NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாநில மொழிகளை அழிக்கவா மும்மொழிக் கொள்கை???

      மும்மொழி கொள்கை என்ற பெயரில் சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேந்திர வித்யாலயாவுக்கு விதிவிலக்கு

சிபிஎஸ்இ பள்ளிகளில் இப்போது 6 முதல் 8 வரை மும்மொழி கொள்கையின் கீழ் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில்
உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ் கட்டாயம் கற்றுத்தர வேண்டும் என்று 2012-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தில் கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகள் ஆகிய சிறப்பு பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா பள்ளிகளில் முதல் மொழி ஆங்கிலமாகவும், இரண்டாவது மொழி இந்தி, மூன்றாவது மொழி சமஸ்கிருதம் ஆகவும் இருக்கின்றன. தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளைப் பொறுத்தவரை முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி இந்தி அல்லது தமிழ், மூன்றாவது மொழி சமஸ்கிருதம் அல்லது பிரஞ்ச், ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகள் என்ற அடிப்படையில் கற்றுத் தருகின்றன.

தமிழகம் எதிர்ப்பு

இந்த சூழலில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியிடம் அளித்த மனுவில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையைத்தான் கடைபிடிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் திரும்பிய அடுத்த நாளில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மும்மொழி கொள்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மும்மொழி கொள்கை

முதல் மொழியாக தாய் மொழி அல்லது உள்ளூர் மொழியை பயில வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அல்லது இந்தி இரண்டாவது மொழியாகக் கற்பிக்கவேண்டும். மூன்றாவது மொழி என்பது ஆங்கிலம் அல்லது மார்டன் இந்திய மொழி ஆக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் மார்டன் இந்திய மொழி ஆகியவற்றை இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று சொல்லி இருக்கின்றனர். வெளிநாட்டு மொழியை விருப்பப் பாடமாக வைக்கவும் சி.பி.எஸ்.இ பரிந்துரைத்துள்ளது.

விதிவிலக்கு கூடாது


இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

"தமிழ்நாடு மொழி கற்றல் சட்டம், 2013-14-ம் ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதையா வித்யாலா பள்ளிகளில் இந்த சட்டத்தை அமல்படுத்தத் தேவையில்லை என்ற விதிவிலக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கர்நாடகா மாநிலத்தில் கேந்திர வித்யாலயா, நவோதையா, சைனிக் பள்ளிகளில் கன்னட மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் சட்டம் அப்படி இருக்கிறது. என் குழந்தை ஆங்கிலம் படித்தால் பெரிய ஆள் ஆகி விடலாம் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். பெற்றோர் விரும்புகிறார்கள் என்பதற்காக ஒரு புதிய மொழியைக் கற்றுத் தருகின்றோம் என்று அவர்கள் மீது பழிபோடுவது நல்லதல்ல. மும்மொழி கொள்கை விஷயத்தில் 3 மொழிகள் எந்த மொழிகள் என்று சொல்லவில்லை என்கிறார்கள். திணிப்பு என்று சொல்லாதீர்கள் என்றும் சொல்கின்றனர்.

தாய்மொழி கட்டாயம்

நம் குழந்தை எந்தப் பள்ளியில் சேரப்போகிறதோ அந்த பள்ளியில் 22 மொழிகளும் கற்றுத் தர முடியாது. அத்தனை மொழிகளையும் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் கற்றுத் தரும் மொழியைத்தான் நமது குழந்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பள்ளியில் 3-வது மொழி சமஸ்கிருதம் என்று இருந்தால் அதைத் தான் கற்க வேண்டிய சூழல் ஏற்படும். இரண்டாவது மொழி ஆங்கிலம் அல்லது இந்தி இருக்கிறது என்றால் அதைதான் தேர்வு செய்ய வேண்டும். இது மறைமுகமாக மொழி திணிப்புத்தான். குழந்தைகளுக்கு சமமான கற்றல் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கான நிதி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும். சமஸ்கிருதத்தை பண்பாட்டு அடையாளமாகவும், இந்தியை இணைப்பு மொழியாகவும் அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுதான் இது. உலக வர்த்தக அமைப்பிடம் கல்வியை ஒப்படைப்பதற்கு இவர்களுக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது. பிற இந்திய மொழிகள் அழியும் என்பதுதான் இதன் வெளிப்பாடு. ஒரு மொழி, பயன்பாட்டுக்கு இல்லாமல் போய்விட்டால் அழிந்துவிடும். தாய்மொழியில் படி என்று கட்டாயப்படுத்த வேண்டும். இத்தனை மொழிகளைப் படியுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது" என்றார்.




4 Comments:

  1. Learn Hindi...I was affected by not learn Hindi....Solbargal sollattum... Neengal Hindi padiyungal...

    ReplyDelete
    Replies
    1. We all will get affected if we don't learn our mother tongue Tamil, They are trying to make you learn hindi so that they can dominate you, nothing else

      Delete
  2. Learn Hindi.. Upsc,rrb will be conducted in Hindi language...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive