Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பேசினாலே பரவுது! கொரோனா தொற்று...புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை!

Tamil_News_large_2774228

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தும்மினாலோ, இருமினாலோ, பேசினாலோ, அவரிடமிருந்து வெளியாகும் எச்சிலின் நுண் துகள்கள், காற்றில் 10 மீட்டர் வரை பரவும். அந்த காற்றை சுவாசிப்பவர்களும், எச்சில் துகள்கள் விழுந்த இடத்தை தொடுபவர்களும், வைரசால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் முதல் அலை, கடந்த ஆண்டு பரவியது. அப்போது, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், 'கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எளிதாக தொற்றி விடுகிறது.

சமூக இடைவெளி

'ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை, மற்றொருவர் தொட்டு, முகத்தில் தேய்க்கும்போது, வைரஸ் பரவும்' என தெரிவிக்கப்பட்டது.'அதனால், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; 6 அடி துாரம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல், நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிகரித்தது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாத பகுதிகளில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொடர்பான சிகிச்சை பற்றியும், வைரசின் தன்மை பற்றியும், தங்கள் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அவ்வப்போது திருத்தம் செய்து வெளியிட்டு வருகிறது. 'பிளாஸ்மா சிகிச்சை முறையால், கொரோனா நோயாளிகளுக்கு பலனில்லை' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. இதையடுத்து, கொரோனாவுக்கான சிகிச்சையில், பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 17ல் உத்தரவிட்டது.

பல கட்டுப்பாடுகள்

இதன்பின், 'ரெம்டெசிவிர்' மருந்து குப்பிகளை, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் விதித்தது. இந்நிலையில், கொரோனா பரவல் பற்றி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ், காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை, சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின், அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களும், தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போது, இருமும் போது அல்லது பேசும் போது, அவரிடமிருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள், அவரிடமிருந்து, 2 மீட்டர் துாரத்துக்குள் கீழே விழுந்துவிடும். ஆனால், 'ஏரோசோல்' எனப்படும், எச்சிலின் சிறிய துகள்கள், காற்றில், 10 மீட்டர் துாரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.

நல்ல காற்றோட்டம்

காற்றிலிருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு, தன் மூக்கையோ, கண்களையோ தொட்டால், அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதியாகிஉள்ளது. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடங்களில், இந்த ஏரோசோல்கள் விழுந்தால், வைரஸ் தொற்று வேகமாக பரவும். 

அதனால், வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், கிருமி நாசினிகளை பயன்படுத்தி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில், மக்கள் இருப்பது நல்லது. ஏனெனில், காற்றோட்டம் உள்ள பகுதிகளில், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் ஜன்னல்களை திறந்து, காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.

இவ்வாறு அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மீண்டும் செயல்படுத்துமா அரசு?

கொரோனோ தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் எதிர்பார்க்காத வகையில் உள்ளதால், அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அலோபதியுடன், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை மருந்துகளை சேர்த்து அளிக்கப்படும் ஒருங்கிணைந்த சிகிச்சைக்கு, நல்ல பலன் கிடைத்து வருவதை, அரசே உறுதி படுத்தி உள்ளது.

எனவே, அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும், சாதாரண சிகிச்சை முதல், தீவிர சிகிச்சை வரை, இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்ப்பு மருந்துகள்

இந்திய மருத்துவ முறையில், கொரோனா தொற்றை தடுக்க, பயன்படுத்த வேண்டிய மருந்துகளின் விபரங்களை, தமிழக அரசு, கடந்த ஏப்., 24ல், அரசாணையாக வெளியிட்டது. நோய் எதிர்ப்பு சக்திக்காக அரசு பரிந்துரைத்த மருந்துகள் விபரம்:

* சித்த மருத்துவம்: இம்மருத்துவ முறையில், கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு கஷாயத்தை, பெரியவர்கள், 60 - - 90 மி.லி., வரை; சிறியவர்களுக்கு, 35 -- 45 மி.லி., வரை, உணவுக்கு முன், தினமும் ஒரு வேளை என, ஒரு மாதம் அருந்தலாம். குழந்தைகளுக்கு டாக்டர் அறிவுரை கேட்டு, அதற்கேற்ப வழங்க வேண்டும்

* ஆயுர்வேத மருத்துவம்: நன்கு காய்ச்சி, ஆற வைக்கப்பட்ட, 60 மி.லி., குடிநீரில், 15 மி.லி., இந்து காந்த கஷாயம் கலந்து, தினமும் இரண்டு வேளை, உணவுக்கு முன் அருந்தலாம். 10 கிராம் கூஷ்பந்த ரசாயனம் அல்லது அகஸ்த்ய ரசாயனத்தை, டாக்டரின் அறிவுரைக்கேற்ப, உணவுக்குப் பின், தினமும் இருவேளை சாப்பிடலாம்

* யோகா மற்றும் இயற்கை மருத்துவம்: இம்முறையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பெரிய நெல்லிக்காய், துளசி, இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் கலந்த ஜூஸ், ஒரு நாளைக்கு இரு முறை, 250 மி.லி., அருந்தலாம்; குழந்தைகள், 100 மி.லி., பருகலாம். 

தோல் நீக்கி இடிக்கப்பட்ட இஞ்சி, துளசி, கருப்பு மிளகு, அதிமதுரம், மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து, பெரியவர்கள் ஒரு நாளைக்கு, இரு முறை, 50 மி.லி., - சிறியவர்கள், 20 மி.லி., பருகலாம்.

யோகா சிகிச்சை முறையில், வஜ்ஜிராசனம், பாஸ்த்ரிக பிராணாயாமம், பிராமரி பிராணாயாமம் மற்றும் கிரியா செய்யலாம். சூரிய குளியல், நீர் சிகிச்சை, அரோமா சிகிச்சை போன்றவற்றை, இயற்கை மருத்துவர்கள் அறிவுரையின்படி மேற்கொள்ளலாம்.

* யுனானி மருத்துவம்: இம்முறையில், பேஹிதனா, உன்னாப், சபிஸ்தான் வடிநீர் பயன்படுத்தலாம்

* ஹோமியோபதி: இம்மருத்துவ முறையில், அர்செனிகம் அல்பம் -- 30 சி, தினம் ஒரு வேளை வீதம், மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 

பிரையோனியா ஆல்பா, ரஸ் டாக்சிகோ டெண்ட்ரான், பெல்லடோனா ஜெல்சிமிமம் யூபடோரியம், பெர்போலியாடம் ஆகியவற்றை ஹோமியோ மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.

* குணமடைய: ஆயுர்வேத மருத்துவத்தில், தசமூலா கடுத்ரயம் கஷாயம், இந்து கந்தம் கஷாயம், வியாக்ரியாதி கஷாயம் ஆகியவற்றை சாப்பிடலாம். இது தவிர, மூலிகை சிகிச்சையை, டாக்டர் ஆலோசனைப்படி பெறலாம்

* சித்தா மருத்துவ முறையில், அமுக்ரா சூரணம் மாத்திரை இரண்டை, தினமும் இரு வேளை, உணவுக்கு பின் சாப்பிடலாம். நெல்லிக்காய் லேகியம், 5 முதல், 10 கிராமை, தினமும் இரு வேளை, உணவுக்கு பின் சாப்பிடலாம்

* மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போருக்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைப்படி, ஏற்கனவே கூறப்பட்ட, நோய் எதிர்ப்பு ஜூஸ் வழங்கலாம். ஆசனங்கள் கற்றுத் தரலாம்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive