NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு!


     எளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். 'கோவேறு கழுதைகள்', 'செடல்', 'மண்பாரம்' எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார்.

         அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இமையம் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே கொடுக்கும் கலகக் குரல் ஆசிரியர்களோடு, கல்வித் துறையோடு, பெற்றோர்களோடு என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடனும் உரையாடுகிறது.

அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரி களோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப் படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.

அப்படியென்றால் அரசு முக்கியமான காரணம் இல்லை என்கிறீர்களா?
நிச்சயமா அரசுதான் முக்கியமான காரணம். கல்வி அமைச்சர் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்தார்ங்கிற செய்தியைப் படிச்சு எத்தனை வருஷங்கள் இருக்கும் ஞாபகப்படுத்திப்பாருங்க. அட, தொடக்கக் கல்வி இயக்குநர், அரசு செயலர்கள்கூட பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்குப் போறதில்லையே? ஆசிரியர்களுக்கு பய உணர்வு இல்லை. அதிகாரிகளுக்கும்தான். அரசு எதுவும் செய்யாது, நிர்வாகம் எதுவும் செய்யாதுங்கிற நம்பிக்கை. அதுதானே உண்மையும்?

தனியார் பள்ளிகள் பெருக்கத்துக்கு எது முக்கியக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?
ஆங்கில மோகம்.

ஆங்கில மோகம் மட்டும்தானா காரணம்? தனியார் பள்ளிகளைப் பெற்றோர்கள் சும்மா நாடிப்போக வில்லையே? ஓரளவுக்கேனும் அங்கு உத்தரவாதப் படுத்தப்படுகிறது இல்லையா?
ஆங்கில மோகம் முக்கியமான காரணம். கல்வியில மட்டும்தான் மோகம் இருக்குன்னு சொல்ல முடியாது. நம்மோட நடை, உடை, பாவனை, பேச்சு, செயல், வாழ்க்கைமுறை எல்லாத்திலுமே ஆங்கில மோகம் இருக்கு. தன்னோட குழந்தை தாய்மொழியில பேசறத விரும்பாத தாய்மார்கள் இன்னைக்குப் பெருகிட்டாங்கங்குறதுதான் உண்மை. கொடுமை என்னன்னா தனியார் பள்ளிகள்ல படிக்குற புள்ளைக்கு ஆங்கிலமும் தெரியலை; தமிழும் தெரியலை.
உலகத் தரமான கல்வியைக் கொடுக்குறோம்னு சொல்ற தனியார் பள்ளிகள்ல எத்தனை பேருக்கு முறையா ஆங்கிலத்தில பேச தெரியும்? ஒரு கடிதம் எழுதத் தெரியும்? மொதல்ல உலகத் தரம்னு சொல்லி விளம்பரப்படுத்துறாங்களே அப்படின்னு ஒண்ணு இருக்கா? எல்லாம் கல்வியைத் தவறான பொருள்ல புரிஞ்சுகிட்டதால ஏற்பட்ட விளைவு.

ஆனால், நடைமுறையில் ஆங்கிலத்துக்கு என்று சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது?
சர்வதேச அளவுல கல்வியாளர்கள், உளவியல் அறிஞர்கள் எல்லாருமே தாய்மொழி வழிக்கல்விதான் சிறந்ததுன்னு சொல்றாங்க. ஒரு விஷயத்தைப் பிற மொழியில படிச்சிப் புரிஞ்சிக்கிறதைவிட தாய்மொழியிலதான் எளிதா புரிஞ்சிக்க முடியும்ன்னு சொல்றாங்க. அது அறிவியல்பூர்வமான உண்மையுங்கூட. ஆங்கிலம் நமக்கு எதிரியில்லை. அரசுப் பள்ளிகள்ல படிக்குற புள்ளைங்க ஆங்கிலம் பேசுறது இல்லையா என்ன? ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்.
ஆங்கிலம் ஒரு மொழி; அவ்வளவுதான். அதுவே, அறிவு இல்லை. எந்தச் சமூகத்திலேயும் திறமைக்குத்தான் முன்னுரிமை. பேசுற மொழிக்கு இல்லை. ஆங்கிலம் தெரிஞ்சாலே நாம அறிவாளி, நமக்கு எல்லாம் கிடைக்கும்னு நாம நம்புறது நம்மளோட கற்பனை. காலனியாதிக்க அடிமை மனோபாவத்தோட வெளிப்பாடு.

உலகமயமாக்கச் சூழலில் ஆங்கிலம் இல்லா விட்டால் பிழைக்க முடியாது என்ற கூற்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதே?
ஆங்கிலம் தெரிஞ்சாதான் உலகத்துல பிழைக்க முடியும்ன்னு நம்புற மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. இன்னைக்கு உலகத்தில தொழில்நுட்பத்திலேயும் பொருளாதாரத்துலேயும் மேலோங்கி இருக்கிற ஜப்பான்ல, சீனாவில இப்படிச் சொன்னீங்கன்னா சிரிப்பாங்க. அங்க எல்லாமே தாய்மொழியிலதான் படிப்பு. இந்தியாவுல தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் அப்படியொரு பொய்யைப் பரப்புறாங்க. காரணம், அதுலதான் அவுங்க பிழைப்பு இருக்கு!

அப்படியென்றால், எது உண்மையான கல்வி என்று சொல்கிறீர்கள்?
தெரிஞ்சுக்குறது. சுய சிந்தனையை வளர்த்துக் குறது, சமூகத்தைப் புரிஞ்சிக்குறது, சமூகத்தோட இணைஞ்சு வாழக் கத்துக்குறது, அறிவியல் மனப்பான்மையை, வரலாற்று மனப்பான்மையை வளர்த்துக்குறது, இயற்கையைப் புரிஞ்சுக்குறது, இயற்கையோட தன்மைக்கேற்ப வாழ, பழகக் கத்துக்குறது... இதெல்லாம்தான் கல்வி.

எந்த வகையில் சமூகத்தைப் படிக்க அரசுப் பள்ளிகள் முக்கியம் என்கிறீர்கள்?
ஒரு குழந்தைக்கு இடம் எவ்வளவு முக்கியம்னு உளவியலாளர்கள்கிட்ட கேளுங்க சொல்வாங்க. ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கூடமும் குறைஞ்சது, பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைஞ்சிருக்கு. இட வசதி, வெளிச்சம், காற்றோட்டம் உள்ள இடமா இருக்கு. கல்வி ஒரு உரையாடல். அரசுப் பள்ளிக்கூடங்கள்லதான் மாணவருக்கும் ஆசிரியருக்குமான உரையாடல் சாத்தியம். சமூகங்கிறது பல முகங்களை, பல குரல்களை உள்ளடக்குனது இல்லையா, அப்படிப் பல முகங்களையும் குரல்களையும் அரசுப் பள்ளிகள்லதானே பார்க்க, கேட்க முடியுது?
அரசுப் பள்ளிக்கூடங்கள்ல பிரச்சினைகள் இல்லாமல் இல்ல. ஆனா, தனியார் பள்ளிகளைவிட மோசம் இல்லை. அரசுப் பள்ளிக்கூடங்களோட ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு உதாரணம்தானே அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும்? அட, நீங்களும் நானும் எங்கே படிச்சு வந்திருக்கோம்?

நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள். ஆனால், ஓர் ஆய்வு சொல்கிறது… அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளில் 70% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்று. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
நீங்க சொல்றது 100% உண்மை. பெரிய வெட்கக்கேடு இது. தன்னையே கேவலப்படுத் திக்கிறோம்ங்கிற அறிவுகூட இல்லாமதான் இந்த வேலையைச் செய்யுறாங்க. மொதல்ல அரசுப் பள்ளியைப் புறக்கணிச்சது, தரமில்லைன்னு சொன்னது, தனியார் பள்ளிகளை உருவாக்குனது, எல்லாமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அரசுப் பள்ளி வீழ்ச்சிக்கு ஆசிரியர் சமூகம் முக்கியமான காரணம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்தப் போக்குக்கு அப்படி என்னதான் காரணம்? ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா?
ஆமாம், நானும் ஆசிரியர்தான்; என் மனைவியும் ஆசிரியர்தான். ரெண்டு பேரும் சேர்ந்து மாசம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். நூறு ரூபாய்க்கு இந்த நாட்டுல மக்கள் எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு நேர்ல போய்ப் பார்த்தோம்னா நாங்கள்லாம் பிரச் சினைங்கிற வார்த்தையையே உச்சரிக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கு அப்படி என்ன பிரச்சினை? உண்மையைச் சொல்லணும்னா அதிக சம்பளம் வர்றது பெரிய பிரச்சினை.
மனை வாங்குறது, வீடு கட்டுறது, வாடகைக்கு விடறது, வட்டிக்கு விடறது, நாட்டுலேயே எது சிறந்த பள்ளி, கல்லூரின்னு விளம்பரம் வருதோ அதுல கொண்டுபோயி தங்களோட பிள்ளைகளைச் சேர்க்குறது, மேலும்மேலும் வருமானத்தைப் பெருக்கிக்க யோசிக்குறது இதெல்லாம் அடுத்தடுத்த பிரச்சினைகள். நான் கேட்டுக்கிறதெல்லாம் ஆசிரியப் பணியைக் கடவுளுக்கு அடுத்த நிலையில வைச்சுப் பார்த்தெல் லாம் நாம நடந்துக்க வேணாம், வாங்குற சம்பளத்துக்காகவாவது உண்மையா உழைங்கங்குறதுதான்.

சரி, அரசுப் பள்ளிகளை எப்படி மீட்டெடுப்பது?
அரசுப் பள்ளிகள மீட்டெடுக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை. அரசு நெனச்சா ஒரு வருஷத் துல சரி செய்ய முடியும். மக்களாலேயும் மீட்க முடியும். அரசுப் பள்ளி பொதுச் சொத்து. அதைப் பாதுகாக்கிறது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை; இலவசமாக் கல்வி கெடைக்கும்போது-ஏன் பணம் கொடுத்துவாங்கணுங்கிற எண்ணம் உருவாகணும். ஆசிரியர்களாலேயும் முடியும். இன்னைக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவமா செய்யுறவங்க இருக்காங்க. அவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த அமைப்பை அழிஞ்சுட விட மாட்டாங்க.

சரி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ… படிப்புதான் சோறு போடும் என்ற எண்ணத்தையும் கல்வியைப் பிழைப்புக்கான கருவியாகப் பார்க்கும் மனோபாவத்தையும் எப்படி மாற்றுவது?
எல்லாத் தொழிலுமே முக்கியம்தான். மருத்துவர் ஒரு சமூகத்தில் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு விவசாயி முக்கியம். ஆனா, இது ஏன் நமக்கு உறைக்கலை? மருத்துவரும் பொறியிய லாளரும் மட்டும் ஒரு சமூகத்தில் இருந்தா போதுமா? அவுங்க சோறு எப்பிடிச் சாப்பிடுவாங்க? தொழில்ல ஏற்றத்தாழ்வு இல்லங்கிற எண்ணம் வந்தா-நமக்கு படிப்பு மட்டுமே சோறும் போடும்ங்கிற எண்ணம் வராது. கல்விங்குறது அறிவை விருத்திப்
பண்ணிக்குறது. எந்தத் தொழிலுக்கு நாம போனாலும் நாம படிக்குறது ஏதோ ஒரு வகையில உதவத்தான் செய்யும். அதுக்காகப் படிப்பைப் பிழைப்புக் கருவியா மாத்திடுறது பிள்ளைகளைப் பணம் சம்பாதிக்குற இயந்திரமாக்குறதுக்குச் சமம். இந்த எண்ணத்தை மாத்துற வேலையையும் நாம பள்ளிக்கூடத்துலேர்ந்துதான் ஆரம்பிக்கணும்!
The Hindu




14 Comments:

  1. சார் அவங்களுக்கு அடிப்படை கட்டமைப்பு இல்லையாம். (அதுதான் இந்த கிளாஸ் ரூம் . கழிவறை ) இது இல்லாததால் தான் தனியார் பள்ளிஇல் அவங்க குழந்தைகள படிக்க வெக்கராங்கலாம் . நீங்க இந்த டாரத்தி அப்டின்னு ஒருத்தங்க எழுதுனத படிக்கலையா? அப்பறம் அவங்க ஸ்கூல்ல பசங்க எல்லாம் கெட்ட வார்த்தைகளா பேசரான்கலாம் அதனாலதான் தனியார் பள்ளிஇல் அவங்க குழந்தைகள படிக்க வெக்கராங்கலாம். இதுக்கு கருத்துசொல்ல நெறைய பேர் வந்தாங்க ஆமா!!!! ஆமா!!!! அப்டின்னு சொல்ல.இவங்களுக்கு வெக்கமே இல்ல. அடிப்படை கட்டமைப்பு இல்லாத எடத்துல இவங்க மட்டும் ஏன் வேலசெய்யணும். சம்பளம் கெடைகாதேனா? உண்மைய சொல்லனும்னா இவங்களுக்கு தனி மனித ஒழுக்கமே இல்ல அப்பறம் எப்டி ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்குவாங்க. ( ஆட தெரியாதவளுக்கு வீதி கோணையாம் ) உண்மைலேயே இந்த உலகத்துல தீவிரவாதியா இருக்கரவங்கலகூட திருத்திரலாம் ஆனா இந்த சமுதாய ( அலட்சிய ) வியாதிய பரப்புற வாத்தியார திருத்தமுடியாது. தன்னோட முடிவ நாசா விஞ்ஞானி தப்புன்னு சொன்னா அவனையே குத்தம் சொல்லுவாங்க ( அவனுக்கே இவங்க தான் சொல்லிகொடுதாங்கலாம் அதனால தான் ) இவங்க வாங்கற சம்பளத்துல அந்த குழந்தைகளுக்கு கொஞ்சம் பணம் போட்டு இத செய்யமுடியாதா? இல்ல இந்த பிரச்னை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமா மக்கள் கிட்ட நன்கொட வாங்கி அத செய்ய முடியாதா? ( அவங்க தேவைக்கு சில தலைமை ஆசிரியர்கள் பசங்க உதிவி தொகைய கூட திருடினாங்க, ஒவ்வொரு மாசமும் பொய் கணக்கு காட்டி ஸ்கூல் பணத்த திருடுறாங்க. ஸ்கூல் லேப்டாப் எடுத்துகிட்டு போய் வீட்டுல அவங்க பசங்க கேம்ஸ் வேலையாட குடுக்கறாங்க. இதெல்லாம் நான் சொல்லல தினசரி பேப்பர்ல படிக்கிறதுதான் தெரிஞ்சே இவ்ளோ? தெரியாம ? ) கர்ணனுக்கு சாகர நேரத்துலயும் கொடைகுணம் போகல உயிரையே கொடையா கொடுத்தான். நீங்க மாட்சிங் ப்ளௌஸ் வாங்கறது, நீங்க எடுக்கும்போது நல்லா இருக்கற( ஒழுங்கா இத இங்க செய்யகூடாதுன்னு நெனைக்கிற ஆசிரியர் ) யாராவது எடுக்கலைனா அவங்கள மட்டமா பேசறது. இந்த சமூகத்த நாசாமாக்கற நீங்க எல்லாம் ஒரு க்ரூப்ப இருந்துகிட்டு தனியா உங்க க்ரூப்ல ஒட்டாதவங்கள ஜாதி அது இதுன்னு புரளிய கேளப்பிவிடறது. உண்மைலேயே நான் சொல்றது தப்பு செய்றவங்களுக்கு ஒறைக்கும் அதனால என்ன திட்டுவீங்க. நீங்க காந்தி மாதிரி இல்லனாலும் அந்த காந்தியபத்தி சொல்லிகொடுக்கரவங்க அப்டின்னு நெனைசாவது கொஞ்சமாவது நல்ல எண்ணத்தோட வேலை செய்ங்க. இது வேலை இல்ல வரம் கொடுக்கறது. அந்த சாமிமாதிரி வேலை. உங்கள நம்பி பலஜீவன்கள் அறிவு பசியோட இருக்குது அந்த ஜீவன்களுக்கு நாம பசியோட இருந்தாலும் ( வறுமை . (அரசு பள்ளி ஆசிரியரான உங்களுக்கு ஏன் வரபோகுது) ) பசியாத்தறது நம்ம கடமை.


    நன்றி. சிவா

    ReplyDelete
  2. இதற்கு ஒரே ஒரு முடிவுதான். அரசுப்பள்ளியில் படித்து மேல்படிப்புக்குப்போகும் மாணவர்களுக்கு 50 % இட ஒதுகீடு அல்லது பொறியியலில், மருத்துவத்தில் அரசுக்கல்லூரியில் 100% இடமும் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்குத்தான் என அரசாணை வரட்டும். அதன்பிறகு நிலைமையே தலைகீழ்தான்.

    ReplyDelete
    Replies
    1. epldi sir neenga sonna madhiri GO poduvarkal? thaniar pallikalai ookkuvippadhe GO podakkudia adhikarikalum arasialvathikalum thane?Thaniar pallikal ivarkalukkuATM madhiri enave neengal sonnamadhiri GO edhirparppadhu wast

      Delete
  3. வரும் நாள் அதிக தொலைவில் இல்லை. அரசு பள்ளிகள் ,அதுவும் தொடக்கப்பள்ளிகள் மூடிக்கொண்டே வரும் நிலையில் உள்ளது. உயர் ,மேல்நிலைப்பள்ளிகளும் அப்படித்தான் எதிர்காலத்தில் இருக்கும். ஏற்கனவே 15 % கிராமப்புற அரசுப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு இருந்தது. அம்மா நினைத்தால் ஒரே ஒரு நொடிதான் எல்லாம் சாத்தியமே. எடுத்துக்காட்டு இணையதள சாதி, இருப்பிட,வருமானச்சான்றுகள், வில்லங்கச்சான்றுகள் எனவே இதுவும் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  4. ஏன் கல்வியை வைத்து சாதியை பிரிக்கிறார்கள் அரசுப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர் களுக்கு ம் கல்வி உதவி த தொகை வழங்கலாம் அல்லவா இன்று அரசியலை முதலில் சரி செய்யுங்கள் அதை சொன்னால் அரசியல் ஒரு சாக்கடை என்று தப்பித்து கொள்கிறார்கள் ஏன் ஆசிரியர் கள் மட்டுமா அரசு சம்பளம் வாங்க குகின்றனர் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் சொல்ல வேண்டியது தங்களின் கடமையல்லவா

    ReplyDelete
  5. கோபம் வேண்டாம் நண்பரே ! அவர்கள் சொல்லுவது நீங்கள் கற்பிக்கும் பணியில் உள்ளீர்கள் என்பதால்தான்.வேறு ஒன்றுமில்லை. இந்நிலைக்கு அரசுப்பள்ளி ஆசிரியர் மட்டும்தான் காரணமல்ல.தாசில்தார், மாவட்ட ஆட்சியர், அனைத்து ஊழியர்களும் அரசு பள்ளியில் சேர்க்கட்டும், சேர்க்க வேண்டும். அரசுப்பள்ளி ஒன்றும் தரங்கெட்டுப்போகவில்லை. சில வசதிகள் இல்லாமல் இருக்கலாம். இவர்கள் வேலைக்கு வருவதற்கு முன்னால் எப்படிபட்ட வசதியுடன் இருந்தார்கள் என நினைத்துப்பார்த்தால் அரசுப்பள்ளியை கேவலமாக பார்க்கமாட்டார்கள்.

    ReplyDelete
  6. தம்பிவுளா,கெவுர்மென்ட் ஸ்கூல் பயலுவ தண்ணி அடிச்சிட்டு பள்ளி வருவது உனக்கு தெரியுமா ?பான்பராக் போட்டுகினு வகுப்பில் உக்கார்ந்து இருப்பது தெரியுமா ? வகுப்பிலேயே செல்போனில அது பார்ப்பது உனக்கு தெரியுமா ?இவனுல கண்டிச்சா உனக்கு தண்டனை உண்டு தெரியுமா ? ...அதனால் ..?

    ReplyDelete
  7. அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை . ஆனால் எப்போது அரசியல் தலையீடு பள்ளிக்குள் நுழைந்ததோ , மாணவர்களை கண்டிக்க கூடாது , திட்டக் கூடாது , ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை எந்த மாணவர்களையும் பெயில் பண்ண கூடாது என்று நிபந்தனைகளை அரசு கொண்டு வந்ததோ அப்போதே அரசுப்பள்ளிகளில் தரம் குறைந்துவிட்டது எனலாம் . இதை பெற்றோர்களும் , கல்வியாளர்களும் , கல்வித்துறையும் எப்போது உணருகிறதோ அப்போது தான் கல்வியும் மாணவர்களும் உருபடும் . அரசு மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களை வழங்குவிதில் தவறில்லை ஆனால் யாருக்கு வழங்கவேண்டும் என்றால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வழங்கலாம் . அதை விட்டு விட்டு எல்லோருக்கும் இலவசமாக கொடுத்து அதோடு மதிப்பும் யாருக்கும் தெரியல மக்களோடு வரிப்பணமும் வீணாக போகிறது . எப்போதுமே இலவசமாக கிடைக்கற எந்த பொருளுக்கும் மதிப்பு கிடையாது என்பது அனைவரும் அறிந்தது . வெளிப்படையாக சொன்னால் மறைமுகமாக வருங்கால சமுதாயம் சீரழிக்கப்பட்டு வருகிறது . கல்வித்துறையின் இந்த செயல்பாடு எப்போது மாறுமோ கடவுளுக்கு தான் வெளிச்சம் . நானும் ஒரு ஆசிரியர் என்பதால் மனம் நொந்து சொல்கிறேன் . அதற்கு காலம் தான் பதில் சொல்லனும் .

    ReplyDelete
  8. sambalathukkaga poradum asiriyarkal en arasin ithu pondra thavarana rules i edhirthu poradakoodathu. muthalil kalvi 1 std muthal manavarkalin viruppapppadi kadaisi nilaivarai free aaga tharanum adhuvum thai mozhiyil. piragu en indha lanjam panathaasai yosiyungal

    ReplyDelete
  9. ஒவ்வொரு அரசு பள்ளிகளுக்கு அருகாமையிலுள்ள வேலையில்லா பட்டதாரி தன்னார்வலர்களை ஒரு குழுவாக சேர்த்து பஞ்சாயத்துக்கு 5 குழுக்களும், நகராட்சிக்கு 5 குழுக்களும் மாநகராட்சிக்கு 10 குழுக்களும் (அரசியல்வாதியல்லாத) சீர்திருந்த சிந்தனைவாதிகளை கொண்டு அமைத்து அவர்களிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அனைத்து நிகழ்வுகளை கண்காணித்து நேரடியாக சபீதா, இய்க்குனர், கல்வி அமைச்சர் , த்மிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு விடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஒவ்வொரு தினமும் கவ்னித்து குழுக்களை ஒவ்வொரு நாளும் மாற்றி அமைத்து ஆய்வு செய்தால் கண்டிப்பாக அரசு பள்ளிகளின் தரம் உய்ரும். ஆனால் பள்ளிகளில் எங்களை போல தாழ்த்தப்பட்டவர்களுக்கு தன்னார்வலராக சேர்த்து ஆய்வு பணியில் ஈடுபட அரசு ஆணைவழங்கி செய்ல்படுத்தினால் தனியார் பள்லீகள் நிலை தலைகீழாகும். அரசு யோசித்து செய்ல்படுத்தினால் நல்லது. வேலையில்லாத பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் ரூ 2500/- கொடுத்து கைகளை கட்டாமல் குறைகளை எடுத்துக்கூற ஒரு சந்தர்ப்பம் கொடுங்களேன்.முடியும் முடியும்.....

    ReplyDelete
  10. கருத்துக்கள் மிக அருமை. நீங்கள் அரசுப்பள்ளிகளைக்கண்காணிக்க வேண்டாம்.அது நன்றாகவே உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் உங்கள் சொந்தங்களை திருப்பிவிடுங்கள். அரசுப்பள்ளியில் படிக்கும் உங்கள் சொந்தங்களை அதாவது மாணவர்களை கண்காணியுங்கள்.தண்ணி அடித்தாலோ, பான்பராக் போட்டாலோ, கையில் செல் வைத்திருந்தாலோ செவினியில் பளார் என விடுங்கள். அனைத்தும் சரியாகும். இது செய்ய முனையும் போதே சாதி என்ற போர்வைக்குள் நுழைய நினைக்காதீர்கள். இதை செய்ய எவ்வித செலவும் தேவையில்லை.லேப்டாப் தேவையில்லை.நீங்கள் வேறு வேலைக்கு போய்கொண்டே இதை செய்வதால் உங்களுக்கு மதிப்பூதியமும் தேவையில்லை.இந்தப்பணியின் ஆத்ம திருப்தியே போதும். முயலுங்கள்.வெற்றி பெற வாழ்த்துக்கள். இப்படிக்கு நொந்து போய் உள்ள ஆசிரிய சமுதாயம்.

    ReplyDelete
  11. அம்மா பிரியங்கா !
    ஏன் நீங்களே தாழ்த்தப்பட்டவர் என தாழ்வு மனப்பான்மையுடன் உள்ளீர்கள்.உங்கள் கருத்தைப்பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத்தெரிகிறது. உங்கள் உறவினர் ஒருவர் அரசுப்பள்ளியில் பணிபுரிகிறார். அது ஆணோ, பெண்ணோ தெரியாது.அவர் நீங்கள் கூறுவது கண்காணிக்க வேண்டிய நிலையில் இருப்பார் என தெரிகிறது.அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்களும் அப்படித்தான் இருப்பர்கள் என்னும் உங்கள் கருத்து தவறானது.மாற்றிக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  12. (1) ஆசிரிய பெருமக்களே நீங்க சொல்றது இதுதான் பெரிய தப்புன்னு சொல்லறிங்க? உண்மைதான் இதுல பாதி நானும் பாத்திருக்கன். தண்ணி அடிச்சிட்டு பள்ளி வருவது ,பான்பராக் போட்டுகினு வகுப்பில் உக்கார்ந்து இருப்பது , வகுப்பிலேயே செல்போனில அது பார்ப்பது ,இவனுல கண்டிச்சா உனக்கு தண்டனை உண்டு தெரியுமா ? ...அதனால் ..? ............. நாங்கள் எங்களுடைய பொறுப்பை தட்டி கழிக்கிறோம் அப்டிங்கிரிங்க. மொதல்ல நம்ம படிசப்ப எப்டி இருந்தோம் அப்டின்னு கொஞ்சம் நெனச்சி பாருங்க. இந்த தப்புல 80% நாமளும் செஞ்சிருக்கோம்னு ஒத்துக்கங்க. உளவியல் என்ன சொல்லுது மாணவர்கள் இந்த பருவத்த சிக்கலான பருவம்னு சொல்லுது நீங்க மட்டுமில்ல எல்லா ஆசிரியர்களும் வேல வாங்குன உடனே மறுக்கிறது மறக்கிறது இந்த உளவியல்தான். அடிப்படை சரியாய் இருந்தா எல்லாம் சரியாய் வரும். ஆரம்ப கல்வி இங்க மோசமா இருக்கு ஏண்ணா அங்க இருந்துதான் இந்த அலட்சியம் ஆரம்பம் ஆகுது. நம்ம ஆசிரியர்கள் எல்லோருமே ஸ்மார்ட் போன் வெச்சிருக்கோம் அத பள்ளி நேரத்துல அவங்க முன்னாடியே பலமுறை பயன் படிதீனா அவனுக்கும் ஆசை வரும், நமக்கு போட்ட ரூல்ஸ நாம ஒழுங்கா கடைபிடிக்கணும் அப்பறம்தான் அடுத்தவங்களுக்கு புத்தி சொல்லணும். நாம இந்த ட்ரைனிங் கிளாஸ் போறோமே அங்க அப்டியே எல்லாரும் சொல்லிகுடுக்கறத மட்டும் கவனிக்கரமா? 100 பேர் போனா 80 பேர் போன நோன்றிங்க. கடனேன்னு ஒக்காந்து இருந்துட்டு வந்துடரம் எல்லாம் தெரிஞ்ச நாமலே இப்டி இருக்கும் போது பசங்கள குத்தம் சொல்ல நமக்கு மனசு கூசனும்.
    ஆசிரியரிடமும் தனி மனித ஒழுக்கம் கண்டிப்பா இருக்கணும் ( ஆனா இல்ல ).
    ஒரு பையன படிக்கவெச்சி பாடம் முடிஞ்சிரிசினு சொல்றது , பசங்கள நாம சாப்ட்ட தட்ட கழுவசொல்றது, அடிக்கடி கிளாஸ் டைம்ல போன்ல பேசறது. நான் சீனியர் நீ ஜூனியர் அப்டின்னு சக ஆசிரியர்களோட ஈகோ பாக்கறது.அவனே செய்யறதில்ல நான் ஏன் செயணும்னு நெனைகிறது. எதுமே கண்டுக்காம இருக்கிறது. எதிர் பாலினத்துமேல ஈர்ப்போட பசங்க முன்னாடியே வளியறது. கடமைய தட்டிகளிக்கறது.
    பள்ளிகூடத்த நாமலே மதிக்காம இருக்கறது. எந்த வேலையுமே ஈடுபாட்டோட செயினும் இல்லைனா அந்த வேலை பொழுதுபோக்குதான். இங்க ஆசிரியர் வேலையும் பொழுதுபோக்குதான் பலருக்கு. நீங்க சொல்ற காரணம் எல்லாம் சரிசெய்ய முடியறதே. உளவியல் ரீதியா நீங்க எல்லாருமே அலட்சிய நோய்க்கு அடிமை அபிடுனு சொல்லலாம். நாம வாங்கற சம்பளத்துக்கு இந்த உழைப்பு போதுமா? நீங்க செய்யற வேலைய அந்த படிக்க சொல்லற பையனே செய்வான். அ , க , ஞ , ச....... சொல்லிகொடுக்கரதொத ஒழுக்கமும் சொல்லிகொடுக்கனும் அதுக்குதான் நீங்க இருக்கீங்க?!.... 4 மணிக்குமேல நான் வேலையே செய்ய மாட்டன் அப்டினுதான் இருக்கீங்க. அதுக்கு மேலதான் வேல செய்ய தான் மத்தவங்கள விட உங்களுக்கு சம்பளம் அதிகமா தராங்க.

    ReplyDelete
  13. (2) பெற்றோர் ஆசிரியர் கழகம் அப்டின்னு ஒன்னு இருக்கே அத எத்தன முறை நாம கூட்டிருக்கோம். அப்டி செஞ்சதுல எத்தன பெற்றொர வரவெச்சி பிரச்சனைகள சொல்லி இருப்போம். நெனச்சி பாருங்க.நம்மல்ல பல பேருக்கு பசங்களோட பெற்றோர்கள தெரியவே தெரியாது. அப்பறம் எப்டி தெரியும் நமக்கும் தனியார் பள்ளிக்கும் உள்ள வித்தியாசம்.
    அவங்க எப்பவுமே மாணவர் - ஆசிரியர் - பெற்றோர் தொடர்பில இருப்பாங்க அதனால அங்க ஓரளவு எல்லாம் சரியாய் நடக்குது. ஆனா இங்க ஆசிரியர் - ஆசிரியர் தொடர்பு கூட( சம்பள பிரச்சனைகள் ) சம்பளத தவத்து இல்லையே ! உங்களுக்கு கடமைய தட்டிகளிக்கவே நேரம் சரியாய் போகுது. முடியும் அப்டினாதான் முடியும் இங்கதான் முடியும் அப்டிசொல்றதுக்கே முடியலையே. அதுஎல்லாம் அரசு செய்ய வேண்டியது அப்டின்னு இல்ல நேனைகிரிங்க அப்புறம் எப்டி உருப்படும்.
    நான் எல்லாம் கணக்கு பாடத்தையே படிச்சி காட்டுன வாத்தியார் கிட்ட படிச்சவன் சார்
    உங்களோட வகுப்புல இருக்கற பசங்களோட தனியாள் பதிவேடு எத்தன பேர் எடுத்து பராமரிக்கிரிங்க, நீங்க சொல்ற பசங்கள திருத்தறது சொம்ப சின்ன விஷயம். உங்களோடைய பள்ளி கட்டமைப்பை (மாணவர் - ஆசிரியர் - பெற்றோர் தொடர்பு ) சரிபண்ணுங்க. ஆசிரியர் மீட்டிங் போட்டு யாராவது ஒருத்தர் நல்லத எடுத்துசொல்லி எல்லா ஆசிரியருக்கும் புரியவைங்க. அவங்க எல்லோரையம் நல்லது செய்னும்கிற வட்டத்துக்குள்ள கொண்டுவாங்க இதுக்கு 10 நாள் வேஸ்ட் ஆனாலும் பரவாஇல்ல. கண்டிப்பா வாரம் ஒருநாள் சனிகிழமை எல்லா பெற்றோரையும் கூப்ட்டு பெற்றோர் மீட்டிங் வைங்க. அவங்க பசங்க எப்டி இருக்காங்கனு பக்குவமா எடுத்து சொல்லுங்க. ரொம்ப மோசம்னு நினைக்கிற பசங்களுக்கு உளவியல் மருத்துவர்கிட்ட காட்டி சரிபண்ணுங்க ( பெற்றோரையும் சேர்த்து ) . உளவியல் மருத்துவ முகாம் 3 மாதத்திற்கு ஒரு முறை பள்ளியில் நடத்துங்க ( பணம் எவன் தருவான் அப்டிங்கதிங்க? அவர்களிடமே கேட்டு பெறலாம் (வித்தியாசமான காரணம் சொல்லி வசூல் பண்ண தெரிஞ்சவங்கதான நாம. ( ஆசிரியர் தினம். நீச்சல்குளம் , கேள்வித்தாள். பாடப்புத்தகம் திரும்பபெருதல் etc ...............) ரொம்ப கஷ்டபடர குடும்பமா இருந்தா? (ஒரு பள்ளிக்கு குறைந்தபட்சம் 10- 15 பேர் இருக்கலாம் ) டீச்சர் எல்லாம் ஷேர் பண்ணி செய்யலாம். அதுல தப்பே இல்ல. (பசங்க தான் நம்ம இன்வெஸ்ட்மென்ட் அதனால) இப்டி செஞ்சா எந்த பெற்றோரும் எதிர்ப்பு சொல்ல மாட்டாங்க கண்டிப்பா நமக்கு உறுதுணையா இருப்பாங்க. ஒரு வருஷம் கஷ்டமா இருக்கும் அப்புறம் அதுவே சுழற்சி முறைல நாம இல்லைனாலும் நடக்கும். இங்க கடும் பாறையாய் உள்ள மாணவ சிற்ப்பத்த செதுக்கத்தான் ஆசிரிய சிற்பி வேண்டுமே தவிர! ஏற்கனவே செய்த சிற்பத்த துடைபதர்க்கு அல்ல. வாழ்நாள் முழுக்க அந்த மாணவர்கள் பெற்றோர்கள் உங்களை போன்ற ஆசிரியர் இருக்க வேண்டும் என் மேற்கோள் காட்டுவார்கள். அதுதான் ஆசிரியரின் உண்மையான வெகுமதி.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive