NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்

92 அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்
உயர் கல்வியின் தரத்தை உயர்த்த ஒருபுறம் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 6,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
அதேபோல், அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,930 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
உயர் கல்வியில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில் (ஜி.இ.ஆர்.) இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் தமிழகம், தரமான உயர்கல்வி வழங்கும் நிலையையும் அடைய பேராசிரியர் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் தமிழக தலைமைச் செயலர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில் உயர் கல்வித் துறைச் செயலர், பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலை-அறிவியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையையும், ஒற்றைச்சாளர ஆன்-லைன் கலந்தாய்வு முறையில் நடத்துவது, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து அரசு கல்லூரிகளிலும் கழிவறைகள், குடிநீர், பி.இ. இறுதியாண்டு மாணவர்களுக்கு கட்டாய தொழில்நிறுவனப் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதேபோல், அரசுக் கலை- அறிவியல் கல்லூரிகளில் 6,500 பேராசிரியர் காலிப் பணியிடங்கள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,930 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்பட ஒட்டுமொத்த அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 9,500 ஆசிரியர் பணியிடங்களை படிப்படியாக நிரப்புவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் இரா.குமார் கூறியது:
அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் இடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருகின்றன. இப்போது, பேராசிரியர்கள் ஓய்வு பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நிலை படிப்படியாக உயர்ந்து 6,500 இடங்கள் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதை, உயர்கல்வித் துறை ஆலோசனைக் கூட்ட நிரல்கள் மூலமாக அரசே இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.
ஒட்டுமொத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதுபோல, தரமான உயர் கல்வி வழங்குவதிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ, பேராசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
அண்மையில் 2,340 உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், அதை திடீரென நிறுத்தி வைத்திருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி, நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்த வேண்டும்.
மேலும், அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் நிலை-1, நிலை-2 கல்லூரி முதல்வர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதோடு, கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வையும் விரைந்து நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive