NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐகோர்ட்டில் வழக்கு...5,8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல்!

images%252859%2529

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்வை எதிர்த்து, உயர் நீதிமன்றமதுரை கிளையில், வழக்கு தொடரப்பட்டுஉள்ளதால், தேர்வு பணிகளை பள்ளிகள் நிறுத்தியுள்ளன.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், இதே வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கிடையாது.இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழந்தை பருவத்திலேயே தேர்வு பயமும், மன அழுத்தமும் ஏற்பட்டு விடும் என, பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லுாயிஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். மனுவில், அவர் கூறியிருப்பதாவது:இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 6 முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு,துவக்க கல்வி அளிப்பது அடிப்படை உரிமை.இந்த சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு நடத்த, 2019 செப்., 13ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களில், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு, இலவச கட்டாய கல்வி சட்டத்திற்கு எதிரானது.பொதுத் தேர்வால், சிறு வயதுள்ள துவக்க நிலை மாணவர்களுக்கு, உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படும்.சிறு வயது மாணவர்களின் படிப்பில், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

சரமாரி கேள்வி

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் லஜபதி ராய்,''துவக்க கல்வி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகள் என்பதையும் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதையும், கட்டாயமாக்கக் கூடாது என, கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ''தமிழகம் மட்டுமே, இந்த பொதுத்தேர்வை அமல்படுத்தியுள்ளது; மற்ற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை,'' என்றார்.அப்போது, 'ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள்கள், அந்த பள்ளியிலேயே திருத்தப்படுமா அல்லது மற்ற பள்ளிகளுக்கு அனுப்பப்படுமா; தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த குழந்தைகளின் நிலை என்ன' என, நீதிபதிகள் கேட்டனர். 'அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'மறுதேர்விலும் குழந்தைகள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் நிலை என்ன' என்று, நீதிபதிகள் மீண்டும் கேட்டனர். 'அதுகுறித்து, அரசு ஆலோசித்து முடிவு செய்யும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில், அரசின் நிலைப்பாடு குறித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய சட்டத் துறை செயலர், மனிதவள மேம்பாட்டு துறை சார்பு செயலர், தமிழக பள்ளி கல்வி செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பவும் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை, பிப்., 19க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பணிகள் திடீர் நிறுத்தம்

நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை துவங்கியுள்ளதால், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக் கான பொது தேர்வு பணிகள், பெரும்பாலான பள்ளிகளில், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையம் அமைத்தல், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்களை சரிபார்த்தல், தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்கள், ஊழியர்களை நியமித்தல், விடைத்தாள் திருத்தம் போன்ற திட்டமிடல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.வழக்கின் முடிவுக்கு பின், இப்பணிகளை பார்த்து கொள்ளலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்வு பணிகளை தொடர்ந்தால்,அரசுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive