உலக அமைதிக்கான நோபல் பரிசுக்கு மூன்றாவது முறையாக நார்வே அமைதி குழுவிடம் கேரள மாநிலம் பீர்மேட்டைச் சேர்ந்த தபால்துறை மேலாளர் கின்னஸ் மாடசாமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
2025ல் சர்வதேச விருதான அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபரில் வழங்கப்படும். இந்த விருதுக்காக பீர்மேட்டில் தபால் துறை மேலாளராக உள்ள கின்னஸ் மாடசாமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ், மகாத்மாகாந்தி பல்கலை சர்வதேச உறவுகளின் துறை இயக்குனர் வினோதன், சர்வதேச பெண்கள் பாதுகாப்பு குழு பொது செயலாளர் பிரியங்கா நியோகி ஆகியோர் இவரை மூன்றாவது முறையாக பரிந்துரை செய்துள்ளனர்.
கின்னஸ் மாடசாமி 2011ல் பாலிதீன் பயன்பாட்டை அகற்றுவதற்கான பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அணு ஆயுதப் போரின் பேரழிவை தவிர்க்கவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுத குறைப்பு, பசுமை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல பல்கலைகளில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உலக அமைதியை ஏற்படுத்த அணு ஆயுதங்களை நிறுத்த வலியுறுத்தி நூற்றுக்கணக்கான புதுமையான திட்டங்களை நடத்தியுள்ளார்.
ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக கடிதங்கள் மூலம் போராடினார். உலகிலேயே மிக நீளமான கடிதத்தை எழுதி கின்னஸ் சாதனை படைத்தார். இவற்றை முன்வைத்து இவரை நோபல் பரிசுக்கு கேரளா சார்பில் பரிந்துரை செய்து நார்வே அமைதி குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து இப்பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நபர் இவர். இவரது பூர்வீகம் தமிழகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...