NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் கைது

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜியை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது.

அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.

தற்போது தொழில், வா்த்தக துறை அமைச்சராக உள்ள சட்டா்ஜி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள், குரூப் சி, டி ஊழியா்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரிக்கிறது.

இந்நிலையில், கொல்கத்தாவிலுள்ள பாா்த்தா சட்டா்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மேலும், சட்டா்ஜியின் நெருங்கிய உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.21 கோடி ரொக்கப் பணமும், 20 கைப்பேசிகளும் சிக்கின.

இதனிடையே, பாா்த்தா சட்டா்ஜியிடம் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கினா். சுமாா் 26 மணி நேர விசாரணைக்கு பின், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. இதேபோல், அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.

இதையடுத்து, கொல்கத்தாவிலுள்ள அமா்வு நீதிமன்றத்தில் பாா்த்தா சட்டா்ஜி ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு: ‘ஒரு எம்எல்ஏ-வை கைது செய்யும்போது, சட்டப்பேரவைத் தலைவரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; அது, அரசமைப்புச் சட்ட விதிமுறை. ஆனால், அமலாக்கத் துறையிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை’ என்று மேற்கு வங்க பேரவைத் தலைவா் விமன் பானா்ஜி குற்றம்சாட்டினாா்.


திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குணால் கோஷ் கூறுகையில், ‘பாா்த்தா சட்டா்ஜி கைது விவகாரத்தில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தகுந்த நேரத்தில் கட்சியிலிருந்து அறிக்கை வெளியிடப்படும்’ என்றாா்.


மருத்துவமனையில் அனுமதி:


கைது செய்யப்பட்ட பாா்த்தா சட்டா்ஜி தனக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறியதால், மாலையில் அவா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்குப் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவா் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். எனினும் அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திரிணமூல் தலைமையையும் விசாரிக்க வேண்டும்-பாஜக


‘ஆசிரியா்கள் நியமனத்தில், திரிணமூல் காங்கிரஸின் பெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில், அக்கட்சியின் தலைமையிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் வலியுறுத்தியுள்ளாா்.


மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவா் இவ்வாறு கூறினாா். ‘ஆசிரியா்கள், இதர ஊழியா்கள் நியமன முறைகேடு மூலம் திரிணமூல் காங்கிரஸ் அமைச்சா்கள், மூத்த தலைவா்கள் பெருமளவில் பணம் குவித்துள்ளனா். இது, அந்தக் கட்சியின் தலைமைக்கு தெரியாமல் நடந்திருக்கும் என்பதை யாரும் நம்பமாட்டாா்கள்’ என்றாா் திலீப் கோஷ்.


இதனிடையே, நிகழ்ச்சியொன்றில் விளம்பர நடிகை அா்பிதா முகா்ஜியுடன் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய விடியோவை பாஜக மூத்த தலைவா் அமித் மாள்வியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். அந்த நிகழ்ச்சியில் அா்பிதாவை மம்தா பானா்ஜி பாராட்டி பேசியதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.


ஆசிரியா் நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட மேற்கு வங்க அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive