NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமச்சீர் கல்வி வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?


        மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.

        மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப் புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை, இயக்குனரகம் கவனித்து வருகிறது.

        சென்னையில் உள்ள, இயக்குனர் அலுவலகம் மற்றும் 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் சேர்த்து, 70 பேர், பணியாற்றி வருகின்றனர். நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, பொது பாடத் திட்டம் உருவாக்கி, அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், தனியார் பள்ளிகளுக்கு, இன்னும், மெட்ரிகுலேஷன் என்ற பெயர் இருந்து வருகிறது.

         இந்த பெயரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் இயங்குவது, தேவையற்ற நிர்வாகச் செலவை ஏற்படுத்தும் என்றும், இந்த இயக்குனர் அலுவலகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து விடலாம் என்றும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

         இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தினர் கூறியதாவது: பாடத் திட்டங்கள் மட்டும் பொதுவானதாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு விதமான கல்வி திட்டங்களுக்கான சட்ட விதிமுறைகள், அப்படியே உள்ளன. மாநில பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய, மூன்று கல்வி முறைகளுக்கான நிர்வாகம், பள்ளி கல்வித்துறையின் கீழ் இருக்கிறது.

          நர்சரி பள்ளிகளுக்கான நிர்வாக கட்டுப்பாடு, தொடக்க கல்வித்துறையிடம் உள்ளது. அனைத்து நிர்வாகப் பணிகளையும், ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனில், முதலில் அதற்கான சட்ட விதிமுறைகளை நீக்கி விட்டு, பொதுவான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம், அரசு தான் செய்ய வேண்டும்.

          இதை எதுவும் செய்யாமல், இயக்குனரகத்தை மட்டும், வேறொரு துறையுடன் இணைக்க முடியாது. ஏற்கனவே, பெரும் பணிச்சுமையுடன் இயங்கி வரும், பள்ளிக் கல்வி துறையிடம், தனியார் பள்ளிகளையும் ஒப்படைத்தால், மேலும் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பல்வேறு நிர்வாக குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, கல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

 
         தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எடுத்து விட்டு, தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகம் என, அமைக்கலாம். இந்த நிர்வாகத்தை, பள்ளிக் கல்வியுடன் இணைத்தால், நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். தனியார் பள்ளிகளுக்கு, பெரும் பிரச்னைகள் ஏற்படும்.

         நிர்வாக வசதிக்காகவும், பள்ளிகளை முறையாக கண்காணிக்கவும் தான், தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக முறையில், சில குறைகள் உள்ளன. குறிப்பாக, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
          
         இவர்களால், தனியார் பள்ளிகளை, சரிவர கண்காணிக்க முடியவில்லை. அனைத்து காலி பணியிடங்களை நிரப்பியும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த, உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும்.இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive