NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் -வங்கிகள் முடக்கம்: தமிழக அரசு புகார்

       தமிழகத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் முடங்கிப் போயுள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.   

                      இந்த முடக்கத்தால், வாடிக்கையாளர்களை இழக்கக்கூடிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள், அதையொட்டிச் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.
இந்த நிலை குறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் ஏழை, எளிய விவசாயிகள் ஏற்கெனவே பெற்றிருந்த பயிர்க் கடனுக்கான தொகையை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
கிராம அளவில் செயல்படும் இந்த தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களால் புதிய வைப்பீடுகள் ஏதும் பெற முடியாமல் முற்றிலும் செயலிழந்துள்ளன.
மேலும், இந்த சங்கங்கள் வழங்கிய பயிர்க்கடன், இதர கடன்களை வசூலிப்பதில் பெருமளவில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவு உணவு உற்பத்தி செய்யப்படும் சம்பா பருவகாலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய பயிர்க் கடன்கள் ஏதும் அளிக்க முடியாத நிலை உள்ளது.

விதை- உரங்கள் இல்லை
தமிழகத்தில் 4,474 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றால் விவசாயிகளுக்கு உரம், விதைகளை அளிக்க முடியவில்லை. பயிர்க்கடன் அளிக்கும்போது உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பயிர்க் காப்பீட்டு பிரீமியம், பொதுச் சேவை மையங்கள் வாயிலாக அளிக்கப்படும் சான்றிதழ்கள் போன்ற பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் இழந்து மிகுந்த வருவாய் இழப்புக்குள்ளாகி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலால் மத்திய கூட்டுறவு வங்கிகள் எந்தவித பணப் பரிவர்த்தனைகளோ அல்லது சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், அவற்றின் 813 கிளைகளும், அவற்றின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்குச் சேவை அளிக்க முடியாமல் முடங்கிப் போயுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை இழக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூட்டுறவுக் கடன் சங்கங்கள்
கிராமப்புறங்களில் வசிப்போர், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலேயே சேமிப்புக் கணக்குகளின் மூலம் பணத்தைச் செலுத்தி வருகின்றனர். இப்போது எழுந்துள்ள சூழலால், கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்களால் பணத்தைச் செலுத்த முடியவில்லை. இதனால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் கடன்கள் அளிக்க முடியாத நிலைமை
மத்திய அரசின் நடவடிக்கையால், பயிர்க் கடன்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஐந்தரை ஆண்டுகளில் உரிய காலத்தில் பயிர்க் கடன் தொகையை திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு அரசின் சலுகையாக ரூ.910 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டில் வட்டி மானியம், ஊக்கத் தொகையாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய தவணைத் தேதிக்கு முன்பு பயிர்க்கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 7 சதவீத வட்டி மானியம் வழங்குவதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் கடந்த 7 -ஆம் தேதி வரை 54 லட்சத்து 33 ஆயிரத்து 248 விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரத்து 289 கோடி அளவுக்கு வட்டியில்லாத பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 612 விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 75.41 கோடி மட்டுமே பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த நிதியாண்டின் (2015-16) இதே காலத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 512.80 கோடி அளிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிக்கையால் பயிர்க்கடன் வழங்குவதில் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உணவு உற்பத்தியும் வெகுவாகப் பாதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
fertilizer




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive