NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தூக்கத்தின்போது உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள் என்ன?

‘நாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார்
தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன். அப்படி என்னதான் நடக்கிறது தூக்கத்தில்?

தூக்கத்தில் 4 நிலைகள்இரவு முழுவதும் நாம் ஒரே நிலையில், ஒரே முறையில் தூங்குவதில்லை. லேசான தூக்கம், ஆழமான தூக்கம், கனவுத்தூக்கம் என்று தூக்கத்தில் பல நிலைகள் இருக்கிறது. இதையே டெக்னிக்கலாக சொன்னால், Stage 1, 2, 3, மற்றும் REM Sleep என்று 4 நிலைகளாகப் பிரிக்கிறோம்.

இதில் முதல் மூன்று நிலைகளைச் சேர்த்து Non-Rem Sleep மற்றும் Rem sleep என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறோம். நமது உடலின் சீரான இயக்கத்துக்குத் தேவையான பல முக்கியமான பணிகள், ஆழ்ந்த தூக்கத்தின்போதுதான் நடக்கின்றன. இதனால் ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்குத் தேவையான அளவு ஓய்வினை, தூக்கத்தின் மூலம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தூக்கத்தில் இயங்கும் மூளைத் தண்டுவடம் நாம் தூங்கும்போது பெரும்பாலான உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. நமது உடல் செயல்பாடுகளைத் தன்னிச்சையானவை(Voluntary), தன்னிச்சையற்றவை(Involuntary) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

கை, கால்களை அசைப்பது, பேசுவது, நடப்பது போன்றவை நாம் தன்னிச்சையாக செய்கிற செயல்கள். ஆனால் மூச்சு விடுவது, இதயம் துடிப்பது போன்ற இயக்கங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக நடக்கும் தன்னிச்சையற்ற செயல்கள்.

தன்னிச்சையான இயக்கங்களில் ஈடுபடுகிற வாய், கை, கால் போன்ற உடல் உறுப்புகள்தான் நாம் தூங்கும்போது ஓய்வெடுக்கின்றன. உடலில் மூச்சு விடுவதும், இதயம் துடிப்பதும் நின்றுவிட்டால், நாம் உயிரோடு இருக்க முடியாது. அதனால்தான் இது மாதிரியான தன்னிச்சையற்ற வேலைகளை கவனிக்கிற மூளைத்தண்டுவடம் நாம் தூங்கும்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
மூளையில் நடைபெறும் பராமரிப்புப் பணிமனிதனுடைய மூளையில் லட்சக்கணக்கான நரம்பு செல்கள் வலைப்பின்னல் மாதிரி சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. அது ஒழுங்காக இயங்குவதற்கு நரம்பு செல்களின் இணைப்புகள் சரியாக இருப்பதோடு, அவ்வப்போது அவற்றில் பராமரிப்புப் பணிகள் நடைபெற வேண்டியது அவசியம். இதுபோன்ற பராமரிப்புப் பணிகளை மூளையில் உள்ள நரம்பு செல்கள் தானாகவே செய்துகொள்கின்றன. இந்த பராமரிப்புப் பணிகளால் நரம்பு செல்களுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

இவையெல்லாம் நாம் தூங்குகிறபோது, தினமும் நடக்கிற வேலை என்பதால் ஒவ்வொரு நாள் தூக்கமும் மிகவும் அவசியம். தூக்கம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் மூளை நரம்புகளின், பராமரிப்புப் பணிகள் சரியாக நடைபெறாமல் போகிறது.

இதனால் நரம்பு செல்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது. நரம்பு செல்களுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்காததால் நம்மால் உற்சாகமாக செயல்பட முடியாமல் போகிறது. இதனால் கவனக் குறைவு, முடிவெடுத்தலில் தடுமாற்றம் என்று பல தொடர் பிரச்னைகளை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குபுதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும், ஞாபக சக்திக்கும் தேவையான நரம்பு செல்களின் இணைப்புகளை தூக்கத்தின்போதுதான் மூளை உருவாக்குகிறது.
குறிப்பாக ஆழ்ந்த நிலை தூக்கம்(Slow wave sleep - stage 2 & 3) மற்றும் ரெம் நிலை தூக்கத்தில் கற்றலுக்குப் பயன்படுகிற மூளையின் பகுதிகள் தூண்டப்படுகிறது. குழந்தைகளின் இயல்பான மூளை வளர்ச்சிக்கு இந்தத் தூண்டுதல்கள் மிகவும் அவசியம். இதனால்தான் குழந்தைகளை அதிக நேரம் தூங்கச் சொல்கிறார்கள்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குநாம் தூங்கும்போது ஹார்மோன்கள் சுரப்பதில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது. பிறந்த குழந்தைகள், முதல் மூன்று மாதங்களுக்கு 18 மணி நேரம் அல்லது 20 மணி நேரம் வரைக்கும் தூங்கிக்கொண்டே இருக்கின்றனர்.

அப்படி தூங்குகிறபோது, ஆழ்ந்த தூக்க நிலைகளான இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள்(Growth hormones) அதிகமாக சுரக்கிறது. அதிகமாக தூங்கத் தூங்க ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாகி குழந்தை படிப்படியான வளர்ச்சியை அடைகிறது.

தசைகள் உருண்டு திரண்டு வளர்வதற்கும், செல்கள் மற்றும் திசுக்களை பழுது பார்ப்பதற்கும் இந்த ஹார்மோன்கள்தான் உறுதுணையாக இருக்கிறது. தூக்கத்தின் மூலமாக பாலின ஹார்மோன்களின் சுரப்பும் தூண்டப்படுகிறது. ஒரு குழந்தையின் பாலின வளர்ச்சி சரியாக இருப்பதற்கு இந்த பாலின ஹார்மோன்களின் சுரப்பு மிகவும் அவசியம். நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர...

சிறு வயதில் நம்மை அதிகமாக தூங்கச் சொல்வதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. நமது உடலில் நோய் பாதிப்புகள் சுலபமாக ஏற்படாமல் இருப்பதற்கும், அப்படியே நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கும், தூக்கம் பெரிய அளவில் உதவுகிறது. தூங்கும்போது உடலில் சைட்டோகைன்ஸ் (Cytokines) என்கிற வேதிப்பொருளின் உற்பத்தி அதிகமாகிறது.

இந்த சைட்டோகைன்ஸ் பாக்டீரியா, வைரஸ் மாதிரியான கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. உணவின் மூலமாக கிடைக்கும் சக்தியை உடல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு சில ஹார்மோன்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹார்மோன்கள் தூக்கத்தில்தான் அதிகமாக சுரக்கிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்துவது, பசியுணர்வை ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளுக்கும் நல்ல தூக்கமே அடிப்படையாக அமைகிறது.
ரெம் நிலை தூக்கம் இதயத்துக்கும் ரத்த நாளங்களுக்கும் தேவையான ஓய்வு தூக்கத்தின் மூலமாகத்தான் கிடைக்கிறது. லேசான தூக்கத்திலிருந்து ஆழ்ந்த தூக்கத்துக்குச் செல்கிறபோது இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ரெம் நிலையில் அவற்றின் அளவு கண்டபடி எகிறுகிறது. தூக்கத்தில் இதயத்துடிப்பும், ரத்த அழுத்தமும் 10 சதவீத அளவு குறைகிறது.
இதயமும், ரத்த நாளங்களும் ஆரோக்கியமாக இயங்குவதற்கு, ரத்த அழுத்தத்தில் ஏற்படுகிற இந்த 10 சதவீத வீழ்ச்சி மிகவும் அவசியம். நாம் சரியாகத் தூங்கவில்லை என்றால் ரத்த அழுத்தத்தில் இந்த வீழ்ச்சி ஏற்படாது. இதன் விளைவாக பக்கவாதம், நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த..தூக்கத்தின் பல்வேறு நிலைகளைப் பொறுத்து ரத்த சர்க்கரையின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நிலையில் குறிப்பிட்ட அளவு தூங்காமல் அல்லது ஒட்டுமொத்தத் தூக்கத்தின் அளவு பாதிக்கப்பட்டால் ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கமும் பாதிக்கப்படும். தொடர்ந்து சரியாக தூங்கவில்லை என்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது.
புரதம் உற்பத்தியாக...தூக்கத்தில்தான் உடலில் உள்ள செல்கள் புரதத்தை அதிகமாக உற்பத்தி செய்கிறது. செல்களின் வளர்ச்சிக்கும், பல காரணங்களால் செல்களில் ஏற்படும் சேதத்தைச் சரி செய்வதற்கும் அடிப்படையான கட்டுமானப் பொருளாக புரதம் உள்ளது.
இதனால் தேவையான அளவு ஆழ்ந்த தூக்கம் தூங்குகிறவர்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். நாம் தூங்கும்ேபாது இன்னும் எத்தனையோ இயக்கங்கள் நமது உடலில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதையெல்லாம் முழுமையாகக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞான உலகம் ஈடுபட்டிருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive