Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்


           "சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.

              முந்தைய, தி.மு.க., ஆட்சியில், சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாடத்திட்டம் வலுப்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டன. எனினும், "சமச்சீர் கல்வி பாடத்திட்டம், முந்தைய மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டங்களுக்கு நிகராக இல்லை. தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும்" என, தனியார் பள்ளிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகின்றன.

             இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகளவில் துவங்கப்பட்டு வருவதையும், தனியார் பள்ளி நிர்வாகிகள் கோடிட்டு காட்டுகின்றனர். கடந்த, இரண்டு ஆண்டுகளில், 200 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சராசரியாக, ஆண்டுக்கு 50 பள்ளிகள் முதல் 75 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், புதிதாக முளைத்தபடி உள்ளன.

               சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வலுவாக இல்லாததால் தான், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் எண்ணிக்கை, அதிகரித்து உள்ளன என்றும், மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், எட்டாம் வகுப்பு வரை செயல்பட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, மெட்ரிக் இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

                        இது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், தரமாக இல்லை என்ற, தனியார் பள்ளி நிர்வாகிகளின் வாதம் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில், தற்போது 3,737 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, அடுத்த, மூன்று ஆண்டுகளில் 4,000த்தை தாண்டிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                         இது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டம், தரமாக உள்ளது. அதில், எவ்வித சந்தேகமும் இல்லை. கல்வி வியாபாரம் செய்பவர்கள் தான், இந்த திட்டத்தை குறை கூறுகின்றனர். தற்போதைய பாடத் திட்டத்தை, மேலும் வலுப்படுத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறோம்.

                சி.பி.எஸ்.இ., பள்ளியை துவங்க வேண்டும் எனில், பல லட்சம் ரூபாயை செலவழிக்க வேண்டும். ஆனால், மெட்ரிக் பள்ளியை, சில லட்சம் ரூபாய் செலவில், துவங்கி விடலாம். அதனால், மெட்ரிக் பள்ளியை துவங்குகின்றனர். ஆனாலும், காலப்போக்கில், மெட்ரிக் பள்ளியை, அப்படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக மாற்றி விடுகின்றனர். இப்படி, பல பள்ளிகள் மாறியுள்ளன." இவ்வாறு அவர் கூறினார்.

                    கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், "சமச்சீர் பாடத்திட்டத்தில் குறை இருந்தால், எப்படி இவ்வளவு பள்ளிகளை, புதிதாக ஆரம்பிப்பர்? எனவே, பாடத்திட்டத்தில் குறை என்று கூறுவது எல்லாம் பொய். பாடத்திட்டம், தரமாகவே உள்ளது. வரும் ஆண்டுகளில், பாடத்திட்டத்தின் தரம், மேலும் உயரும்" என, தெரிவித்தன.

               மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து பிரின்ஸ் கஜேந்திரபாபு குறிப்பிட்டதாவது: "ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், நந்தகுமார், மாவட்ட அளவில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல், மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், பிளஸ் 1 சேர்வதற்காக, தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை, தடுத்து நிறுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்களை, அரசு பள்ளிகளிலேயே, பிளஸ் 1 சேர வைத்து, அவர்களுக்கு, மாவட்ட அளவில் உள்ள சிறந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, பாடம் நடத்த, ஏற்பாடு செய்துள்ளார்.

                மேலும், மூன்று மாணவர்களுக்கும்,சாப்பாடு, அவர்கள், பள்ளிக்குச் சென்று வர, போக்குவரத்து வசதி என, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்குச் செல்வதை தடுத்து நிறுத்தி உள்ளார்; இது, வரவேற்கக் கூடியது." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

                பொதுவாக, அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்களை பெறும் மாணவ, மாணவியரிடம், "இலவசமாக, தரமான கல்வி தருகிறோம்" எனக் கூறி, அப்படியே, தனியார் பள்ளி நிர்வாகிகள், அழைத்துச் சென்றுவிடுவர். நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை, மேலும் மெருகேற்றி, மாநில அளவில், "ரேங்க்" பெற வைத்து, பள்ளியை, விளம்பரப்படுத்தி விடுகின்றனர். இதற்கு, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், "செக்" வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

                    இதே பாணியை, மற்ற மாவட்ட கலெக்டர்களும் பின்பற்றினால், வரும் ஆண்டுகளில், பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் பல்வேறு இடங்களை, அரசு பள்ளி மாணவர்களே பிடிப்பர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive