இதனிடையே சேலம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, சொந்த செலவில் தண்ணீர் வாங்கி ஊற்றும் நிலைக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 250க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 50 சதவீத பள்ளிகளில் போதுமான குடிநீர் வசதி இல்லை. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக மாணவர்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லை. இதனால், பல பள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே எந்தவொரு பள்ளியிலும் குடிநீர் தொடர்பாக பிரச்னை வரக்கூடாது, கழிப்பறைகளை முழுமையாக பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டளையிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குடிப்பதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். 
சுமார் 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு லோடு 300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. வாரத்திற்கு 6 லோடு வரை வாங்கி ஊற்றி நிலைமையை சமாளித்து வருகிறோம். இதற்கான தொகையை தலைமை ஆசிரியர்கள் தான் வழங்குகிறோம். ஒருசில பள்ளிகளில், சக ஆசிரியர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ஆனாலும், கழிவறை பயன்பாட்டிற்கு இன்னமும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
புதர்களை தேடும் மாணவர்கள்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் செயல்பட்டு வரும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிளியில் 6 முதல் பிளஸ் 2 வரையில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இரு கழிவறைகள் உள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் நீர் வறண்டுவிட்டதால், கழிவறையை யாரும் பயன்படுத்துவதில்லை. இதனால் மாணவர்கள் தினமும் இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு வெளியே உள்ள புதர்களுக்குள் சென்று சிறுநீர் கழிக்கின்றனர். இதே நிலைதான் ஆசிரியர்களுக்கும் உள்ளது. பள்ளி மாணவர்கள் புதர்களை பயன்படுத்தும்போது அவர்களை ஒரு ஆசிரியர் கண்காணித்து இடைவேளை நேரம் முடிந்ததும் பள்ளிக்குள் அனுப்புகிறார். இது கடந்த 6 மாதங்களாக, இந்த பள்ளியில் நிலவுகிறது.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு ஆயிரம் அடிகளுக்கு கீழே சென்றுவிட்டது. இதனால் தண்ணீர் தேவை உள்ள பள்ளிகளில் லாரிகளில் வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதியமான்கோட்டை பள்ளியில் கழிவறைக்கு தேவையான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கழிவறைகள் பூட்டப்பட்டதால் மாணவர்கள் மறியல்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா  கூத்தாண்டகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கடந்த ஆண்டு தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.  இந்த ஆண்டு பள்ளி துவங்கிய நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டும் பணி புரிந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் தண்ணீர் வசதியில்லாததால் பள்ளியின் கழிவறைகளையும் பூட்டி விட்டனர். இதனால் மாணவர்கள் வெளியே செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
இதனை கண்டித்து நேற்று காலை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் திடீரென பள்ளி கேட்டை பூட்டி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றுள்ளனர். ஜோலார்பேட்டை பிடிஓக்கள், வட்டார கல்வி அலுவலர்கள் வந்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 2 மணி நேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.