Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்


               "பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தகுதியாக, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது செல்லும்" என சென்னை ஐகோர்ட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.


                கடந்த, 2011-12ம் ஆண்டு முதல், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான, குறைந்தபட்ச கல்வித் தகுதியை, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு) நிர்ணயித்தது. அதன்படி, இதர வகுப்பினர், குறைந்தபட்சம் 45 சதவீதமும், இட ஒதுக்கீட்டின் கீழ் வரும், மாணவர்கள் அனைவரும், குறைந்தபட்சம், 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

                    மாநில உயர் கல்வித் துறை, 2010ம் ஆண்டு, ஜூனில் பிறப்பித்த உத்தரவின்படி, பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், 35 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்; ஆனால், ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைப்படி, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள், குறைந்தபட்சம், 40 சதவீதம் பெற வேண்டும்.

                   ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, 40 சதவீதம், நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு: குறைந்தபட்சம், 40 சதவீதம் நிர்ணயித்ததன் மூலம், சமூக ரீதியாக, பின்தங்கிய மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் இடம் கிடைப்பது கஷ்டமாகும்.

                இந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர், கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள். சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பதால், அவர்களுக்கு மதிப்பெண் தகுதியை மாநில அரசு தளர்த்தியுள்ளது. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

              மனுவை விசாரித்த, தனி நீதிபதி, "ஏ.ஐ.சி.டி.இ., வகுத்துள்ள விதிமுறைகளை எதிர்ப்பதற்கு, மாநில அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை" எனக்கூறி, மனுவை, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

              தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, ஐகோர்ட்டில் அப்பீல் மனுத் தாக்கல் செய்தது. அதே போல், தொழில்நுட்ப கல்வித் துறையின், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஊழியர்கள் சங்கமும் மனு தாக்கல் செய்தது.

                    மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி என்.பால்வசந்தகுமார் அடங்கிய, "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

              இந்த அதிகாரம், ஏ.ஐ.சி.டி.இ.,க்கு வழங்கப்படவில்லை. ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கு குறைவாக, மாநில அரசு நிர்ணயிக்க முடியாது; ஆனால், அதைவிட அதிகமாக நிர்ணயிக்கலாம் என்றும், சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

              சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பார்த்தால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள தகுதி மதிப்பெண்ணை விட, குறைவான மதிப்பெண்ணை மாநில அரசு நிர்ணயித்திருக்கக் கூடாது. வேண்டுமானால், ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதிக்கு இணையாகவோ அல்லது கூடுதலாகவோ, மாநில அரசு நிர்ணயிக்கலாம்.

              குறைந்தபட்ச தகுதியை, ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயிப்பதற்கு முன்பாகக் கூட, பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் காலியாக இருந்துள்ளன.

               கடந்த, 2007-08ம் ஆண்டில், 10 ஆயிரத்து 906 இடங்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், 904 இடங்கள் காலியாக இருந்தன. 2008-09ம் ஆண்டில், 12 ஆயிரத்து 30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 1.092 இடங்கள் காலியாக இருந்தன.

                கடந்த, 2011-12ம் ஆண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்கள், 35 ஆயிரத்து 158ல் இருந்து, 40 ஆயிரத்து 686 ஆக உயர்த்தப்பட்டது. அதாவது, 5,500 இடங்கள், கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இருந்தும், அதற்கு முந்தைய ஆண்டை விட, 5,400 இடங்கள் கூடுதலாக, காலியிடம் ஏற்பட்டது.

               எனவே, தொடர்ந்து காலியிடங்கள் ஏற்பட்டு வருவதை, 40 சதவீத தகுதி மதிப்பெண் நிர்ணயித்தது தான் காரணம் என, கூற முடியாது. இதற்கு, வேறு காரணங்களும் இருக்கலாம். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், எந்தத் தவறும் இல்லை. தமிழக அரசு தாக்கல் செய்த, அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ரிட் மனுவும், தள்ளுபடி செய்யப்படுகிறது.

                   குறைந்தபட்ச மதிப்பெண் ஆக, 40 சதவீதத்தில் இருந்து, 35 சதவீதமாக குறைப்பதற்கு, நாங்கள் உத்தரவிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அப்பீல் மனு மீதான விசாரணையில், "தற்போதைய நிலை தொடர வேண்டும்" என, இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது.

                  இதையடுத்து, 35 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில், கடந்த, இரண்டு ஆண்டுகளில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களை, எந்த தொந்தரவும் செய்யவேண்டாம். அவர்கள், தங்கள் படிப்பைத் தொடரலாம்.
இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive