தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.
இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதம் தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன.
இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடை பெறும் பி.வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்புக்கு 20,516 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 5,028 பேரும் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல் https://adm.tanuvas.ac.in/ என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிட்டப்பட்டது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் 57 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜி.திவ்யா, பெரம்பலூர் கே.கமலி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.இ.அம்தா மெகதாப், எம்.பார்கவி, ஐ.இலக்கியா ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். பிடெக் தரவரிசை பட்டியலில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்.பார்கவி, ஆர்.பிரவீனா, பி.கார்த்திகா, எம்.மெர்லீன் ஆகியோர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எல்.லூயிஸ் அர்னால்டு (கட்-ஆப் மதிப்பெண் 199.5) 5-வது இடத்தை பிடித்துள்ளார்.பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் மற்றும் பிடெக் படிப்புகளில் 8 இடங்கள் உள்ளன. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொது பிரிவுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெறவுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...