செல்வம் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மீட்புப் பணிகளை வேகமாக செய்து முடிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு எதிரே சர்க்கசில் இருந்து மீட்டுவரப்பட்ட விலங்குகள் அடைந்து வைக்கப்பட்டிருக்கும் மீட்பு மையம் உள்ளது. வார்தா புயலின் போது இங்கும் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive