NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தின் கவனம் ஈர்த்த ஒருநாள் தேசிய கருத்தரங்கு "இயற்கையோடு இணைவோம்"



துவரங்குறிச்சி,அக.29: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகில் உள்ள பொன்னம்பட்டி பேரூராட்சி வளம்மீட்பு பூங்கா அருகில் இயற்கையோடு இணைவோம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது..


விழாவிற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி தலைமை தாங்கிப் பேசியதாவது: பொன்னம்பட்டி பேரூராட்சியை சுற்றுச் சூழல் பள்ளி என்று சொல்லலாம்..சமூக விஞ்ஞானிகள், ஆர்வலர்களுக்கு இது ஒரு போதி மரம்  என்று கூட சொல்லலாம்.சுற்றுச் சூழலை ,தூய்மையை பராமரிக்க வேண்டும் எனில்  அரசுப் பணி என்றில்லாமல் சேவை மனப்பான்மை,கடமை உணர்வோடு செய்யக் கூடிய இயல்பான எண்ணத்தை நம் மனதில் வளர்த்துக் கொள்ள  வேண்டும்.இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில  நாம் இயற்கையை விட்டு வெளியில் நிற்கிறோமோ என்று விவாதிக்கும  அளவுக்கு ஆபத்துகளை எதிர்நோக்கி இருக்கிறோம்..எளிமையாக இருப்போம் என்ற மனநிலைக்கு  போராட வேண்டி உள்ளது..ஆடம்பரமே நம்ம தராக மந்திரம் என்று வாழ்ந்து வருகிறோம்..விளைநிலங்கள் சுருங்கி கொண்டிருக்கிற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..கடலின் அடிமட்டத்தில  பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கிலே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன..இதற்கு காரணம் நாம் தான்..வேறு யாரையும் காரணம் சொல்ல முடியாது..
தமிழகத்தில் சம உரிமையில் நாம் மெச்சத்தக்க வகையில் மற்றவர்களை விட ஒருபடி மேலே தான் இருக்கிறோம்..ஆனால் சுகாதாரம்,சுற்றுச் சூழல் என்று வரும் பொழுது விமர்ச்சிக்கும் அளவுக்கு உள்ளோம்.....சாலையின் இருபுறங்கள.,குளங்கள் எங்கு பார்த்தாலும் குப்பைகள்,கழிவுகள் எங்கும்  பிளாஸ்டிக் கழிவுகளோடு பெருகி கிடப்பதால் கிராம ஊராட்சி, நகராட்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளோடு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்..
இந்நிலை மாற நம் வாழ்க்கை முறை மாற வேண்டும்..நாம் இயற்கைக்கு மாற வேண்டும் .ஏதார்த்தத்துக்கு மாற வேண்டும்..அப்பொழுது தான் எதிர்பார்த்த மாறுதல் நடைபெறும்..இந்த முயற்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட்டால் தான் பாதுகாப்பான சுற்றுச் சூழலை உருவாக்க  முடியும் என்றார்..பின்னர் பொன்னம்பட்டி பேரூராட்சியை சிறந்த பேரூராட்சியாக வளர காரணமாக இருந்த பேரூராட்சிப் பணியாளர்களை பாராட்டி அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்..மாவட்ட ஆட்சியரின் பாராட்டினை பெற்ற தூய்மைப் பணியாளர்களும் பாட்டு பாடி அசத்தினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது..









முன்னதாக ஸ்கோப் இயக்குநர் மா.சுப்புராமன் வரவேற்றுப் பேசினார்.

 பேரூராட்சிகள் இயக்கக துணை இயக்குநர் எஸ்.எம்.மலையமான்திருமுடிக்காரி,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் க.கோபிநாத், கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார்  முன்னிலை வகித்தனர்.

 மதுரை மாவட்ட முன்னாள் நீதிபதி எஸ்.ராஜீ , அகில இந்திய வானொலி நிலைய துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்..

முன்னதாக  தூய்மை ஒருங்கிணைப்பாளர் இ.சந்திரசேகர் தயாரித்த *வழிகாட்டும் பொன்னம்பட்டி* என்ற ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட பேரூராட்சிகள் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி பெற்றுக்கொண்டார்.
பின்னர் மறுசுழற்சி மேலாண்மை குறித்து பொன்னம்பட்டி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது,
மேலாண்மையும  எதிர்காலமும்  என்ற தலைப்பில் இந்திய வெட்டிவேர் நெட் வொர்க் உறுப்பினர் சி.சே.அசோக்குமார் ஆகியோர்  கருத்துரை வழங்கினர்.

விழாவில் கல்வியாளர்கள் சங்கம உறுப்பினர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் முருகேஷ்வரி பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை விழுப்புரம் மாவட்ட ஆசிரியர் பரிமளாவின் சுற்றுச்சூழல் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியர் கைகளால் வழங்கி அசத்தினார்.


*மரம் வளர்ப்போம் பாதுகாப்போம்* என்ற தலைப்பில்
சேலம் இளைஞர் குழு,புதுக்கோட்டை விதைக்கலாம் குழு,புதிய தலைமுறை நம்மால் முடியும் குழு ,தேனி வேர்கள் அமைப்பினர்கள் கலந்துரையாடினார்கள்..பின்னர் பாரதிதாசன் பல்கலைக் கழக நிகழ்கலைத் துறையின் சார்பில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக்கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது..

திருச்சி மண்டல டிஐஜி ஆர்.லலிதா லெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிறைவுவிழாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விருது வழங்கும் விழாவிற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் கொச்சி ஆனந்தன்,
இறகுகள் ரவீந்திரன், மக்கள் ஊடக மைய நிர்வாக ஆசிரியர் மு.சித்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விருதுகள் விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை தலைவர் முருகேஸ்வரி வரவேற்றுப் பேசினார்..

இயற்கையோடு இணைவோம் கருத்தரங்கின்  நிகழ்வை ஒருங்கிணைத்து ,
நெறிப்படுத்திய கல்வியாளர்கள் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதிஷ்குமார் மாணவர்களையும்,
மரங்களையும் சரியாக வளர்த்துவிட்டால் எந்த தேசம் சரியாக வளர்க்கிறதோ அந்த தேசமே வளர்ச்சியுறும் என்றார்.


 திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: இயற்கையோடு இணைவோம் நிகழ்வில் நான் கூறுவது என்னவென்றால்  நம்மாழ்வார் விவசாயம் என்பது வியாபாரம் அல்ல.வாழ்க்கை முறை என்றார்..ஆனால் இன்று வியாபார வன்முறையில் ஒவ்வொரு நாளும்  உயிர் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் நிறைய மக்களுக்கு பல வியாதிகள்,உடல் ரீதியான பிரச்சனைகள் மனரீதியான பிரச்சனைகள் பல வியாதிகள் வர காரணம் இயற்கை மற்றும  இயற்கையோடு ஒன்றில்லாமல் மறந்தது தான்..தமிழ்நாட்டில் இயற்கையை மீட்டெடுக்க பல அமைப்புகள்  போராடிக் கொண்டிருக்கிறார்கள்..அந்த வகையில் மாறுவோம் மாற்றுவோம் என்ற அமைப்பின் மூலம் இயற்கைக்கு மக்களை அழைத்துச் செல்லும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்..அந்த வகையில் இயற்கையோடு இணைவோம் என்கிற மாபெரும் கருத்தரங்கத்தில் கல்வியாளர்கள் சங்கமம் மூலம் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
பொன்னம்பட்டி பேரூராட்சி இயற்கை கழிவுகளில் இருந்து மறுசுழற்சி செய்து தமிழ்நாட்டிற்கே ஒரு முன் உதாரண பேரூராட்சியாக இருப்பது பெருமையாக இருக்கிறது.மாற்றம் என்பது பொன்னம்பட்டி பேரூராட்சியில் மட்டும் நிகழ்ந்தால் போதாது .தமிழ்நாடு முழுவதும் இந்த மாற்றம் நிகழ வேண்டும்..ஒரு பேரூராட்சியில் மட்டும் செயல்படுத்தினால் இந்த மாற்றம் நிகழாது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சி,நகராட்சி,ஊராட்சி போன்ற பல பகுதிகளில் அங்கு உள்ள அதிகாரிகள் தான்  முன்னெடுக்க வேண்டும் .அப்படி முன்னெடுக்கும் பொழுது தான் தமிழகம் இயற்கை வளம் மிக்க மாநிலமாக உருவெடுக்கும் என்றார்..மீ டூ என்பது பெண்களுக்கான ஒரு நல்ல நகர்வு ..இது பழிவாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தாமல்  மீ டூ பற்றிய விழிப்புணர்வை பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.வெளிநாடுகளில் ஆண்,பெண் பற்றிய பாலியல் கல்வி உள்ளது..அப்படி இருந்தும் அந்த மாதிரி வளர்ந்த நாடுகளிலும  இந்த பிரச்சனை இருக்கிறது...ஆனால் இந்தியாவில் பாலியல்  கல்வி பேச்சளவில் உள்ளது..கல்வி முறையில்  கொண்டு வர வேண்டும்.பெண்கள் எப்படி நடக்க வேண்டும்,உடையணிய வேண்டும்,பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்  என்று சொல்கிற சமூக பெற்றோர்கள்  தன் பெற்ற ஆண்பிள்ளைகளை இந்த சமூகத்திற்கு பொறுப்புள்ள குடிமகனாகவும்,பெண்களை மதிக்கும் ஆண்மகன்களையும் உருவாக்க வேண்டும்.. அன்று தான் உண்மையான பெண்கள்  பாதுகாப்புக்கான தீர்வு கிடைக்கும் என்றார்.

விழாவில்  ஜமால் முகம்மது கல்லூரி தாளாளர் டாக்டர் ஏ.கே.காஜா நஜ்முதீன்,மதர் தெரஸா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சி.உதயகுமார்,லிட்டில் ஊட்டி நிறுவனர் மருத்துவர் துரைசாமி,அய்மான் மகளிர் கல்லூரி தாளாளர் எம்.எம்.சாகுல் ஹமீது,புதுக்கோட்டை மரம் தங்கசாமி,திருவண்ணாமலை மரம் கருணாநிதி, மரு.பி.மதிவாணன்,
காவிரி குடும்ப ஒருங்கிணைப்பாளர் கணபதி,மண்வாசனை நிறுவனர் தி.மேனகா,ஐந்திணை வேளாண் மற்றும் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனர் அருண்,பசுமை இந்தியா நிறுவனர் நாகராஜன்,இளம் தவில்வித்வான் அமிர்தவர்ஷினி மணிசங்கர்,மற்றும்  தூய்மைக் தூதுவர்கள் துவரங்குறிச்சி  ஆண்கள் & பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் விருதுகள் வழங்கப்பட்டது..
 
விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சிகள் இயக்கம் சென்னை,திருச்சி நபார்டு,திருச்சி பாரதிதாசனல பல்கலைக் கழகம்,திருச்சி ஸ்கோப்,தூய்மை திருச்சி,தொட்டியபட்டி ஐ.சி.ஐ வங்கி,
கல்கி வார இதழ் ,கல்வியாளர்கள் சங்கமம் மற்றும் மக்கள் ஊடக மையத்தினர் செய்திருந்தனர்..

விழாவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர் சங்கமத்தின் ஆசிரியர்கள்,
சுற்றுச் சூழல் தன்னார்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் ,விவசாயப் பெருமக்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் வழக்கறிஞர் கோ.இராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive