Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மொத்த இடங்களை மூன்று நாள்களில் இணையதளத்தில் வெளியிட ஆணை

        இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில், பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

        "மாற்றம் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநர் ஏ.நாராயணன் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மழலையர், தொடக்கப்பள்ளி, மெட்ரிகுலேஷன், மேல் நிலை, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான சங்கத்தின் மாநாடு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. 

 அதில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கடந்த சில ஆண்டுகளுக்கான கட்டணத் தொகையாக ரூ. 150 கோடியை அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. 

 அதனால், நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லையெனில் நிகழ் கல்வியாண்டில் (2015-16) இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதனால், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நிகழ் கல்வியாண்டுக்கு (2015-16) அவர்கள் விண்ணப்பங்கள் வழங்கவில்லை. இந்த விண்ணப்பங்கள் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இந்த உத்தரவையும் சங்க உறுப்பினர்களான பள்ளிகள் பின்பற்றவில்லை. எனவே, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க மாட்டோம் என்ற தீர்மானத்துக்குத் தடை விதிக்க வேண்டும்.

 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை பள்ளிகள் நிரப்புகின்றனவா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மனுவில் கோரினார்.

 இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 அதில், தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக விரிவான விளம்பரங்கள் வெளியிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்கிறோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

 இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்ளைச் சேர்ப்பது தொடர்பாக அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

 எனினும், கூடுதலாக, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீதத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள மொத்த இடங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அதன் இணையதளத்தில் மூன்று நாள்களுக்குள் வெளியிட வேண்டும்.

 மேலும், நவம்பர் மாதம் இறுதி வரை இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் காலியாக வைக்கப்படும் எனவும் அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

 அதனால், அடுத்த விசாரணையின் போது அந்த இடங்கள் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளன எனவும், எவ்வளவு காலியாக உள்ளன என்பதும் தெரிய வரும். மேலும், இடங்கள் காலியாக இருந்தால் அதை நிரப்புவதற்குத் தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

 மேலும், பள்ளிக் கல்வித் துறை நான்கு வாரங்களுக்குள் அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு ஜூலை 6-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive