NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்

     குரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது.


அரசு விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் நவ., 1ம் தேதி குரூப்-1 நிலையில் உள்ள காலி பணியிடங்களை கணக்கெடுக்க வேண்டும். பின் இரு பணியிடங்கள், பதவி உயர்வுக்கும், ஒரு பணியிடம் நேரடி நியமனத்திற்கும் என பிரித்து அதன்படி, பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இந்த விதிமுறை, 13 ஆண்டுகளாக கடைபிடிக்கப்படவில்லை என தேர்வை எழுதுவோர் குற்றம் சாட்டுகின்றனர். இதை, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதிக்கிறது. உயர் பதவிகளில் இருப்பவர்கள், விதிமுறைக்கு மாறாக போட்டி தேர்வுக்கான இடங்களையும், பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக, இரட்டை இலக்கத்திலான இடங்கள் மட்டுமே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு வருகின்றன. 2010ல், அதிகபட்சமாக, 131 பணிஇடங்கள் தரப்பட்டன. அதன்பின் குறைந்து விட்டது. நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பிலும் வெறும், 79 இடங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிமீறலை டி.என்.பி.எஸ்.சி.,யும், கண்டு கொள்வதில்லை என்றும், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய இடங்களை கேட்டுப் பெறுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வர் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: விதிமுறையையும், கடைபிடிப்பது இல்லை; காலி பணியிடங்கள், பதவி உயர்வு ஆகியவற்றில், வெளிப்படைத்தன்மையும் இல்லை. பணம் வாங்கி, தேர்வுக்கான இடங்களையும், பதவி உயர்வு மூலம் நிரப்பி விடுகின்றனர். இதை, அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

ஒருவர், 28 வயதில், குரூப்-1 தேர்வை எழுதினால், அதன் முடிவு வெளிவர, மூன்றரை ஆண்டுகள் ஆகி விடுகின்றன. அதே நபர், வயது காரணமாக, அடுத்த தேர்வை எழுத முடியாது. வயது வரம்பை தளர்த்தக் கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்; அரசு, கண்டு கொள்ளவில்லை.

இதுபோன்ற நிலையில், காலி பணி இடங்களை உரிய விதிமுறைப்படி அளிப்பதை, சட்ட ரீதியில் தான் உறுதி செய்ய முடியும். இந்த விவகாரத்தில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகையில், "காலி பணியிடங்களை அளிப்பதில், விதிமுறை பின்பற்றப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், இந்த பிரச்னையை அரசு தான், சரிசெய்ய வேண்டும். நாங்கள், ஒவ்வொரு துறையாக சென்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. முதல்வர் உத்தரவிட்டால், சரியான காலி பணி இடங்கள், தேர்வாணையத்திற்கு கிடைக்கும் என" தெரிவித்தன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive