மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களை சாதியக் கொடுமைகள் அதிகம் நடக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க, அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அரசின் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடு தலைதூக்கி நிற்பதாக அவர் சுட்டிக்காட்டினார். நெல்லையில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், காவல்துறை, ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்களை நடத்துவதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். இது, சமூகத்தில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் கோரினார்.
எஸ்.சி, எஸ்.டி ஆணையக் கூட்டங்கள் முதலமைச்சர் தலைமையில் மட்டுமே நடத்தப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடக்க வேண்டிய மாதாந்திர வன்கொடுமை தடுப்புக் குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். இந்தக் கூட்டங்கள் நடைபெறாததே பல சாதியக் கொலைகளுக்கு வழி வகுப்பதாகக் குறிப்பிட்டார்.
காதலர்கள் பாதுகாப்புக்காக காவல்துறை அல்லது பா.ஜ.க. அலுவலகங்களை நாட வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறையினர் பெரும்பாலும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், பா.ஜ.க. அலுவலகத்திற்குச் சென்றால் பெற்றோரை அழைத்து பிரித்து விடுவார்கள் என்றும் கூறினார். ஆனால், தங்கள் கட்சியின் அலுவலகங்களில் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு சட்டப்பூர்வமாக உதவுவதாகத் தெரிவித்தார்.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது, எந்தச் சாதிக்கும் ஆதரவான சட்டம் அல்ல என்றும், எந்தச் சாதியில் படுகொலை நடந்தாலும் அது தடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...