Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எச்.ஐ.வி.யை விரைவில் கண்டறிய புதிய சோதனை !!

        சில ஆண்டுகள் முன்புவரை, உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக எச்.ஐ.வி. நோய் கருதப்பட்டது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கு நீண்ட முயற்சிக்குப் பின்பாக சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மருந்துகள் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்திவிடாது என்றாலும், சில மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்க முடியும்.



கடந்த வியாழக்கிழமை, ஸ்பெயினின் உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனம், எச்.ஐ.வி. சோதனை காப்புரிமை பெறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அந்த எச்.ஐ.வி. சோதனையின்படி, எய்ட்ஸ் நோய் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் அதை ஏற்படுத்திய வைரஸ் கிருமியைக் கண்டறிய முடியும்.

ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIC) விஞ்ஞானிகளால் ‘பையோசென்சார்’ உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பயோசென்சார், மனித இரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் உடன் இணைக்கப்பட்ட p24 ஆண்டிஜன் என்னும் புரதத்தைக் கண்டறியும்.

இந்த புதிய தொழில்நுட்பம், பழைய நுட்பத்தைவிட பல மடங்கு சிறப்பாக உள்ளது. இதற்கான மொத்த சோதனை நேரம் நான்கு மணி நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே. அதன்படி, மருத்துவ முடிவுகளை அதே நாளில் பெற்றுக்கொள்ள முடியும்.

சென்சார் சோதனைகளின் விளைவு இந்த வாரம் பிளாஸ் ஒன் (PLOS ONE) அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது.

சென்சார் என்பது மைக்ரோ இயந்திர சிலிக்கான் கட்டமைப்புகள் மற்றும் தங்க நானோ துகள்கள் இணைந்த அரிசி அளவிலான ஒரு சிப். அதில் இருக்கும் பொருட்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. அதன்படி, குறைந்த செலவில் அதிகளவிலான உற்பத்தி செய்ய முடியும் என, ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் ஜேவியர் டமாயோ தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஆண்டிஜன் சோதனைகள் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்று வாரங்களுக்கு பின்னர்தான் கண்டறிய முடியும். சோதனை முடிவுகளைப் பெறவும் அதிக நாட்கள் தேவைப்படும்.

எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட 10 நாட்களில் ஆர்.என்.ஏ. சோதனைமூலம் வைரஸ் கிருமியைக் கண்டறிய முடியும். ஆனால் அந்த சோதனைக்கான செலவு மிகவும் அதிகம்.

இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியம். அப்போதுதான் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து செக்ஸ் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பின்படி, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு கணக்கெடுப்பின்படி, கடந்த 2015ஆம் ஆண்டு சுமார் 36.7 மில்லியன் பேர் எச்.ஐ.வி. நோயுடன் வாழ்ந்துள்ளனர். முக்கியமாக குறைந்த, நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 2.1 மில்லியன் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது.

இதுவரை 35 மில்லியன் பேர் எச்.ஐ.வி. சம்பந்தப்பட்ட நோயால் இறந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு மட்டும் 1.1 மில்லியன் பேர் இறந்துள்ளனர். தற்போது, மக்களிடம் எச்.ஐ.வி. பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி. கிருமி பரவுவதைத் தடுக்கும் வசதி தற்போது அனைத்து மருத்துவக் கல்லுரி மருத்துவமனையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive