தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களின் புகைப்படம், பதிவெண் மற்றும் பாடம் போன்ற விவரங்கள் அடங்கிய முகப்புத்தாளை (டாப் ஷீட்) முதன்மை விடைத்தாளுடன் சேர்த்து, தேர்வுத் துறை அறிவுறுத்தலின்படி தைக்கும் பணி அந்தந்த மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டு பொதுத் தேர்வு முகப்புத்தாள் தைக்கும் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பொதுத் தேர்வுகளில் விடைத்தாள் மதிப்பீடு முறையில் ரகசியம் காக்கும் வகையில் 2014-ம் ஆண்டுமுதல் பார்கோடுடன் கூடிய முகப்புத் தாள்களை விடைத்தாள்களுடன் இணைத்து தைக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024-25-ம் கல்வியாண்டு முதல் மாவட்டந்தோறும் முகாம் அமைத்து அதில் முகப்புத் தாள்களை விடைத்தாள்களுடன் சேர்த்து தைத்து தேர்வு மைய பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
முகாம் கண்காணிப்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரும், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரும், முகாம் அலுவலராக முகாம் நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரும் செயல்படுவர்.
முகப்புத் தாள்தைக்கும் பணியை முகாம் நடைபெறும் நாட்களில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர் ஒருநாள் விட்டு ஒரு நாள் ஆய்வு செய்ய வேண்டும். விடைத்தாள்களுடன் தைக்கப்படும் முகப்புத் தாள்கள் அந்த பாடத்துக்குரியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
அந்த முகாமுக்குள் வெளிநபர் யாரையும் அனுமதிக்கக்கூடாது. மையங்களில் இருந்து முகப்புத் தாள்களுடன் கூடிய விடைத்தாள் கட்டுகளை பெற்றுச் சென்று தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...