உயர் கல்வி கற்போர் எண்ணிக்கையை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தேசிய இலக்கை, தமிழகம் எப்போதோ எட்டி விட்டது என, கவர்னர் ரவி கூறினார்.
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற, தமிழக தேசிய மாணவர் படை மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, கிண்டி கவர்னர் மாளிகையில், நேற்று நடந்தது.
அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட என்.சி.சி., மாணவர்களை, கவர்னர் ரவி பாராட்டினார்.
பின், கவர்னர் ரவி பேசியதாவது:
மாணவர்கள், தினமும் ஏழு மணி நேரமாவது துாங்க வேண்டும். அதேபோல, தங்களின் உடல் நலனிலும் கவனம் செலுத்துவது அவசியம். ஒழுக்கத்துடன் உடல் நலனை பேணி காக்க, யோகா, உடற்பயிற்சி அவசியம். உடல் நன்றாக இருந்தால், நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். தெளிவான சிந்தனையும் நம்மிடம் ஏற்படும்.
இன்றைய இளைஞர்கள், எதிர்கால லட்சியங்களை நோக்கி பயணிக்க வேண்டும். எவ்வளவு தடைகள் வந்தாலும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். உங்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது.
நாட்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை, 2035ம் ஆண்டுக்குள், 50 சதவீதத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை, தமிழகம் எப்போதோ எட்டி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மாணவர் படையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி துணை இயக்குனர் ராகவ், என்.சி.சி., இயக்குனரகத்தின் மண்டல இயக்குனர் சாமுவேல் செல்லையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...