Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.21

  

திருக்குறள் :

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 

பொருள் - ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்

பழமொழி :

Little strokes fell great oaks


அடி மேல் அடியடித்தால்  அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 

2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும்
உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள்.. நம்பிக்கை
இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள
பிரச்சனையை பார்க்கிறார்கள்.------கமலா ஹாரிஷ்


பொது அறிவு :

1. உலகின் மிக பெரிய நீர் வீழ்ச்சி எது? 

வெனிசூலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி. 

2. உலகின் மிகப்பெரிய அணைக்கட்டு எது? 

கனடாவில் உள்ள சின்குரூட் டெய்லிங்ஸ் அணைக்கட்டு

English words & meanings :

Little - not much அதிகம் என்னிடம் இ‌ல்லை , 

a little - some, என்னிடம் கொஞ்சம் உள்ளது

ஆரோக்ய வாழ்வு :

மூங்கில் அரிசி


மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.

ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்,  நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.

நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

கணினி யுகம் :

Alt + 0236 - ì. 

Alt + 0242 - ò

நவம்பர் 15

கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்... 



கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

தங்க மஞ்சள் குருவி!

விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.

மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.

மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.

தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.

நீதி : அறிவுடையார் எல்லாம் உடையார்

இன்றைய செய்திகள்

15.11.21

* முதல்வர் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் செல்ல உள்ளார்.

* சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.

* மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது முறையாக நேற்றிரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக 24 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு, கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

* தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை பி.சி.சி.ஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.

* T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா.


Today's Headlines

 * CM MK Stalin inspects rain-affected areas in Chennai and will visit Kanyakumari District also. 

* For the crop insurance of Samba Rice, tomorrow is the last day said the department of Agriculture and Farmer Welfare. 

* In the history of 88 years Mettur Dam water reaches its full capacity of 120 feet for the 41st time yesterday night. Due to this 24,000 cc surplus water is released through the hydropower stations and 16 eyes sluice gate. So flood Warning is given to 11 districts. 

* For 12 sports stars including Neeraj Sopra who won gold in Tokyo Olympics in Javelin throw President Ramnad Govind gave Kel Ratna Award. 

* VVS Lakshman becomes the Head of the National Cricket Academy. It is confirmed by BCCI head Sourav Ganguly. 

* In T20 world Cup finals Australia won against New Zealand by 8 wickets and won the championship. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive