NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பற்றாக்குறை - வகுப்புகளை இழக்கும் மாணவர்கள்


         தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
 
          பகுதிநேர விரிவுரையாளர்களைக் கொண்டு, நிலைமையை சரிசெய்யும் முயற்சிகள் நடந்தாலும், நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனத்தை, அரசு உடனடியாக மேற்கொண்டால் ஒழிய, இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

         உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, மாநிலமெங்கும் மொத்தம் 3,120 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும், அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, 1,623 உதவிப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இத்தகவலை, பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு(AUT) வெளியிட்டுள்ளது.

              ஆங்கிலம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியில், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு, கணிதம் மற்றும் கணிப்பொறி அறிவியல் போன்ற துறைகள், பேராசிரியர் பற்றாக்குறை நிலவும் துறைகளில் முக்கியமானவை.

             சில மாதங்கள் முன்பு, 1,623 பகுதிநேர விரிவுரையாளர்களை உடனடியாக நியமித்து, அவர்களுக்கு, ஊதியமாக, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரையில், உறுப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

         மேலும், பகுதிநேர விரிவுரையாளர் நியமனமும் முறைப்படியானதாக இருப்பதில்லை. பலபேர் தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்குமே தவிர, சிக்கலை சரிசெய்ய உதவாது என்று தொடர்புடைய வட்டாரங்கள் வேதனையுடன் தெரிவித்தன.

        சென்னையை எடுத்துக்கொண்டாலே, ஒரு துறைக்கு 20% வரை பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அப்படியிருக்கையில், கிராமப்புற பகுதிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

சம்பளப் பிரச்சினை

         அனுபவம் வாய்ந்த ஒரு அசோசியேட் ப்ரொபஸர், மாதம் ரூ.80 ஆயிரம் ஊதியமாக பெறுகையில், இந்த பகுதிநேர விரிவுரையாளர்கள், வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே பெறுகிறார்கள். பணி பளுவும் அதிகம். மேலும், இவர்கள், தாங்கள் பணிபுரியும் கல்லூரியால், முன்னறிவிப்பின்றி, எந்நேரமும் பணிநீக்கம் செய்யப்படலாம். இதைத்தவிர, அவர்கள், எம்.பில் மற்றும் பிஎச்.டி போன்ற உயர்படிப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

         உதவிபெறும் கல்லூரிகள், பகுதிநேர விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,000 முதல் 8,000 வரைதான் தருகின்றன. அந்த சம்பளமும், உரிய நேரத்தில் தரப்படுவதில்லை. இந்த பகுதிநேர விரிவுரையாளர் பணி என்பது, உதவிபெறும் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சுயநிதி பிரிவுகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி, அதிக பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive